Sunday, February 27, 2005

வார்த்தகள்

பாலக்காடு மாவட்டம் பாலப்புரம் அருகே சினக்கத்தூர் பகவதி அம்பலத்தில் பூரம் உற்சவக் கொடியேற்றப்பட்டது.

எல்லா வருடமும் போலவே இந்த ஆண்டும், அண்ணாமலைப் புலவரும் அவருடைய மகனும் இசைக்குழுவினரும் பதினேழு தினங்கள் நடத்திய கம்பராமாயணம் தோல்பாவைக் கூத்தின் இறுதி நாளன்று இந்தக் கொடியேற்றம்.

கொடியேற்றப் பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழக்கப்படி 'அய்யய்யோ, அய்யய்யோ' என்று பெருங்குரலெடுத்துக் கூவினார்கள். பூரம் பரம்பில் வெடிகள் முழங்கின.

பிறகு, "அய்யய்யோ, தச்சுக் கொல்லுன்னே" (அய்யய்யோ, அடிச்சுக் கொல்றாங்களே) என்று அலறியபடி பூரம் பரம்பிலிருந்து குதித்துக் கீழே இறங்கி எல்லா திசையிலும் ஓடிப் போனார்கள்.

இந்த வாரம் நடைபெறும் சினக்கத்தூர் பூரம் திருவிழாவில் வழக்கப்படி முப்பத்தி மூன்று யானைகள் பங்கு பெறுகின்றன.

************************************************

கோழிக்கோடு மாவட்டம் கொண்டோட்டி அருகே கரிப்பூர் விமான நிலையத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரியான டாக்டர் ஏ.பி.ஹர்பனஹள்ளி வந்தார்.

விமானத் தாவளத்தின் ரன் - வே நீளம் அதிகரிப்பது சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை செய்ய பெங்களூரிலிருந்து கரிப்பூருக்கு பயணம் செய்திருந்தார் அந்த அதிகாரி.

விமான நிலைய அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்தனர். ரன் வே பிரச்சனை பற்றிக் கேட்ட அதிகாரியிடம் அவர்கள் "அதெல்லாம் முடிஞ்சு ரன் -வே விருப்பப்பட்டது போல் நீட்டி, விமானப் போக்குவரத்து எல்லாம் ஜோராக நடக்குதே" என்றார்கள்.

"அப்புறம் எதற்கு என்னை விசாரிக்க அனுப்பியிருக்காங்க?" என்று கேட்டபடி தன்னிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவை அவர்களிடம் நீட்டினார் ஹர்பனஹள்ளி.

அதை வாங்கிப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் நமுட்டுச் சிரிப்போடு அதை அவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள்.

"நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க சார்"

அவர்கள் புகார் மனுவில் போட்டிருந்த தேதியைக் காட்டிச் சொன்னார்கள்.

1995-ம் வருடம் கொடுக்கப்பட்ட புகார் அது.

************************************

மலைப்புரத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில், கட்சியின் மாநிலச் செயலராக மறுபடியும் பிணராயி விஜயன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஒரு நாள் முழுக்க நீண்ட வாக்கெடுப்பில், விஜயனுக்கு 452 வாக்குகளும், வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு 342 ஓட்டுகளும் கிட்டின. அச்சுதானந்தன் எதிர்பார்க்காத தேர்தல் முடிவாகும் இது. அடுத்த கேரள முதல்வர் பதவியில் இந்தத் தேர்ந்தெடுப்பு முடிவடையும் என்று தோழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டென்று தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான தேசாபிமானியின் ஆசிரியராக இருந்த பேராசிரியர் விஜயன் பதவி விலகினார். போராட்டம் எல்லாத் தளங்களிலும் தொடரும் என்று நிருபர்களிடம் சொன்னார் அவர்.

கட்சி மாநாட்டில் உரையாற்றிய அச்சுதானந்தன் போராட்டம் தொடரும் என்றார். பிணராய் விஜயன் போராட்டம் தொடரும் என்றார். போராட்டம் தொடரும் என்றார் தேசியச் செயலர் சீத்தாராம் எச்சூரி. தொடரும் என்றார் முதுபெரும் தலைவர் ஹர்கிஷன் சிங்க் சுர்ஜித். என்றார் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் கராட்.

கட்சி மாநாடு முழுவதும் கைரளி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டது.

Thursday, February 17, 2005

கல்லற துறந்நு

அருந்ததி ராயின் கேரளப் பின்னணியில் அமைந்த 'The God of Small Things' நாவலில் வயசான ஓர் அம்மணி வருவார். ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும், ஏதாவது உறவு சொல்லிக் கொண்டு முதலில் ஆஜராகி விடுவார் . இறந்தவரின் உடலுக்கு மிக அருகே நிற்பது, பிணத்தின் முகத்தில் தைலம் தடவுவது (இதை இவரே கொண்டு வந்திருப்பார்) என்று ரசித்துச் செயல்படுவார்.

சவங்களை மிக நேசிக்கும் நெக்ரோபிலியா இந்த அம்மாவுக்கு மட்டுமில்லை, கொஞ்சம் அதிகப்படியாகவே சராசரி மலையாள மனதில் இருக்கிறதா என்று எனக்கு வெகு நாளாகவே சந்தேகம் உண்டு.

மலையாளப் தினப் பத்திரிகையில் சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் சட்டென்று நினைவு வருவது ஒரு பக்கம் முழுக்க வெளியாகும் 'காலமானார்' விளம்பரங்கள் தான். படிக்க வசதியாக மாவட்ட வாரியாகக் கொடுத்திருக்கும் இந்தப் பக்கம் ஒரு நாள் கூட முழுக்க நிரம்பாமல் வெளியாகாது.

இது போதாதென்று 'துங்கி மரிச்சு' (தூக்குப் போட்டுத் தற்கொலை), புழயில் வீணு மரிச்சு, வேன் இடிச்சு மரிச்சு, குத்தேற்று மரிச்சு, விஷம் குடிச்சு மறிச்சு, தீ கொளுத்தி மரிச்சு, ஓட்டோவும் காரும் கூட்டியிடிச்சு மரிச்சு, பஸ்ஸில் நின்னு தெறிச்சு வீணு மரிச்சு, ஷோக்கேற்று மரிச்சு என்று அடுத்த பக்கத்தில் இரண்டு காலம் முழுக்க முழுக்கச் சாவுச் செய்திகள்.

போதாக்குறைக்கு பிரமுகர்களின் சாவுச் செய்தி. நகைச்சுவை நடிகர் ஜகதி ஸ்ரீகுமாரின் மாமியார் இறந்தது இந்த மாதிரி அண்மையில் வந்த பத்து வரி நியூஸ் ஐட்டம்.

இன்றைக்குப் பத்திரிகையைத் திறந்தால் இது -

திருவல்லா பக்கம் கவியூரில் வி.கே.குர்யன் என்பவர் ஆறு மாதம் முன்னால் இறந்து போனார். சவ அடக்கம் கவியூர் ஓர்த்தடோக்ஸ் சர்ச் சார்ந்த செமித்தேரியில் நல்லபடியாக நடந்தது.

அண்மையில் புஷ்பகிரி மருத்துவக் கல்லூரி நடத்திய ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள்களில் ஒரு பிணமும் உண்டு. பார்க்க வந்த யாரோ, அந்தப் பிணம் குரியனுடையது என்று சொல்ல, பரபரப்பான பத்திரிகைச் செய்தி ஆனதோடு, காவல்துறை விசாரணை ஜரூராகத் தொடங்கியது.

மெடிக்கல் காலேஜில் காட்சிப் பொருளானது குரியனின் உடல் என்றால், கல்லறைக்குள் இருப்பது யார்?

நேற்றைக்குக் காவல்துறை ஏற்பாட்டின் பேரில் ஓர்த்தடோக்ஸ் பள்ளி வளாகசெமித்தேரியில் குரியனின் கல்லறை மறுபடி திறக்கப்பட்டு, உள்ளே இருந்த உடல் வெளியே எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட எலும்புக் கூடுதான் அது. இனி டாக்டர்கள் பரிசோதித்து அது குரியன் தானா இல்லை வேறு யாராவதா என்று தெரிவிப்பார்கள்.

பத்திரிகைச் செய்தியில் என் கவனத்தை ஈர்த்த வரி இதுதான் - கல்லற துறக்குன்னது காணான் ஆயிரங்களாணு செமித்தேரிக்குச் சுற்றும் தடிச்சுக் கூடியது (கல்லறை திறக்கப்படுவதைப் பார்க்க ஆயிரக் கணக்கில் மக்கள் செமித்தேரியைச் சுற்றிக் கூடினார்கள்).

பின்குறிப்பு

வேம்ப நாட்டுக் காயல் என்று தலைப்பு வைத்ததே முக்கியமாகக் கேரள கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வுகளைப் பதிய உத்தேசித்துத்தான். குரியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

Sunday, February 13, 2005

மாம்பலம் டைம்சும் மைலாப்பூர் வக்கீலும் - 2

ராண்டார்கை எத்திராஜ் பற்றி எழுதும்போது, நாற்பதுகளில் சென்னைக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த பையர்ஸ் துரை பற்றியும் இன்னொரு பிரபல வழக்கறிஞரான வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார் பற்றியும் கூடக் குறிப்பிடுகிறார்.

மேற்படி பையர்ஸ் துரை வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது கோர்ட்டிலேயே தூங்கிவிடுவது வழக்கம் (வேலை பார்க்கும் இடத்தில் தூங்கினால் வேலை காலி என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு அப்போது வரவில்லை!).

ஸ்ரீனிவாச அய்யங்கார் லா வீக்லி பத்திரிகையில் புனைபெயரில் இதைக் கிண்டல் செய்து, பையர்ஸ் துரை 'wakeful attention'-ல் வழக்கு விசாரிப்பதாக விவரித்திருக்கிறார்.

நாற்பதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு பெயிலில் விடுப்பு வாங்கிக் கொடுத்தவர் வி.எல்.எத்திராஜ்.

நீதிமன்றம் விடுமுறை என்பதால், நீதிபதி பதஞ்சலி சாஸ்திரியாரின் மயிலாப்பூர் லஸ் பங்களாவில் வைத்தே அந்த விசாரணை நடந்தது. எதிராஜ் வெற்றிகரமாக பெயில் எடுத்துவிட்டாலும், சில நாள் கழித்து அரசு வழக்கறிஞர் (அப்போது க்ரவுன் ப்ராஸிக்யூட்டர் என்று குறிப்பிடுவார்கள்) பாகவதருடைய ஜாமீனை ரத்து செய்து அவரைத் திரும்பச் சிறையில் அடைக்க பிராது கொடுத்தார்.

வழக்கு இன்னொரு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அந்த நீதிபதி பையர்ஸ் துரைதான். பெய்ல் கேன்சல் ஆகக்கூடாது என்று இந்தத் தடவை வாதாட, பாகவதர் சார்பில் ஆஜரானவர் வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார்.

அய்யங்காரும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்தான். ஆனால் வேண்டாம் என்று பிராக்டிஸ்ஸ¤க்குத் திரும்பி விட்டார். காரணம் வேறு எதுவும் இல்லை - வருமானம் தான்.

அந்தக் காலத்தில் நீதிபதிக்கு மாதச் சம்பளம் மூவாயிரம் ரூபாய். ஆனால் வழக்கறிஞராக அய்யங்கார் சம்பாதித்தது மாதம் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் - அந்தக் காலத்திலேயே.

அய்யங்கார் பாகவதருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என்று மூன்று மணி நேரம் வழக்காடி முடித்ததும் நீதிபதி பையர்ஸ் துரை சொன்னார் - " இந்த மாதிரி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடக்கூடாது என்று சென்னை நீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறதே".

துரை குறிப்பிட்ட தீர்ப்பு, சாட்சாத் வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார் நீதிபதியாக இருந்தபோது வழங்கியதுதான் !

"கற்றுத் துறைபோகிய நீதிபதி (learned judge) ஒருவர் வழங்கிய தீர்ப்பல்லவா அது" என்று அய்யங்காரைப் பார்த்துக் கேட்டார் துரை.

அய்யங்கார் அசராமல் பதில் சொன்னார் - "அந்த நீதிபதி அப்படி ஒன்றும் கற்றுத் தேர்ந்தவர் இல்லை" (That judge was not that learned after all).

ஒரு விதத்தில் சுயவிமர்சனம் என்றாலும், இன்னொரு விதத்தில் நீதிபதி என்ற தனிநபரைக் குறித்த விமர்சனம் என்பதால், இது contempt of court ஆகியிருக்குமே!

மாம்பலம் டைம்சும் மயிலாப்பூர் வக்கீலும் - 1

மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் ராண்டார் கை வாராவாரம் எழுதிவரும் 'They made Madras' சுவையானது.

அதில் தற்போது அவர் எழுதிக் கொண்டிருப்பது குற்றவியல் சட்டத்துறையில் பெரும்புகழோடு விளங்கிய வழக்கறிஞர் வி.எல். எத்திராஜ் பற்றி. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் இவர்தான்.

ராண்டார்கை எழுத்திலிருந்து அங்கங்கே கொஞ்சம் மொழிபெயர்த்து -

கல்லூரியில் எத்திராஜ் அடியெடுத்து வைத்தபோது ஆங்கிலத்தில் தேர்ச்சி இல்லாமல் இருந்த காரணத்தால் வீட்டிலேயே வந்து அவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியரை அமர்த்தினார்கள்.

தினசரி பஸ்ஸை, டிராமைப் பிடித்து வந்து எத்திராஜுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்து மாதம் சொற்ப சம்பளமாக முப்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போன அந்த வாத்தியார் சில மாதங்களுக்குப் பிறகு அலுத்துப் போய் இந்தப் பையனுக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்பவே தூரம் என்று டியூஷன் எடுப்பதை முடித்துக் கொண்டார்.

ஆனாலும் தளராது படித்து எப்பாடும் பட்டு ஒருவழியாகப் பட்டதாரியானார் எத்திராஜ். அப்புறம் அதே மாதிரி சட்டத்துறையிலும் பட்டம் வாங்கிவிட்டார்.

அப்போதெல்லாம் மயிலாப்பூர் வக்கீல்கள் பலர் சிவில் லாயர்களாகப் பெரும்புகழ் அடைந்திருந்தார்கள். எத்திராஜ் அப்படி ஒரு வக்கீலுக்கு உதவியாளராக இருந்து தனியாக பிராக்டிஸ் ஆரம்பிக்க, கட்சிக்காரர்களைத்தான் காணோம்.
பிறகு எத்திராஜ் புரட்சிகரமான ஒரு முடிவு எடுத்தார்.

குற்றவியலான கிரிமினல் சட்டத்துறையில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதை உள்ளூர்ப் பிரமுக வழக்கறிஞர்கள் பலரும் கவுரவக் குறைச்சல் என்று நினைத்த நேரம் அது. இங்கிலாந்திலிருந்து வந்த துரைகளும், மும்பை பார்ஸி வக்கீல்களும்தான் சென்னை உயர்நீதிமன்றத்திலும், மற்ற கோர்ட்டுகளிலும் கிரிமினல் லாயர்களாக இருந்தார்கள்.

வருமானம் வராத சிவில் துறையை விட்டு எத்திராஜ் கிரிமினல் லாயரானார். அவ்வளவுதான். அப்புறம் அவர் காட்டில் மழைதான். குற்றவியல் வழக்குறைஞர்களில் மேதை என்று அவர் பெயர் வாங்கியபோது, அவருக்கு ஆங்கிலம் வசப்பட்டிருந்தது.

எத்திராஜுக்கு ஆங்கிலமே வராது என்று சொல்லிவிட்டுப் போன டியூஷன் வாத்தியார்? அவரும் புகழ்பெற்றுவிட்டார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பது அவர் பெயர். இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.

நான் அறியும் அசோகமித்திரன்

நான் அறியும் அசோகமித்திரன் (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் த்¢.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது.

அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே நான் முதலில் அறிந்திருந்தேன்.

எண்பதுகளில் தில்லியில் நான் வேலை பார்த்தபோது கணையாழிக்கும் தீபத்துக்கும் அங்கேயிருந்து கவிதை அனுப்புவது வழக்கம். அசோகமித்திரன் அப்போது கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

நான் எழுதிய சிறுகதை ஒன்று. 'வண்டி' என்ற பெயரில் கணையாழியில் பிரசுரமானது. (தேர் தொகுப்பில் உண்டு). அது வருடம் 84-ல் என்று நினைவு. கவிதையிலிருந்து உரைநடைக்குக் காலடி எடுத்து வைத்த நேரம். அச்சில் வந்த என் முதல் கதை அதுவாகத்தான் இருக்கும்.

அதற்கு முன்னால் எழுதிய சிறுகதையை தீபம் நா.பாவிடம் கொடுத்திருந்தேன். நான் எழுதிய கவிதையை எல்லாம் தீபத்தில் மறுக்காமல் பிரசுரித்த அவர் கதையைப் பற்றிக் கேட்டபோது மெல்லச் சிரித்தார். அது நா.பா டைப் கதை இல்லைதான். பின்னாளில் வீதி குறுநாவலாக நீட்சி அடைந்த அந்தக் கதையும் தேர் தொகுப்பில் உண்டு.

கணையாழிக்கு அனுப்பிய வண்டிக்கு ஒரு விபத்தும் நேராமல் அனுப்பிய இரண்டாம் மாதமே பிரசுரமானது. ஒரு குளிர்கால சனிக்கிழமை ராத்திரி, கரோல்பாக் அஜ்மல்கான் ரோட் பக்கத்து நடராஜன் மெஸ்ஸில் ராச்சாப்பாடு முடித்து, தமிழ்க் கடையில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு கணையாழி வந்தாச்சா என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டேன். வந்தாச்சு என்ற வழக்கத்துக்கு மாறான பதிலோடு கையில் கணையாழி பனியில் நனைந்த குழந்தையாக என் கையில். பிரித்த பக்கத்தில் வண்டி.

சிகரெட்டைத் தரையில் போட்டு அணைத்தேன். சன்னமான பனிக்காற்று. சுபாவமாகவே அழகான எல்லா பஞ்சாபிப் பெண்ணும் பேரழகியாகத் தெரியும் ராத்திரி வெளிச்சம். லிப்ஸ்டிக்கும், பிரம்மாண்டமான காதணிகளும் அணிந்த ஆரணங்குகள் அந்த ராத்திரிப் பனியில் கண்ணில் கனவு மிதக்க நிற்கும் ஒரு கெச்சலான மதராஸி இளைஞனை லட்சியமே செய்யாமல் அஜ்மல்கான் வீதி நடைபாதையில் இன்னும் லிப்ஸ்டிக்கும், தோடும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாங்கி முடித்து பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பானிபூரி, பஞ்சாபி வாசனைக்கு நடுவே காஷ்மிலான் ஸ்வெட்டரோடு என் வெஸ்பா ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி வண்டி முழுக் கதையையும் படித்து முடித்தபோது ஒரு வரிகூட சேதாரம் இல்லாமல் அச்சில் சுகப் பிரசவம் என்று தெரிய வந்தது. மிதமான வேகத்தில் ஸ்கூட்டர் விட்டுக்கொண்டு இந்தியா கேட், லோதி காலனி வழியாக லாஜ்பத்நகர் வரும் வரை கதை வரிகள் மனதில் வரிசை கலைந்து வந்தபடி இருந்தன.

லாஜ்பத்நகர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் வீடு. மேஜர் சாப் ஒருத்தருடைய வீட்டு முதல் மாடியின் தனிக்கட்டையாக வாசம். வீட்டில் மேஜருடைய வயதான அம்மா, மனைவி, சகோதரி என்று நானிஜி, மாதாஜி, பூவாஜி கவுர்கள். மற்றும் குல்வந்த் கவுர், வீரான்வாலி கவுர், அமர்ஜித் கவுர் என்று மேஜருடைய பெண்கள் பள்ளியிறுதியிலும் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பாங்க் ஆபீசர் சோக்ரா என்பதால் மட்டும் என்னை வாடகை வாங்கிக்கொண்டு முதல்மாடியில் குடிவைக்க ஏற்றவில்லை மேஜர். தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டான், அந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமாக நினைக்க முற்பட்டாலும் புஜபல பராக்ரமசாலிகளான கவுர்கள் வாஹே குரு என்று பையனை நிர்மா போட்டுத் துவைத்து பால்கனி கொடியில் காயப்போட்டு விடுவார்கள் என்று சர்வ நிச்சயமாகத் தெரியும் அவருக்கு.

வீட்டுக்குள் சிகரெட் பிடிக்காதே, வீட்டுச் சமையலறையில் தேங்காய் உடைக்காதே என்று அம்மா கவுர் போட்ட நிபந்தனையோடு (எனக்கு முன்னால் அங்கே இருந்த ஒரு தலைச்சேரி நாயர் குடும்பத்தோடு தினசரி தேங்காய் யுத்தங்கள் நடத்தி அலுத்துப் போயிருந்தார் அவர்), ராத்திரி பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு வந்து சேராவிட்டால் வாசல் இரும்புக் கதவு பூட்டப்படும் என்ற தடைச்சட்டமும் அமலிலிருந்தது.

தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவலை இல்லை. செண்ட்ரல் மார்க்கெட் பஞ்சாபி தாபாவும், லஜ்பத்நகர் தமிழ் மெஸ்ஸ¤ம், லோதி காலனி கர்னாடகா பள்ளி மெஸ்ஸ¤ம், போதாக்குறைக்கு யு.என்.ஐ காண்டீனும் இருந்தபடியாலும், இங்கெல்லாம் போய்க் கறங்கித் திரும்ப ஸ்கூட்டருக்குப் போடப் பெட்ரோல் அப்போது ரொம்பவே மலிவாகக் கிடைத்து வந்ததாலும், வீட்டில் சமையல்கட்டுக்குப் போவதே பியர் பாட்டில் மூடியை அகற்றிப் போடவும், பிரட் டோஸ்ட் செய்யவும்தான்.

சிகரெட் சமாச்சாரமும் கிட்டத்தட்ட ஒ.கேதான். சட்டமாக பால்கனியில் நின்று புகை விடாமல், எல்லாக் கதவையும் மூடிவிட்டு ஊதினால் புகை கீழே இறங்கி, தலைப்பா மாடிப்படியேறாது.

ஆனால், ராத்திரி பத்து மணி ஷரத்து கடைப்பிடிக்க கஷ்டமானது. வாரத்தில் இரண்டு தடவையாவது மீற வேண்டிப் போகும். மலையாள சலச்சித்ரோல்ஸவம், பெங்காலி படவிழா, மும்பையிலிருந்து குழு நாடகம் என்று கவுரவமான சாக்குகளும் இதற்குச் சில வேளை காரணமாகும்.

வண்டியை வெளியில் நிறுத்திவிட்டு, கம்பிக் கதவேறித் திருடன் மாதிரி உள்ளே குதித்து மாடிக்குப் போகும்போது கவுர்பெண்ணுகள் முதுகுக்குப் பின்னால் சிரிக்கிற மாதிரி பிரமை.

நான் தில்லிக்குப் போனது ஏக் துஜ்ஜே கே லியே வந்த நேரம். தேரே மேரே பீச் மே கைசா ஹை ஏ பந்தன் என்று எஸ்.பி.பி குரலில் பாடியபடி, எல்லாச் சுவரையும் கடந்து, கவுர்களில் ஒருத்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து, தினசரி லிப்ஸ்டிக்கும் முட்டையும்,மதர்ஸ் டயரி டோக்கன் பாலும் வாங்கி வந்து கொடுத்து, தலைப்பாக் கட்டிக் கொண்டு தில்லியிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது. (நல்ல வேளையாக மேஜர் குடும்பம் ரட்சைப் பட்டது).

கவுர் நினைவு இல்லாமல் கணையாழி நினைவில் அந்த ராத்திரியும் சுவரேறிக் குதித்து உள்ளே போனேன்.

நடு இரவில் ரஜாயைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்தபடி அசோகமித்திரனுக்கும், கஸ்தூரிரங்கனுக்கும் நன்றிக் கடிதம் எழுத உட்கார்ந்து எப்படித் தொடங்குவது, என்ன எழுதுவதென்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்தபடி கண்ணயர்ந்ததும், காலையில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏழு மணி ஷோவுக்கு நிசாமுத்தீனில் 'ஒரு கை ஓசை' போனபோது கூடக் கையோடு கணையாழியைக் கொண்டு போய் அரையிருட்டில் திரையில் அஸ்வினியும் பாக்யராஜும் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையைப் புரட்டி இன்னொரு தடவை வண்டி படித்ததும் நினைவு இருக்கிறது.

நான் தில்லியில் இப்படி படைப்பாளிக்கே உரிய, உரிய என்னது அது. ஆமா, படைப்பு தரும் கர்வத்தில், அளித்த திருப்தியில் திரும்பத் திரும்ப மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இன்னும் நாலு பாக்கெட் ·போர் ஸ்கொயர் சிகரெட் காலு கடையில் வாங்கிக் காலி செய்து கொண்டிருந்தபோது சென்னையில் என் வீட்டுக்கு அசோகமித்திரன் வந்திருக்கிறார். அப்பாவைச் சந்திக்க இல்லை. என்னைப் பார்க்கத்தான்.

(தொடரும்)

Wednesday, February 09, 2005

ஆசாத் எழுதிய புத்தகம்

முன்ஷி பிரேம்சந் எழுதிய சிறுகதையின் அடிப்படையில் சத்யஜித்ராய் இயக்கிய 'ஷத்ரஞ்ச் கே கிலாடி' படத்தின் இறுதிக் காட்சி.

ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளின் இறுதிக்காலம். ஆங்கிலேயத் துரைத்தனத்தை இந்தியாவில் நிறுவிய கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் லக்னௌ நகரை முற்றுகையிட்டு நவாப் வாஜித் அலி ஷாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருக்கின்றன. புறநகர்ப் பகுதியில் குதிரைக் குளம்பொலியும், தூசியும் எழுப்பியபடி அந்தப் படை கடந்து போக, லக்னௌ நகர அரசவைப் பிரபுக்களில் இருவர் சதுரங்க ஆட்டத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

"ராணிக்கு வழிவிட்டு ராஜா நகர்ந்துக்கலாம்"
அவர்கள் சதுரங்கப் பலகையில் கருப்பு-வெள்ளை ராஜாக்களை ஆங்கிலேயப் பாணியில் மாற்றிவைத்துக் கொண்டு சொல்வதோடு படம் முடிகிறது.

அரசியல், சமூக ரீதியாக ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய காலகட்டத்தை, அந்த நிகழ்வுகளின் பாதிப்பு ஒரு சிறிதுமின்றி சதுரங்க விளையாட்டில் கழிக்கும் பிரபுக்கள் பிரேம் சந்தின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்த சூழலும், அவுத் என்ற லக்னௌ அரசாட்சி பூமியின் நவாப் வாஜித் அலிஷாவும் முழுக்க உண்மை.

வாஜித் அலி ஷா ஒரு கவிஞர். தும்ரி என்ற கவிதை வகையில் புகழ்பெற்ற 'பாபுல் மோரா நய்ஹர் சோட்டோ ஜாயே' கவிதை அவருடையதுதான். திருமணமான பெண் தாய்வீட்டை விட்டு நாலு பேர் தோளில் ஏற்றிய பல்லக்கில் கணவன் வீட்டுக்குப் பிரிந்து செல்லும் துயரை சாமானியர்களின் வாக்கான போஜ்பூரி மொழியில் உருக்கமாகச் சொல்லும் அக்கவிதையை 'அக்தர்பியா' என்ற புனைபெயரில் எழுதியவர் அவர்.

கண் முன்னே சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சொந்த பூமியும் ஆட்சி உரிமையும் பறி போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாத அந்த அரசன் கவிதையிலும் நாட்டியத்திலும் தஞ்சம் புகுகிறான். தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அதே போன்ற ஒரு சூழலில் கர்னாடக இசையில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட சுவாதித் திருநாள் மஹாராஜாவுக்கும் நவாப் வாஜித் அலிஷாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
கவிதையும் இசையும் ஒரு தளத்தில் அவற்றைப் பிறப்பிக்கும் சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உருவாகிறது. தனிமனித, சமூக வாழ்க்கை தரும் மகிழ்ச்சியை, துயரத்தைச் சொல்லில், கானத்தில் இழைக்கிறது. இன்னொரு தளத்தில் அந்த வாழ்க்கையின் வாதனைகளையும் அது பிறப்பிக்கும் நம்பிக்கையின்மையையும் மறக்கத் தன்னில் அமிழ்ந்து போகச் சொல்லி அழைத்து அணைத்துக் கொள்வதும் இந்தப் படைப்பு மற்றும் நிகழ்கலை வடிவங்களின் இயல்பு.

கவிஞர் வாஜித் அலி ஷாவுக்கு தும்ரி. முகலாயப் பேரரசின் கடைசி சுல்தானான மற்றொரு கவிஞர் பஹதூர் ஷா ஸ·பருக்கு கஸல். முன்னவர் வங்காளத்துக்குக் குடிமாற்றப்பட்டு, லக்னௌ பற்றிய தன் கனவுகளோடு இறக்கிறார். பஹதூர் ஷாவோ பர்மாவுக்கு ஆங்கிலேய அரசால் நாடு கடத்தப்பட்டு, தாய்நாட்டு மண்ணை நினைத்துக் கஸலாக, கவிதையாக உருகியபடி மரிக்கிறார் -

ஹை கித்னா பத் நஸீப் ஸ·பர் த·ப்ன் கே லியேதோ காஸ் ஸமீன் பீ நா மிலே கூ-ஈ-யார் மே.

(இந்தப் பயணிக்குத்தான் எத்தனை துரதிர்ஷ்டம். அவன் இறுதியாக உறங்க அவன் பிறந்த மண்ணில்ஆறடி மண்கூடக் கிட்டவில்லை).

கஸலின் மக்தாவில் 'ஸ·பர்' என்று தக்காலூஸ் ஆகத் துயரப் பெருமூச்சோடு தன் புனைபெயரைக் கையப்பமிட்டு முடிக்கும் அந்தக் கிழவரின் துயரம் கம்பன் காட்டும் தயரதனின் புத்திர சோகத்துக்கோ, ஷேக்ஸ்பியரின் லியர் அரசனின் மகளைப் பறிகொடுத்த துயரத்துக்கோ கொஞ்சமும் குறைந்ததில்லை.

கவிதையும் இசையும் எதற்காக? நிகழ்காலத்தை மறந்து சுயமாக நிர்மாணித்துக் கொண்ட ஆசுவாசம் தரும் கற்பனை உலகுக்குக் கனவுகள் முன் செலுத்தத் தப்பித்து மிதந்து செல்லவா? நினைவின் வடிகால்களாகப் பரிணமித்துப் பெருகவா? மனதையும் சிந்தனைகளையும் உயர்த்தித் தன்னளவில் மேன்மையுற வழிசெய்யவா? துவண்டு கிடக்கிற ஓர் இனக்குழுவுக்குத் தனிவாசிப்பிலும், கூட்ட நிகழ்வு மூலமும் உத்வேகம் அளித்துப் பெரு மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கவா?

இவை ஒவ்வொன்றுக்காகவும் தான். எல்லாமும் தான். இவை எல்லாம் கடந்த வேறு தேடலும் கூடச் சாத்தியமே.
ஒரு பார்வையில் கவிதையும், இசைப் பாடலும் காலத்தின் சில கணங்களை உறைந்து போக வைக்கிறவை. வாஜித் அலிக்கும், பகதூர் ஷாவுக்கும், சுவாதித் திருநாளுக்கும் இந்தக் கணங்கள் விரும்பித் தேடிய யுகங்களாக நீண்டன. நாம் வாழும் காலத்தின் பரபரப்பான இயக்கத்துக்கு நடுவே நமக்கோ உறைந்து போன இக்கணங்கள் நிம்மதியான சிறு ஓய்வைத் தருகின்றன. அயர்வு நீக்குகின்றன. தெம்பளித்துத் தொடர்ந்து பயணப்பட வைக்கின்றன.

கஸலும் எல்லாச் சிறந்த இலக்கிய வடிவங்களைப் போல் மானுடம் பாடுகிறது. பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தப் பாரசீகச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத் துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது. சுருங்கச் சொன்னால், மானுடத்தின் பேர்பாதியான பெண்ணைப் பற்றி முழுக்க முழுக்க அமைந்த திணையும் துறையும் அது.

பாரசீகத்திலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டில் இங்கே வந்த கஸலின் சரித்திரத்தில் தென்னிந்தியாவுக்கும் முக்கிய இடமுண்டு. தக்காணத்தில் பிஜப்பூர், கோல்கொண்டா சமஸ்தானங்களில் தான் உருது கஸல் செழித்து வளர்ந்ததாக வரலாறு சொல்கிறது. கஸலில் மகாகவியாக விளங்கிய மிர்ஸா காலி·ப் கூட தன் வாழ்க்கையில் மிக முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும் வட இந்தியாவில் உருது கஸல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வாலி தக்கணியின் முயற்சிகளும் காரணம் என்றும் அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன.

இப்படி நல்லன எல்லாம் இங்கே இருந்து போனதுதான். இங்கே இருந்து ஊக்குவிக்கப்பட்டது தான்.

இங்கே இருந்து வளைகுடா நாட்டிற்குத் தொழில் நிமித்தமாகச் சென்ற என் நல்ல நண்பர் அபுல் கலாம் ஆசாத் கஸலை இலக்கிய வடிவமாகத் தமிழில் கொண்டு வருவதில் முழு வெற்றி அடைந்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. பெருமகிழ்ச்சியே ஏற்படுகிறது.

ஆசாத் சிறப்பான மரபுக் கவிஞர். வெண்பாவா, ஆசிரியப்பாவா இந்தா பிடி என்று நொடியில் பாடுவது எல்லாம் செய்யுள் மட்டுமில்லாமல் கவிதையாகவும் இருப்பது அவருடைய புலமைச் சிறப்பு. நாள், மலர், காசு, பிறப்பு என்று முடிய நேரிசை வெண்பா பாடும் ஆசாத், சுருதி பிசகாத சென்னைத் தமிழில் கானாவும் எழுதுவார். பேனா பிடித்த அவருடைய கைகள், தென் தமிழ்நாட்டு வீர விளையாட்டான சிலம்பமும் சுற்றும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு ரசிகர். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல கவிதை, உரைநடை - முதல் வரிசையில் ஆசாத் கட்டாயம் இருப்பார்.

ஆசாத்தின் ரசனையும், கவித் திறனும், உருது, தமிழ் இருமொழியாற்றலும் லாவகமாக எந்த உறுத்தலுமில்லாமல் இழைந்து கலந்திருக்கும் இந்த நூல் கஸலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதைவிட கஸலுக்குத் தமிழைச் சரியான விதத்தில் பரிச்சயப்படுத்துகிறது என்பதே உண்மை.
அக்பர் இலாஹாபாதியை, மொகல்-ஏ-ஆஸம் படத்தின் உருது - தமிழ்க் கீதங்களை, கை·பி ஆஸ்மியின் கவிதைகளை, இப்னே இன்ஷாவின் 'கல் சவ்துவீன்கா சாந்து தீ' மனதில் கொளுத்தும் இன்பத்தீ பற்றி, உம்ரா ஜான் படத்தில் ஷாரியாரின் மறக்க முடியாத 'தில் சீஸ் க்யா ஹை' பற்றி, முஜ்ரா என்ற சமூக உரு சிதைந்து போன நிகழ்கலையை, கவ்வாலியைப் பற்றி எல்லாம் பிரமிக்க வைக்கும் வேகமும், சுவாரசியமும் கைகோர்த்து நடக்கச் சொல்லிப் போகிறார் ஆசாத் இந்த நூலில்.

கோலத் திருவடிவு கோதயர்க ளாசையினால்ஆலைக் கரும்புபோ லானேன் பராபரமே!
என்பது போன்ற தாயுமானவரின் பராபரப் கண்ணி, குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல் போன்ற மரபுக் கவிதைகளில் கஸலை அடையாளம் காணும் ஆசாத், உருது கஸல்களை ஓசை நயம் குன்றாமல், பொருட் செறிவோடு மொழிபெயர்த்திருப்பதும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

இஸ் அன்ஜுமன்மே ப்கோ ஆனா ஹை பார்பார்தீவார்-ஓ-தர்கோ கௌர்ஸே பெஹ்சான் லீஜியே
கஸலுக்காக, கஸலாகவே வாழ்ந்த பெண் கவிஞர் உம்ரோ ஜான் பற்றி முஸா·பர் அலி இயக்கிய திரைப்படத்தில் ஆஷா போன்ஸ்லே குரலிலும், கய்யாமின் இசையிலும், உம்ராவாக நடித்த ரேகாவின் கண்களிலும் நாம் இன்னும் கேட்டும் கண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த கஸலின் வரிகளை ஆசாத் தமிழாக்கும்போது, மனத்திரையில் உம்ரா தமிழில் பேசுகிறாள்.

என் இல்லம் தேடி நீயும் வரவேண்டும் கள்வனாய்மாடங்கள் வாசல் வீதி உன் மனதில் வாங்கிடு
உருது கஸலில் 'நங்கே பாவோன்' என்று சொல்கிறார்கள். 'நிர்வாணப் பாதம்' சொல்லிப் பார்க்கையில் புதிதாக இருந்தாலும், அன்னியமாகவும் இருக்கிறது என்று புது மாப்பிள்ளையாக ஓரிடத்தில் கூச்சப்படுகிறார் ஆசாத். வேணாமே! 'சக்ரவர்த்தினி நினக்கு ஞானொரு சில்ப கோபுரம் துறன்னு. புஷ்ப பாதுகம் புறத்து வச்சு நீ நக்ன பாதயாய் அகத்து வரு' (பேரரசியே, உனக்காக நான் ஒரு சிற்ப கோபுர மாளிகையை உருவாக்கினேன். பூப்பாதுகைகளை வெளியே விட்டு, நக்னமான கால்களோடு உள்ளே நடந்து வா) என்று மலையாளக் கவிஞர் வயலார் வரவேற்ற போதையேற்றும் பாதங்களல்லவோ அவை.

நவாப் வாஜித் அலிஷாவின் 'பாபுல் மோரா' தும்ரியைத் திரைப்படத்தில் இசைமேதை குந்தன்லால் சைகாலும், இசை மேடைகளில் பேகம் அக்தாரும் பிரபலமாக்கியது வரலாறு. தும்ரியோடு, கஸலிலும் பிரபலமானவர் பேகம் அக்தார். 'மல்லிகா-ஏ-கஸல்' (கஸல் அரசி) என்று அன்போடு அழைக்கப்பட்ட அக்தார் பேகம் கஸலைப் பற்றிச் சொன்னார் - 'நல்ல முறையில் பாடப்படும் கஸல் போதையைத் தரும்'. தீமை வருத்தாத போதை அது. நக்னமான பாதங்களைப் போல.

ஆசாத்தால் நல்ல முறையில் எழுதப்பட்ட, அச்சும் அமைப்பும் அழகுற அமைந்த இந்த நூலும் பேகம் அக்தார் குரலில் ஒலிக்கும் கஸலாகப் போதை தருகிறது. சுப்ஹான் அல்லாஹ்!

இரா.முருகன்
டிசம்பர் 05 2004

கும்பகோணம்

ஒரு பயணம் - ஒரு ராத்திரி - ஒரு மணி நேரம் - நாலு கோவில்


வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : " மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?"

"ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்"

"எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்"

வீடியோ பஸ். நினைத்தாலே வயிற்றில் ஒரு சங்கடம். முட்டிக் கொண்டு வரும்போது நிறுத்த மாட்டார்கள். ஏதோ கண் காணாத இடத்தில் "பத்து மினிட் வண்டி நிக்கும் சார்..காப்பி குடிக்கறவங்க குடிச்சுக்கலாம்" என்று அறிவித்து ஒரு பெருங்கூட்டத்தை அற்பசங்கைக்காக இடம் தேடி ஓட வைப்பார்கள். வண்டிக்குள் சதா உச்ச ஸ்தாயியில் அலறும் சினிமா. மலேய மொழிபெயர்ப்பில் கீழே தொடர்ந்து, 'அபாங்க்...அதாங்க்.." என்று ஏதோ ஓடிக் கொண்டிருக்க பாச மழை பொழிந்து கூட்டுக் குடும்பம் பிரியும். வெனீஸில் கனவுக்கு ஆடி விட்டு, கொட்டாம்பட்டியில் ஆப்பம் சாப்பிடுவார்கள்.

"கார்லே போயிடலாம்"

எடுபடவில்லை. மழை காலத்தில் நானூறு கிலோமீட்டர் போக காரை எடுக்க வேண்டாம். பஸ் தான் சரி.

இரண்டு மனிக்கு சொகுசு பஸ்ஸில் உட்கார்ந்தபோது ஏகப்பட்ட பேர் விசாரித்தபடி இருந்தார்கள் "என்ன படம் இன்னிக்கு?"

நடத்துனரும் அடுத்தாளும் மர்மப் புன்னகையோடு எல்லோரிடமும் கர்மசிரத்தையாகக் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதாவது நான், என் மனைவி, கல்யாணத்துக்கு வரும் மாமிகள், முந்திய சீட் பாய், பர்தாவில் அவங்க வீட்டம்மா, நாலைந்து சேட்டு வீட்டுக் கிழவிகள், சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட் எட்டிப் பார்க்கும் இரண்டு இளைஞர்கள் இன்னும் யாராரோ ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலா பஸ்ஸில் கும்பகோணம் இன்பச் சுற்றுலா போகிறோமாம்.

சட்டம் கழுதை என்பது எத்தனையாவது தடவையாகவோ நிரூபணம் ஆகிறது.

"வீடியோ போடுங்கப்பா"..."ரிப்பேருங்க".."ஏன் சொல்லலே?".."நீங்க கேக்கலே".."பாட்டாவது போடுங்க"..

கையில் கொண்டு வந்த புத்தகத்தை விரிக்கிறேன். தரவாட்டு நாயர் ஸ்திரியின் அதிசௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தம்புரான் ஆளனுப்பி கோலோத்து அரண்மனைக்குக் கூட்டி வரச் சொல்கிறார். இருண்ட மண்டபங்களின் வழியே மெல்ல நடந்து உள்ளே போகிற சுந்தரிப் பெண்குட்டி. வயதான தம்புரான் ஜயண்ட் சைஸ் சாய்வு நாற்காலியில் இரண்டு பக்கத்திலும் இறக்கை மாதிரி மரக்கைகளை நீட்டி வைத்து அதில் காலமர்த்திக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதே நிலையில் புஷ்பேக் இருக்கையில் நானும். தூங்கிப் போகிறேன்.

விழித்தபோது பண்ருட்டி, மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு என்று ஒவ்வொன்றாகக் கடந்து போகிறது.

தமிழகத்தில் ஒரு ஊருக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லா ஊரிலும் கடை வீதியில் வரிசையாகக் கடைகளில் டியூப் லைட் வெளிச்சத்தில் மும்முரமாகப் புரோட்டா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் எல்லா வயது ஆண்களும் எச்சில் கையோடு அடுத்த புரோட்டாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் ராத்திரி வீட்டில் ஏதாவது சாப்பிடுவார்களா இல்லை தூக்குச் சட்டியில் வாங்கிப் போய்விடுவார்களா என்று தெரியவில்லை.

பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்து விடலாம்.

புரோட்டாக்கடை வைத்தது போக மீதி இடத்தில் பேன்ஸி ஸ்டோர் கடைகள் - தமிழகத்தின் கலாசார சின்னமான நீல நிற பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக அடுக்கி வைத்திருப்பது கண்ணில் படுகிறது. அப்புறம் கோல்ட் கவரிங் கடைகள். எல்லாச் சுவர்களிலும் நகராட்சி, பஞ்சாயத்துத் தேர்தலுக்காக இலை, சூரியன், சைக்கிள்...கேஸ் சிலிண்டர் சின்னத்தில் கோவிந்தராஜனுக்கு ஓட்டுப் போடுங்கள்.


காதி வஸ்திராலயத்தில் அழுக்குப் பழுப்பு விளக்கு வெளிச்சத்தில் ஒரு செய்தித்தாளில் வறுத்த கடலையைக் குவித்து வைத்து மென்றபடி மூன்று பேர் காந்தி படத்துக்குக் கீழே சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருப்பது பின் லாடனா? தீபாவளி அட்வான்ஸா?

வண்டி சுமார் வேகத்துடன் நகர, டாப்ளர் எபக்டில் ஒலிபெருக்கிச் சத்தம் - "வள்ளல் பெருமான் அவதரித்த ஊரில் காண்ட்ராக்ட் ஊழல் என்றால் என் நெஞ்சம் கொதிக்கிறது"

அண்ணே..ஆத்திரப் படாதீங்க.. கொஞ்சம் இப்படி உட்காருங்க..யாருப்பா அங்கே..அண்ணனுக்கு சூடா ரெண்டு புரோட்டா, சால்னா, சின்னதா ஒரு மராமத்து காண்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணுங்க..

ஒரு வழியாகக் கும்பகோணம்.

சைக்கிளில் போகிற சாஸ்திரிகள் மணியடித்துக் கொண்டே போகிறார்.

"அன்னிய தேசம் க்ருதம் பாவம் வாரணாசிம் வினச்:யதி
வாரணாசிம் க்ருதம் பாவம் கும்பகோணம் வினச்:யதி
கும்பகோணம் க்ருதம் பாவம் கும்பகோணே வினச்:யதி"

(வேறு எங்காவது பாவம் செய்தால் காசியில் விமோசனம். காசியில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் விமோசனம். கும்பகோணத்தில் பாவம் செய்தால் கும்பகோணத்தில் தான் விமோசனம்).

தி.ஜானகிராமனின் "மோகமுள்" நாவலில் இரண்டாம் பக்கத்தில் வாசனை விடயம் மென்று கொண்டு சுலோகம் சொல்லும் சாஸ்திரிகள் நினைவுக்கு வருகிறார்.

ஒரு ராத்திரிக்குள் கும்பகோணத்தில் பாவம் பண்ண முடியாது. விடயம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

மேலக் காவேரி பாணாத்துறை வடக்கு வழியாகப் போய்ச் சேர்ந்து, சாப்பிட்டு, வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, மொட்டை மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே பாய் விரித்துப் படுக்கிறேன். சுற்றித் தென்னைமரங்கள், மலை வேம்பு, மா மரங்கள், எலுமிச்சை, தேக்கு மரம், நந்தியாவட்டை..எங்கேயோ மாதுளம்பூ விரியும் வாசம்.

"ராத்திரியில் திடீர்னு மரத்துலே பட்சி எல்லாம் ஒரு தினுசாக் கத்தும். எழுந்து பார்த்தா, சில சமயம் ஒரு மரத்திலிருந்து இன்னொண்ணுக்கு பாம்பு தாவும்.."

மைத்துனன் சுவாரசியமாகச் சொல்கிறான். தென்னை மரங்களை நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு சத்தமும் இல்லை.

நீட்டி நிமிர்ந்து மல்லாக்கப் படுக்க, தலைமாட்டில் யாரோ கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைக்கிறார்கள். வரிசையாகப் பாய் விரித்துப் படுத்த ஆண்கள். எல்லோர் தலைமாட்டிலும் ஊதுபத்தி போல் கொசுவர்த்தி என்று கொஞ்சம் அமானுஷ்யமான சூழல்.

பாதி ராத்திரியில் விழித்தபோது மரத்தில் ஆந்தை உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. ஒரு கூட்டம் மின்மினிப் பூச்சிகள் மாமரத்தைச் சுற்றி ஒளி வளையம் இட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. குளிரக் குளிர ஒரு காற்று மெல்லக் காது மடலைச் சிலிர்க்க வைக்கிறது.

இந்த ராத்திரி இப்படியே நீண்டு போகட்டும் என்று நினைத்தபடித் திரும்பக் கண் அயர்கிறேன்.

ஜோதிகா ஆட்டத்தோடு பொழுது விடிகிறது. கே டிவியை யாரோ கர்ம சிரத்தையாக விடிந்து அஞ்சரை மணிக்குப் போட, கே சானலில் அந்தம்மா தரிசனம்.

சானல் மாற்றி ஜெயாவில் தமிழ் சுப்ரபாதத்தோடு திருமலை. தினசரி வருகிற ஒரே உற்சவத்தில், நரைமீசையும், தொப்பையுமாக கருப்பாக ஒரு பட்டாச்சாரியார் பெருமாளோடு புஷ்கரணியில் முழுகிக் கொண்டிருக்கிறார்.

தினமலரில், தஞ்சையில் பிக்பாக்கெட் அடித்துப் பிடிபட்ட நான்கு பெண்களின் புகைப்படம். முதல் பக்கத்தில் ஜெ-வுக்கு ஈமெயிலில் வந்த மிரட்டல்.

"குளிச்சிட்டு வாங்க..முகூர்த்தம் ஆரம்பிக்கறதுக்குள்ளே போகணும்"

கும்பகோணம் தெரு பூவாடையும் சாண வாடையும், வெங்காய மண்டி வாடையுமாக விரிகிறது. யமுனாவும், பாபுவும் தி.ஜானகிராமனும் நடந்த தெருக்கள்..எம்.வி.வெங்கட்ராம் 'காதுகள்' பற்றி யோசித்தபடி நடைபோட்ட வீதிகள்.. நண்பர் 'பறை' பொதியவெற்பன் இங்கே தான் எங்கேயோ இருக்கிறார்.. எங்கே?

முகூர்த்தம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. பசியாறிவிட்டுக் கடியாரத்தைப் பார்க்கிறேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது.

வழியில் போகிற ஆட்டோவை நிறுத்துகிறேன். "கோயிலுக்கு எல்லாம் போகணும்.."

"முகூர்த்தத்துக்கு லேட் யிடும்" பட்டுப் புடவையில் இவள் வேண்டாம் என்கிறாள். "பக்கத்துலே ராகவேந்திரா கோவில் இருக்காம்..அங்கே வேணா போய்ட்டு வந்திடலாம்"

ராகவேந்திரரை அப்புறம் தரிசித்துக் கொள்ளலாம். கும்பேசுவரரும், பெருமாள்களும் வரச் சொல்லித் தாக்கீது பிறப்பித்திருக்கிறார்கள்.

ஆட்டோ கிளம்புகிறது.

கும்பேசுவரர் கோவில். வழக்கமான 'கைலி அணிந்து கோவிலுக்குள் வரக்கூடாது' அறிவிப்புப் பலகைக்குப் பக்கத்தில், "பால் பாக்கெட் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை"

பாங்காக்கில் இரவு விடுதி வாசலில் புத்தர் விக்ரகத்துக்குக் கீழே தகரக் குடுவையில் கோக்கோ கோலா படையலாக வைத்திருப்பது நினைவு வருகிறது.

சுவரில் திருப்பதிகங்களில் மூழ்குகிறேன். இவள் கடியாரத்தைப் பார்க்கிறாள்.

"கூடிக்கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழியற்றேன்
வற்றல்மரம் போல் நிற்பேனே"

"இங்கேயே நின்னுட்டிருந்தா எப்படி? சரசரன்னு முடிச்சுட்டுக் கல்யாண மண்டபம் போக வேணாமா?"

பாரதியின் 'ஞானரதம்' கதையில் கிரணத்தைப் பிடித்துப் போகிறவன் போல் உணர்கிறேன். இவள் "பொதிமாட்டைப் போன்ற ஸ்திரி" இல்லை. அன்புக்குரிய மனைவி.

சுவரில் ஞானசம்பந்தர் அருளிச் செய்த திரு எழுகூற்றிருக்கை ரத பந்தமாக வரையப்பட்டிருக்கிறது.

உள்ளே பிரகாரத்தில் சுந்தரர் 'விழிநோய் நீக்க வழி கூறிப் பாடிய பதிகம்'. இடக்கண்ணுக்கான பதிகத்தைப் பதம் பிரித்துப் படித்து முடித்து அடுத்த கண்ணுக்கு வருவதற்குள், "வாங்க போகலாம்.. ஊஞ்சல் ஆரம்பிச்சுடும்"

கும்பேசுவரர் கோவிலிலிருந்து புறப்பட்டு ஆட்டோ ராமசாமி கோவிலில் நிற்கிறது. "பத்தே நிமிஷம்".. ஓடுகிறேன்.

தூணில் புடைப்புச் சிற்பமாக மூரிச்சிலைத் தடக்கையோடு கம்பீரமான ராமபிரான். நெடிய அந்தத் திருமேனி முழுக்க எண்ணெய் முழுக்காட்டி வைத்திருக்கிறார்கள்.

தூணின் அந்தப் பக்கத்தில் பிராட்டி. தூக்கிக் கட்டிய அழகான தலையலங்காரத்துக்கு மேலே ஒட்டடை படிந்திருக்கிறது. எம்பி நீக்குகிறேன். அடுத்த பக்கத்தில் அனுமன். அழுக்குப் புரண்ட திரு உருவம். நாலாவது பக்கத்து இலக்குவன் இருட்டிலும் தூசியிலும் பாதிதான் கண்ணில் படுகிறான்.

அடுத்த தூணில் ஒய்யாரமாக அன்ன வாகனத்தில் சாய்ந்திருக்கும் பெண்ணின் சிற்பம். லேடி காடிவா போன்ற திண்ணென்ற உருவம். யார் அது? யட்சியா?

பட்டாச்சாரியார் திருவிளக்கு வெளிச்சத்தில் பெருமாளையும் பிராட்டியையும் சேவிக்கக் காட்டுகிறார். வலது புறத்தில் கையில் வீணையும் ராமாயணமுமாக அனுமன் கண்ணை ஈர்க்கிறான். வீணை வாசிக்கும் அனுமன் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. ராமாயணத்தில் வீணைக் கொடியுடைய ராவணன் மட்டும்தான் இசைஞானி என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

"தொட்டிலில் குழந்தையாகப் பெருமாள். எடுத்துக் கையில் ஏழப் பண்ணினா, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்"

பட்டாச்சாரியார் உன்னிப்பாகப் பார்க்கிறார். என் பிள்ளைகள் வீட்டில் இருப்பதைச் சொல்ல வேண்டுமோ?

வாசலுக்கு வந்து ஆட்டோவில் ஏற, பக்கத்துப் பெட்டிக் கடையில் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் - "கம்ப்யூட்டர் லேசுப்பட்டதில்லே...பேக்டீரியான்னு கிருமி இருக்கு பாரு..அது கூட கம்ப்யூட்டர் மூல்யமாப் பரவுதாம்"

கம்ப்யூட்டர் கிருமியை மனதிலிருந்து அகற்றி விட்டு, சாரங்கபாணி கோவிலில் இறங்குகிறேன்.

கம்பீரமான விண்ணகரம். யானை இழுக்கும் கல்தேர் போல் பிரம்மாண்டமான மண்டபம். தேர் நகர்வது போல் தெரிகிறது. பிரகாரச் சுவர்களில் வரிசையாக ஓவியங்களில் ராமாயணம். நாயக்கர் பாணியிலிருந்து 'குமுதம்' பத்திரிகையில் வரைந்த 'வர்ணம்' பாணி வரை இருக்கிறது. ஜெயராஜ் பட சாயலில் யாரும் தட்டுப்படவில்லைதான்.

இந்தக் கோயில் சுவரிலும் ரதபந்தனம். "திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அணிதுயில்' திருமாலைக் குறித்துத் திருமங்கை ழ்வார் பாடியது.

இயல்பான கவிஞர்களான சம்பந்தரையும், திருமங்கை மன்னனையும் கிராஸ்வேர்ட் புதிர் போல் எழுத்து எண்ணிச் சதுரத்தில் அடைத்து ரதபந்தமும், பசுமூத்திர பந்தமும் மற்றதும் பாட வைத்த புண்ணியவான்கள் யார்? 'கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே" என்று இடைக்காலப் புலவர்களைப் பற்றி எழுந்த எரிச்சல் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டும்தானா?

"ஊஞ்சல் முடிந்து மாலை மாற்று ஆரம்பித்திருக்கும்"

சக்ரபாணி கோயில். குடமுழுக்கு கி வண்ணம் மினுக்கிக் கொண்டிருக்கும் கோவிலில் நுழைந்ததும் நடுநாயகமாக ஏழு வண்ணம் கசிய சுதை உருவத்தில் புதியதாக உருவாக்கிய பெருமாள். கோடம்பாக்கம் செட் போல் இருக்கிறது அந்த இடம்.

பக்கத்தில் மரத்தாலான ஒரு பழைய பூத வாகனம், "போங்கடா நீங்களும் உங்க குடமுழுக்கும்" என்று முதுகைக் காட்டிக் கொண்டு சுவரைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறது. அதன் பக்கத்தில் வேறு ஏதோ மரச் சிற்பத்தின் கையும், காலும் தனித்தனியாகச் சிதறிக் கிடக்கின்றன.

பழையதைப் பேணிவிட்டுக் குடமுழுக்கு நடத்தினால் குறைந்து போய்விடுமோ என்று தெரியவில்லை.

சந்நிதிக்குப் போகும் வழியில் கம்பீரமான அந்த வெண்கல விக்கிரகம் கருத்தை ஈர்க்கிறது. அடுக்கடுக்காகப் பட்டாடை விரிய உயர்ந்து நிற்கும் மனிதர். பக்கத்தில் அவர் இடுப்பு உசரத்துக்கு ஒரு பெண்.

"சரபோஜியும் அவா ஆத்துக்காரியும்"

பட்டாச்சாரியார் சடாரி சாதித்தபடி சொல்கிறார். இங்கேயும் தொட்டில் பெருமாள் கையில் ஏழப் பண்ண (எழுந்தருளப் பண்ண)த் தயாராகக் குட்டித் தொட்டிலில் இருக்கிறார். அவரை அப்புறம் கொஞ்சலாம் என்று இவள் கையைப் பிடித்து இழுத்துப் போய் ஆட்டோவில் ஏற்றுகிறாள்.

சோலையப்பன் தெருவில் கல்யாணமண்டப வாசலில் வண்டி நிற்கிறது. விதவிதமான சாயம் தோய்த்த சோற்று உருண்டைகள் உள்ளே இருந்து வந்து காலில் படுகின்றன.

"ஊஞ்கல் ஆரம்பிச்சாச்சு" அரக்கப் பரக்க இவள் உள்ளே ஓட, நான் வாசலில் நாற்காலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கேரளா டயரி

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 1

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.

சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.

எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.

சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.

அவர் அலுத்துக் கொள்ளாத குறையாகத் திரும்பவும் பொறுமையாகச் சொல்லப் பயணச் சீட்டைப் பார்த்தேன்.

'டிப்பார்ச்சர் ·ப்ரம் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்'. பார்க்காதது என் குற்றம்தான்.

போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார் அதிகாரி. வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.

எம்பார்க்மெண்ட் கார்ட் எல்லாம் எதுக்கு சார்? இந்தோ இருக்கிற கொச்சிக்குத் தானே போறேன்?

இங்கேயும் நினைவூட்டல்.

இதைக் கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.

போகிறபோக்கில், ஆண்றணி பூமியில் போய் இறங்கவும் பாஸ்போர்ட், விசா சகிதம் பயணம் ஆரம்பிக்க வேண்டுமோ என்னமோ - இதை எழுதும் வினாடி வரை கருணாகரனும் அவர் மகன் கேரளா காங்கிரஸ் தலைவர் முரளீதரனும், திருவனந்தபுரத்தில் ஆண்றணி ஆட்சியைக் கெல்லிக் கிளப்பி அப்புறத்தில் எறிய விடாது பாடுபாட்டுக் கொண்டிருப்பது பலன் தரவில்லை.

ஆண்றணியுமாச்சு, கருணாஸ¤மாச்சு என்று பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம், ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டியவை.

கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா? முந்தாநாள் உமக்கு நீர்க்கடுப்பு ஏற்பட்டதா? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா? ஆணுறை அணிகிறீரா? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க என்றார்கள் வெள்ளையும் சள்ளையுமான துரைகள்.

என்னைப் போல் பொறுமையாகப் பாரம் பூர்த்தி செய்துகொண்டிருந்த நாலைந்து பேர் அவசரமாக நீட்டிய காகிதங்களைப் பார்க்காமலேயே இடது கையால் வாங்கி, இங்க் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தி ஓரமாக விட்டெறிந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

இந்தக் காகிதத்தை எல்லாம் அப்புறம் கழிப்பறையில் உபயோகப்படுத்துவார்களாக இருக்கும்.

********************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 2

எரணாகுளம் நகரம் ராத்திரி எட்டு மணிக்கே சமர்த்தாகத் தூங்கப் போயிருந்தது.

சனிக்கிழமை இல்லியா, அதான் சீக்கிரமாக் கடையை எல்லாம் எடுத்து வச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க.

சகாவு டாக்சி டிரைவர் சொன்னார்.

வார நாள்லே எப்படியோ?

விடாமல் பிடித்தேன்.

எட்டரை ஆயிடும் சேட்டா.

சென்னை அண்ணாசாலையை அகலத்தைக் குறைத்து தெற்கு வடக்காக இழுத்து வைத்து நீட்டினாற்போல் எம்.ஜி.ரோட் என்ற மகாத்மா காந்தி வீதி. நாலு கடைக்கு ஒரு கடை ஆலப்பாட் ஜுவல்லரி. ரெடிமேட் துணிக்கடை. பேக்கரி. அழுக்குக் கட்டடமாக ஒரு தியேட்டர். பானரில் மோகன்லால் சிரிக்கிறார் - படம் 'ஹரிஹரன் பிள்ள ஹாப்பியாணு'.

லாலேட்டன் ஹாப்பியல்லா. துக்கத்திலாணு.

டிரைவர் சகாவு சொன்னார். படம் ஊத்திக்கிச்சாம்.

ஹோட்டலில் டி.வியைப் போட்டதும், கிரேனின் உச்சியில் உட்கார்ந்து காமரா கீழே பார்க்க, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டை போடத் தயாராக மம்முட்டி. சரசரவென்று கீழே வந்து கிரேனை விட்டிறங்கி, காமிராவைத் தூக்கிக் கொண்டு பச்சையிலைக் காட்டுப் பிரதேசத்தில் வளைந்து வளைந்து கேமிராமேனும் உதவிகளும் ஓட, முன்னால் மம்முட்டி யாரையோ புரட்டி எடுத்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறார். மூணு நிமிஷத்துக்கு மேலே நீளும் ஒற்றை ஷாட் மம்முட்டி நடித்து வெளிவர இருக்கும் புதுப்படத்துக்காம்.

மம்முட்டி காட்டிலும் சென்னைப் பருவ மழைதான் என்று சாரதி சொன்னது நினைவு வர, சானலை மாற்றியதில் கைரளி டிவி. மார்க்சிஸ்ட்கள் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனம் என்று கேள்வி.

கைரளியில், அவர்களின் தற்போதைய சூப்பர் ஸ்டார் காங்கிரஸ்காரர் கருணாகரன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரரான ஏ.கே.ஆண்றணியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால் கேரளத்தின் கஷ்டம் எல்லாம் விடியும் என்பதே அவருடைய உக்ரன் பிரசங்கத்தின் சாராம்சம்.

அயர்ந்து தூங்கிவிட்டுப் பாதி ராத்திரியில் எழுந்து பார்க்க, அணைக்காமல் விட்ட டி.வியில் திரும்பக் கருணாகரன். ஆண்றணியை இறக்கி வீட்டுக்கு அனுப்பாமல் இவர் கண் துஞ்சுவார் என்று தோன்றவில்லை.

பாத்ரூம் போய் வந்து பார்த்தபோது கருணாகரனைக் காணவில்லை. மார்க்சிஸ்ட் தினப்பத்திரிகை தேசாபிமானிக்காக ஸ்டைலாயிட்டு ஒரு விளம்பரம்.

தமிழ் எழுத்துக்காரன் அசோக் மித்ரா.

செய்தி வாசிக்கும் புஷ்டியான பெண்ணின் சோனியான குரல்.

தெருவில் தீயணைப்பு வண்டிகள் மணிச்சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறதாகத் தோன்றுகிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் கொடுத்த சைவ சாசேஜ் போன்ற நூதன வஸ்துக்களைச் சாப்பிட்டு, பிளாஸ்டிக் போத்தலில் வழங்கப்பட்ட மூணேகால் டீ ஸ்·பூன் மினரல் வாட்டர் குடித்தால் அஜீர்ணத்தால் இப்படி அபத்தக் கனவு வரும் போல.

டிவியை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தேன்.

******************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 3

அப்பமும் ஸ்ட்யூவுமாகக் காலையில் பசியாறினேன். ப்ரேக்·பாஸ்டை மலையாளத்தில் ப்ராதல் என்கிறதற்கான காரணம் இன்னும் விளங்கவில்லை - தகரம் மிகாமல் படிக்கவும்.

இந்துவும், எக்ஸ்பிரஸ்ஸ¤ம் இல்லாதபோது மலையாள மனோரம ஈயப்படும் என்பதால் அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரிக்க முதல் பக்கத்தில் நேற்று ராத்திரி எரணாகுளம் நேப்பாளி மார்க்கெட்டில் தீப்பிடித்தம். கடைகள் கத்திச்சு சாம்பலாயி.

எம்.ஜி.ரோட் நடைபாதைக் கடைகளை ஒழித்துக்கட்டி, கொஞ்சம் ஓரமாக அங்காடி ஏற்படுத்தி அங்கே நிறைய நேப்பாளிகளை, தமிழன்மாரைக் குடியேற்றிவிட்ட இடத்தில் தீவிபத்து.

நேப்பாளிகள் இல்லாத எரணாகுளம் மகாத்மா காந்தி வீதி ஏற்ற இறக்கங்களும், சிமிண்ட் பலகை அங்கங்கே நடுவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நடைபாதையுமாக உயரந் தாண்டலும் நீளந்தாண்டலும் பழகத் தோதாக விரிந்து கிடந்தது.

பலகை இருக்கும் இடத்தில் புதுசாகத் துணிக்கடை பரத்திக் கொண்டிருக்க, டவுண்பஸ்ஸில் எடுபிடியாள் கூவியழைத்துக் கூட்டம் சேர்க்கிற சத்தம். மலை கயறி வந்த அய்யப்ப சாமிகள் எல்லா மொழிகளிலுமாக தாண்டிக் குதித்து நடந்து கொண்டிருந்தார்கள்.

கடைகளைக் காரியம் ஒன்றுமில்லாமல் பார்த்தேன். அதெல்லாம் மாக்சி விற்கிறவை. சேச்சிகளுக்கு மாக்சியில் வல்ய இஷ்டம் வரக் காரணம் என்ற யோசனையோடு திரும்ப ஓட்டல் படியேறியபோது 'வை(கி)ட்டு ஆறு மணிக்கு டாக்சி எத்தும்' என்றார் வரவேற்பாளர். ஆலப்புழை போகத்தான்.

அவ்வளவு தாமதமானால் வேண்டாம். நாளைக்கே போயிக்கறேன்.

மலையாள மனோரமாவின் மற்ற பக்கங்களை மேய்ந்தபோது, தொண்ணூற்று மூன்று வயதான மூத்த மலையாளக் கவிஞர் பாலா நாராயணன் நாயருக்கு மாத்ருபூமி விருதாக இரண்டு லட்சம் ரூபாயும், தந்தப் பேழையும் வழங்கிச் சிறப்புரையாற்றினார் பிரசித்த தமிழ் எழுத்தாளர் அசோக் மித்ரன்.

சுந்தர ராமசாமியைச் சேர்த்து சுந்தரராமசாமி என்று எழுதுவது எவ்வளவு தப்போ அதைவிடத் தப்பு அசோகமித்திரனைப் இரண்டாக்கிப் பொட்டும் வைத்தது. ஆனாலும் இது அசோக் மித்ராவைவிட எவ்வளவோ பரவாயில்லை.

மலையாள எழுத்தாளரைக் கவுரவிக்கப் பிறமொழி எழுத்தாளரை நீங்கள் அழைப்பது போல் எங்கள் ஊரில் நடக்காது என்று அ.மி சேட்டன்மாரைப் புகழ்ந்து சொன்னதாகப் பத்திரிகைக் குறிப்பு.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இலவச இணைப்பும் உண்டு. மகா சோனியான அந்தப் பதினாலு பக்க இணைப்பில் பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு தொழிற்சாலையில் வாட்ச்மேனான கோபி மேனோனோடு பேட்டி. என்ன விசேஷம் என்று கேட்டால், புள்ளி ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். 1970களின் இறுதியில் வன்விஜயம் நேடிய தெலுங்குப் படமான 'டைகர் ராணி' மூலம் வெற்றியைக் குவித்து, அடுத்து மலையாளத்தில் 'இனி அவன் உறங்கட்டே' என்று இளைஞர்களைத் தூங்கவிடாமல் அனுராதாவை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து கமலஹாசனை நாயகனாக்கி 'மற்றொரு சீத' எடுத்து, அப்புறம் அடுத்த படங்களில் கைக்காசு எல்லாம் இழந்து இப்போது காக்கி யூனிபாரத்தோடு காவல் காரனாக நிற்கிறார், பாவம்.

போதாக்குறைக்கு இவர் தற்போது வேலை பார்க்கும் ·பாக்டரியில் ஏதோ படப்பிடிப்பு என்று அண்மையில் ஒரு கோஷ்டி வந்திறங்கியபோது, 'சேட்டா, வாட்ச்மேன் வர்றதுபோல ஒரு சீன் இருக்கு. நடிக்கிறியா?' என்று கேட்டு இவருடைய பூர்வகதை தெரியாதவர்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்களாம்.

'முப்பத்தஞ்சு எம்.எம் பாக்யம், எழுபது எம்.எம் நிர்பாக்யம்' என்று சாதுவாகத் தலைப்புப் போட்டு மனோரமா பிரசுரித்திருந்த செய்தி, தமிழ்ப் பத்திரிகைக்குக் கிட்டியிருந்தால் தலைப்பு என்னவாக இருக்கும்?

'கமலஹாசன் படத் தயாரிப்பாளர் காவல்காரனானார்'.

***********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 4

'கனவான்களே, சீமாட்டிகளே, அவரை(அவனை)ப் பிடித்து விட்டோம்.'

சாயந்திரம் எல்லாச் சானலிலும் சதாம் ஹ¤சைன். மாட்டுத் தரகன் போல அவர் பல்லைப் பிடித்துப் பார்த்து, தலையில் பேன், பொடுகு இருக்கா என்று தடவினதை விடாமல் லூப்பில் போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தில் யாருமே 'சதாம் கிடைச்சாச்சு, சரி. வெப்பன்ஸ் ஓ·ப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் எங்கேப்பா?' என்று கேட்காதது ஆச்சரியம் தான்.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதால் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லி ஈராக்கில் நுழைந்து, இப்போது சதாமைப் பிடிக்கத்தான் அங்கே போனதாக பி.பி.சி, சி.என்.என் தொடங்கி உள்ளூர் சானல் வரை நீளும்படியான ரீல் விடுவதைப் பத்து நிமிடத்துக்கு மேல் பார்க்கப் பொறுமையில்லாமல், வெளியே வந்தேன்.

அந்த மனுஷர் தான் ஆகட்டும். இப்படிப் பசுமாடு போலவா தேமேன்னு நிப்பார்? கைத்துப்பாக்கியை எடுத்துப் பொட்டில் வைத்துச் சுட்டுக்கொண்டு பரலோகம் போகவேண்டாமோ? அதுதானே வீரத்தின் லட்சணம்?

ஓட்டல் ரிசப்ஷனில் டி.வி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதானே.

திரும்பத் தெருவில் இறங்க, ஒரு புத்தகக்கடை கண்ணில் பட்டது. கூட்டமும் இருந்தது. கிறிஸ்துமஸ், புதுவருட வாழ்த்து வாங்க நிற்கும் கூட்டம். டி.சி புக்ஸ், கோட்டயம் பிரசுரித்த ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்த அலமாரிகளின் பக்கம் தப்பித் தவறிக்கூட எந்த மலையாளியும் போகவில்லை.

மலையாளம் அகராதி புதுசா வந்திருக்கு சார்.

கடைச் சிப்பந்தி காட்டிய இடத்தில் 2003 செப்டம்பரில் புதுப்பதிப்பு வெளியான மலையாளம் - ஆங்கிலம் அகராதி.

இதே அகராதியின் 2001 பதிப்பு என்னிடம் இருக்கிறது. இதில் 'முத்தமிழ்' என்பதற்கு 'தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்ற மூன்றும் சேர்ந்த மொழி' என்று அபத்தமாக விளக்கம் எழுதியிருந்ததைப் படித்துக் கடுப்பாகி, முத்தமிழ் என்றால் என்ன என்று டி.சி புக்ஸ், கோட்டயத்துக்கு விவரமாக எழுதிப் போட்டேன். அது போன வருடத் தொடக்கத்தில். அவர்களும் ஏகத்துக்கு வருந்தி, அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம் என்று வாக்களித்திருந்தார்கள்.

புதிய பதிப்பிலும் முத்தமிழ் அப்படியே தான் இருக்கிறது.

******************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 5

புத்தனங்காடி. ஆலப்புழைக்குத் தொட்டடுத்த இடங்கழிப் பிரதேசம். தென்னை மரங்கள் அடர்ந்த பரம்பு. நடுவில் ஒரு பதினாலு கெட்டு வீடு. என்றால் பதினாலு கோணம். அதாவது சின்னதும் பெரிசுமாகப் பதினாலு மாடங்கள். தேக்கு மரத்தால் செய்து தச்சு சாஸ்திரப்படிக்கு உருட்டி அமைத்துத் தூக்கி நிறுத்தியவை. மரமும், ஓடும், சுண்ணாம்புமாக எது எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று புரியாதபடிக்கு இழைத்து இழைத்துக் கலந்து சேர்த்துக் கட்டிய இருப்பிடங்கள்.

தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் வாசல் நிலை. ஏறிச் செல்ல நயமான மரப்படிகள். பாதி வரைக்கும் அறுத்து ஒரு கதவும், மேல் பாகம் இன்னொரு பகுதிக் கதவும். கீழ்க் கதவை அடைத்து, மேலே உள்ளதை அடுத்துச் சாத்தி, மணிச் சித்திரத் தாழை இழுத்துச் செருகினால் உள்ளே ஈசல் கூட நுழைய முடியாது.

இந்தத் தரவாட்டின் காரணவராக, மருமக்கள் தாயம் மரபாகிப் போன வீட்டோடு இருக்கப்பட்ட மூத்த மருமகனாக, அனந்திரவர்களான வீட்டுப் பிள்ளைகளை அதிகாரம் செய்துகொண்டு, குடை பிடித்தபடி படகில் போய், பக்கத்துக் கிராமத்தில் பச்சைக் கறிகாயும், மீனும் வாங்கி வந்து, நெல் பாட்டத்தில் முண்டு வலித்துக் குத்தி நடந்து விதைப்புப் பணி நோக்கியிருந்து, சாயந்திரம் குளித்து அம்பலத்தில் தொழுவதற்கு நெற்றியில் சந்தனமும் மேலே வெற்றுடம்போடும் நாலு முழ முண்டுடுத்தி நடந்து தேய்ந்து ஒரு நாள் மூச்சு நின்று இங்கேயே பலா மரத்தின் சுவட்டில் தகிக்கப்பட்டு இடிந்து போன நினைவு மண்டபமாகப் போனவன் நானாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் அந்தக் கூட்டில் புகுந்து கொள்ள ஒரு சிரமமும் இல்லை. அவ்வளவுக்கு இந்தச் சூழல் மனதிலோ மரபணுவிலோ ஆழமாகப் பதிந்திருக்கிறது.

எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிகிற வேம்பநாட்டுக் காயல். அந்தி வண்ணம் பூச ஆரம்பித்திருக்கும் வெள்ளப் பெருக்கில் அங்கங்கே மீனுக்காகத் தண்ணீரில் மூழ்கும் பறவைகள் கும்க் கும்க் என்று மெல்லச் சத்தம் கூட்டுகின்றன. முக்குளித்து அலகில் மீனோடு மீண்டும் எவ்விப் பறக்கின்றன. நீர்த் தாவரங்கள் நீரோடு மிதந்து அங்குமிங்கும் ஒரு நிமிடம் ஒதுங்கி, அது நிலையான இடமில்லை என்று படத் திரும்ப நகர்கின்றன.

டப்டப் என்று பக்கத்தில் எங்கேயோ மோட்டார் படகு சத்தம். கையால் துழைத்துப் போகிற படகில் ஒருத்தன் வாழைக் குலைகளை ஏற்றிக் கொண்டு, வேகவேகமாகத் துடுப்புப் போட்டுப் போகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்து பீடி வலிக்கிற கிழவருக்கு அருகே கிடைமட்டத்தில் ஒரு பழைய சைக்கிள். அக்கரையில் ஏதோ ஒரு கிராமத்துக்கு இன்னும் அரை மணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ போய்ச் சேர்வார்கள். போனதும் அங்கே மண்தரையில் அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவார். வாழைக்குலை பின் சீட்டில் அப்படியும் இப்படியுமாக ஆடித் தரையைத் தொட்டுக்கொண்டு நகரும். படகுக்காரன் தன் வள்ளத்தைத் தன் கிராமத்துப் படகுத்துறையில் சேர்த்துக் கட்டிவிட்டு கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வீட்டுக்கு நடப்பான். அது படகுத் துறைக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.

குளிர் மணக்கும் காயல் பக்கம் மெல்லிய கீற்றாக டீசல் வாடை. படகின் எஞ்ஜின் அணைக்கப்பட்டு திரும்ப உயிர் பெற்றுப் புகையை உமிழ்கிறது. கடல் பறவை போல் இரைகிற படகின் அழைப்புச் சத்தம். தூரத்தே சீன வலைகள் தண்ணீரில் குனியத் தயாராக நிற்கின்றன.

வன்னு கேரு சாரே. நமுக்கு ஒண்ணு காயலில் கெறங்ஙி வராம்.

படகுக்காரன் இடுப்பு லுங்கியை முட்டுக்குக் கீழே தழைத்துக் கொண்டு அன்போடு விளிக்கிறான்.

ஏறி உள்ளே போகிறேன். மீன் வாடை. இப்போதுதான் கூடை இறக்கி இருக்க வேண்டும்.

மேல் தளத்தில் ஓய்வாக உட்கார்ந்து கேம்கார்டரை எடுக்கிறேன்.

தூரத்தில் தெரியும் தென்னந்தோப்புகளை நோக்கி நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு படகு முன்னேறுகிறது. மேற்கே இறங்கிக் கொண்டிருக்கும் சூரியன். மேலே வட்டம் போட்டு நகரும் ஒற்றைப் பருந்து. சீரான கதியில் சஞ்சரிக்கும் காற்று.

அப்புறம் கிராமங்கள். கரைக்கு இரண்டு பக்கத்திலும். ஒரு சாட்டம் சாடினால் அங்கே போய் யார் வீட்டு வாசலிலாவது விழுந்து விடலாம்.

எல்லா வீட்டிலும் மாக்சி அணிந்த பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் காயலில் சமையல் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். மாக்சி அணிந்த பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முண்டும் ப்ளவுஸ¤ம் உடுத்திய நாடன் மலையாளிப் பெண்ணை இனிமேல் செம்மீன் டி.வி.டியிலும் கள்ளி செல்லம்ம வி.சி.டியிலும் தான் ஷீலா உருவத்தில் பார்க்க வேண்டும்.

பல வர்ணத்தில் லுங்கி அணிந்து முழங்காலுக்கு வெகு மேலே உயர்த்திக் கட்டி பீடி பிடித்தபடி நடக்கிற ஆண்கள் தான் கேரளத் தனிமையைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம்.

பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சூடிதார் கன்னியர் சைக்கிள் மணி ஒலித்துக் கொண்டே வருகிறார்கள். ஒருத்தி வெள்ளையாகச் சிரித்துக் கையை அசைக்கிறாள். மகள் நினைவு வரத் திரும்பக் கையசைக்கிறேன்.

கரையில் வேகமாகப் போகிற டெம்போ பெட்டிக்கடையில் நிற்கிறது. கால்கேட் விளம்பரமும், ஒருவருக்காக உருவாக்கப்பட்ட மற்றவர் பற்றிய வில்ஸ் சிகரெட் விளம்பரமும் (சிகரெட்டும் புற்றுநோயும் போல) எழுதிய கடை. நாற்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் அலமாரியிலிருந்து டிடர்ஜெண்டோ சோப்போ எடுத்துத் தருகிற மாக்சிப் பெண் ஒரு வினாடி என் படகை அசிரத்தையாகப் பார்த்துவிட்டு வியாபாரத்தைத் தொடர்கிறாள்.

பக்கத்து வீடுகளில் மின்சார விளக்கு அணைத்து, நிலவிளக்கேற்றி நாம ஜபம் செய்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது.

அந்த விளக்குகள் தவிர வெளிச்சம் இல்லை. கருப்புத் திரவமாக இருட்டில் மினுமினுக்கும் காயல். தூரத்தில் சீன வலைகளை மீன் பிடிக்கத் தாழ்த்திக் கொண்டிருக்கிறவர்களின் சத்தம் காற்றில் கலந்து வருகிறது.

திரும்பலாம் என்கிறேன்.

********************************************************************

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 6

கேரளத்தில் சர்வசாதரணமாகப் பார்க்கவும், கேட்கவும் கிடைக்கும் இரண்டு வார்த்தைகள் - 'கள்ளு' மற்றும் 'பணிமுடக்கு'.

தலை குளிக்காத மலையாளிப் பெண்ணைக்கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், கள்ளுக்கடையில்லாத கேரள கிராமத்தைப் பார்க்க முடியாது.

பணிமுடக்கு என்ற வேலை நிறுத்தம் அதே போல் வருடம் முழுக்க நடக்கிற விஷயம். யார் ஆண்டாலும், யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பணிமுடக்கு இல்லாமல் ஒரு மாதமும் கழியாது.

வேம்பநாட்டுக் காயல் பக்கம் கால் வலிக்க நடந்து விட்டுப் புட்டும் கடலையுமாகக் காலைச் சாப்பாடும், இன்னும் நாலு வருஷத்துக்குச் சேர்த்து வைத்து மிக நீண்ட குளியலும் முடித்து ( இந்தச் சுகானுபவம் சென்னை நண்பர்களுக்குச் சொல்லாமலேயே புரியும்) டபுள் முண்டான எட்டு முழ வேட்டியும் ஷேர்ட்டுமாய் அம்பலப்புழைக்குப் புறப்படத் தயாராக இறங்க, பணிமுடக்கு குறுக்கே புகுந்து ஓடியது.

டாக்சி ஓட்டிக்கான் பாடில்ல. கல்லு கொண்டு எறியும்.

யாரு?

பணிமுடக்குக்கார் தன்னே.

அதான்பா, யாரு ஸ்டிரைக் செய்யறது?

சிவசேனா, சாரே.

பால் தாக்கரேயின் சிவசேனை ஆள் பலமுள்ள கட்சிதான். அது மராத்திய மாநிலத்தில். இந்த நிமிடத்தில் 'சாம்னா' படித்துக் கொண்டு, 'சத்ரபதி சிவாஜி மஹராஜ் கி ஜெய்' சொல்லிக் கொண்டு அங்கே லட்சக் கணக்கில் சைனிக்குகள் வெப்ப மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கேரளத்தில்? இருக்கப்பட்ட சிவசேனைக் காரர்களை நாலு மடேடார் வேன்களில் அடைத்துக் கொண்டு வந்துவிடலாம். அதிலும் இரண்டு வேன் மும்பை ரிஜிற்றேஷனோடு, பதினெட்டுப் படி ஏற வந்த மராத்திச் சாமிகளாயிருக்கும்.

என்ன போச்சு? நீர்க்கோலி (தண்ணீர்ப் பாம்பு) நினைத்தாலும் அத்தாழம் (ராச்சாப்பாடு) முடக்கும் கேரளத்தில், சிவசேனை நினைத்தாலும் ஜாம்ஜாமென்று பணிமுடக்கலாம். யார் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தாலும் உடனே அன்போடு ஆதரித்து அதை வெற்றிகரமாக்கக் கேரளீயர் கொடுக்கும் ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்ல முத்தமிழில் (டி.சி.புக்ஸ், கோட்டயம் பதிப்பித்த மலையாள அகராதிப்படியான பொருள் கொள்க) வார்த்தை இல்லை.

விஷயம் இதுதான். சபரிமலை யாத்திரைக்கு, ஆன்றணியின் ஜக்ய ஜனாதிபத்ய முன்னணி அரசு பஸ் டிக்கட்டுக்கு மேல் சர்சார்ஜ் விதிக்க, மந்திரிசபையில் கதாகத வகுப்பு (போக்குவரத்து) மந்திரி பகுமானப்பட்ட பாலகிருஷ்ண பிள்ளை அதை நடப்பாக்க, போராட்டம் என்று மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சபரிமலை போகக் கிளம்பிய சிவசேனைக் காரர்கள் வண்டியோடு பத்தனந்திட்ட பஸ் ஸ்டாண்டில் அதிரடியாகப் பிரவேசிக்க, பொலீஸ் தடியடியில் மனுஷரும் மாடும் எல்லாம் காயம் அடைய, அடுத்த நாள் தென் மாவட்டங்களில் சிவசேனா பந்த் அறிவிப்பு.

இவ்வளவுக்கும் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழை வட்டத்தில் முந்திய நாள்தான் ஏதோ உள்ளூர் விஷயமாகச் செறிய தோதில் ஒரு 'பந்த்'. கடையடைப்பு. ஆனால் என்ன? இன்னொரு நாள் பணிமுடக்கு என்றால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?

சாயந்திரம் ஐந்து மணிக்குப் பணிமுடக்கு முடிந்ததும் அம்பலப்புழை போகலாம் என்று தள்ளிப்போட்டு, காயலைப் பார்க்க பிரம்பு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கரிக்கயும், சம்பாரமும் குடித்தபடி (என்றால் இளநீரும், மோரும்) கையில் எடுத்துப் போயிருந்த குந்தர் கிராஸின் 'கிராப் வாக்' நாவலை முழுக்கப் படித்துத் தீர்த்தேன்.

அப்புறம் எடுத்தது சில மலையாள வாரப் பத்திரிகைகளை. பாதிப் பக்கம் கருணாகரன் வெர்சஸ் ஆன்றணி. முன் முக்ய மந்திரி தோழர் நாயனார் தில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயன்ஸ் இன்ஸ்ற்றிட்யூட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கருணாகரனும், மார்க்சிஸ்ட் நேதாவு அச்சுதானந்தனும் அன்போடு கைகுலுக்குகிறார்கள். மார்க்சிஸ்ட் நட்பைக் கொண்டாடுவதற்காக, கருணாகரனின் மகனும் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான முரளீதரன் லண்டனுக்கு அவசரமாகப் புறப்பட்டுப்போய், கார்ல் மார்க்ஸ் சமாதியில் மலரஞ்சலி செலுத்தி ஸ்வெட்டரோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

கருணாகரன் ஆதரவாளர்களும், ஆன்றணி ஆதரவாளர்களும் தில்லிக்குக் குளிரில் நடுங்கிக் கொண்டு படைபட்டாளமாகக் கிளம்பிப்போய் கதவிலக்கம் பத்து, ஜன்பத் வீட்டு வாசலில் சோனியா காந்தியிடம் புகார், பதில் புகார் என்று பட்டியல் கொடுக்க ம·ப்ளரைத் தலையில் சுற்றிக் கொண்டு தேவுடு காக்கிறார்கள். 'அம்மா என்னைப் பார்த்துச் சிரித்தார் - நாளைக்கே ஆன்றணியை அம்பேலாக்கிடுவார்னு புரிஞ்சு போச்சு' என்றோ, 'அம்மா கருணாகரன் பேரைக் கேட்டதுமே மூக்கை உறிஞ்சினார். அந்த ஆள் அரசியல் ஆட்டம் க்ளோஸ் இனிமே' என்றோ சந்தோஷத்தோடு உள்ளூர்ப் பத்திரிகைகளுக்குப் பேட்டி தருகிறார்கள்.

கேரளா காங்கிரஸ் மாணி குழு, கேரளா காங்கிரஸ் பாலகிருஷ்ண பிள்ளை குழு, இடது சாரியிலிருந்து வெள்ளை சாரியுடுத்து வலம் தாவிய முன்னாள் மார்க்சிஸ்ட் கௌரி அம்மாளின் கட்சி, லீக், தேசலாகிப் போன சி.பி.ஐ என்று ஏகப்பட்ட கட்சிகள், குழுக்கள், தலைவர்கள். நம்மூர்ப் பத்திரிகைகள் சினிமாக்காரர்களைப் பிடித்துத் தொங்க, மலையாளிகளுக்குச் செய்தித் தீனி போடுவது இந்த அரசியல் தான்.

இதற்கு இடையே கேரளச் சட்ட மன்ற உறுப்பினர்கள் காடு மலையெல்லாம் கஷ்டப்பட்டு ஏறி, அவர்கள் பிரதேசத்து நதிகளிலிருந்து தமிழகம் தண்ணீர் திருடுகிறதா என்று துப்பறியத் தொடங்கி வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்கள். தண்ணீர் திருட்டெல்லாம் ஒன்றுமில்லை, நதி போகிற திசையே தமிழகம் நோக்கித்தான் என்று ஈன சுவரத்தில் காலைப் பிடித்தபடி சொல்ல, அதிகாரிகள் 'அன்னிக்கே இதானே சார் சொன்னோம்' என்று முணுமுணுக்கிறார்கள்.

ஆன்றணியோ பரப்பிரம்மமாக 'சதாம் உசைனைக் கவுரவமாக விசாரிக்க வேண்டும்' என்று ஜார்ஜ் புஷ்ஷ¤க்குக் கோரிக்கை தெரிவித்து அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்.

பத்திரிகையில் வாசகர் கடிதம் பகுதியில், அமெரிக்காவில் சிக்காகோவில் உட்கார்ந்து கொண்டு சாக்கோ கணியாலில் என்ற மலையாளி இன்னொரு டிபிக்கல் மலையாளி நடப்புக்காகக் கவலைப்பட்டு எழுதியிருந்தார். அது திடீர் விடுமுறை பற்றியது.

கேரளத்தில் எந்த மாஜி மந்திரிக்குச் சிவலோக பதவி கிடைத்தாலும், உடனே சர்க்கார் விடுமுறை. ·பைலை மூடி வைத்துவிட்டு, சேட்டரும், சேச்சிமாரும் குடையோடு வீட்டுக்குப் பகல் தூக்கம் போடத் திரும்ப, அரசு ஊழியர்க்குச் சம்பளப் பணம் போன்ற வகையில் இருபது கோடி ரூபாய் தண்டத்துக்குச் செலவு.

கிட்டத்தட்ட அறுபது மாஜி மந்திரிகள் இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கு இப்பவோ அப்பவோ என்று நிற்கிறது. கேரளம் தாங்குமா இதை என்ற சிக்காகோ சாக்கோச்சனோடு நானும் நொந்து நூலாகிப் போனேன்.

திரும்பவும் டி.வி. திருவனந்தபுரம் திரைப்பட விழா.

சோமரத்ன திஸ்ஸநாயகா என்ற இலங்கை இயக்குனர் எடுத்த 'லிட்டில் ஏஞ்ஜல்' படம் பற்றிய உரையாடல். மலையகத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த ஒரு தமிழ்ச் சிறுமிக்கும், தோட்ட முதலாளி மகன் சிங்களச் சிறுவனுக்கும் நடுவே இயற்கையாக ஏற்படும் நட்பு பற்றிய அழகான அந்தப் படத்தை யார் பார்க்கிறார்களோ இல்லையோ, சுஜாதாவும் மணிரத்தினமும் கட்டாயம் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து, முழுக்க முழுக்கத் தமிழ் வசனங்களும் ஆங்கில, சிங்கள சப் டைட்டில்களுமாக, 'இன் தி நேம் ஓ·ப் புத்தா' என்ற இலங்கைப் படம் பற்றி அதைத் தயாரித்த மிஸ்டர் டச்வாட்டரோடு பேட்டி. டச்வாட்டர் சரளமாக மலையாளத்தில் சம்சாரிக்க ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்புறம் தான் மனதில் ஒரு பளிச். புள்ளிக்காரன் மலையாளிதான். தொடுப்புழ என்ற குடும்பப் பெயர். அதை அதிரடியாக மொழிபெயர்த்து டச்வாட்டர் ஆக்கி விட்டார்.

லண்டனில் தன் ஈழத் தமிழ் நண்பர்கள் விவரித்த சோகங்களைக் கேட்டு அதிர்ந்து போய், அனுதாபம் கொண்டு அவர்கள் நாடு விட வேண்டி வந்த காரண காரியங்களைச் சித்தரிக்கும் இப்படத்தை உருவாக்கியதாகச் சொன்னார் ராஜேஷ் டச்வாட்டர். லோ பட்ஜட் படம் இல்லை என்பதால் விவரணையோடு கூடிய காட்சிச் சித்தரிப்புகள். மலையாள பூமியிலேயே இலங்கைச் சூழ்நிலையைத் தத்ரூபமாகப் பதிவு செய்த படத்தின் காட்சிகள் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். சொந்த பூமியை விட்டுச் சாரி சாரியாக நடக்கும் குடும்பங்கள், நடைக்கு இடையே ஓடி வந்து மகனின் கல்லறையில் அழும் அன்னை, கொட்டும் மழையில் கையில் இறந்த மகனின் சடலத்தோடு புரட்சிப்படைத் தலைவன் முன்னால் நடந்து சடலத்தைக் கிடத்தி, 'நாம் இப்படி வித்துக்களையே பறிகொடுத்திட்டு இருக்கோம். அப்புறம் அறுவடைக்கு என்ன மிஞ்சும்?" என்று கதறும் தந்தை..

மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கண்ட சில காட்சிகளிலேயே தெரிந்து போனது.

லண்டனில் அரங்கு நிறைந்து படம் ஓடியதாகப் பேட்டியில் சொன்னார் ராஜேஷ். தமிழ்நாட்டில் இப்படம் பார்க்க வாய்ப்புக் கிட்டுமா என்பது தெரியாது. ஆனால், தமிழ் டிவி சானல்களிலும் இது பற்றிப் பேசப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரியும்.

நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோச·ப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப் படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்.

சிவசேனைக்கு நன்றி. ஒரு பகல் பொழுது உருப்படியாக இப்படிக் கழிய எனக்கு வசதி செய்து கொடுத்ததற்கு.

சேட்டா, அம்பலப்புழ போகான் கார் வன்னெத்தி.

*********************************************************************
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் - 7


கோயில் வாசல் கடைகளுக்கு என்று ஒரு பொதுத்தன்மை உண்டு.

பிஸ்லரி மினரல் வாட்டர் பாட்டில், கோலக் குழல், பிளாஸ்டிக்கில் சிறைப்பிடித்த தெய்வத் திருப்படங்கள், பாசிமணி மாலை, இரண்டாவது தடவையாக டேப் ரிக்கார்டரில் போட்டால், யேசுதாஸ் உள்ளே சிக்கி அழும் பக்தி கேசட்டுகள், அமிர்தாஞ்சனம், கொண்டை ஊசி, பம்பரக் கயிறு, சீசனில் நூல் கயிற்றில் தூக்குப் போட்டுப் பாம்புப் பஞ்சாங்கம். அடுத்த வருஷத்துத் தினசரிக் காலண்டர்.

அம்பலப்புழை கோயில் வாசல் கடைகளில் மலையாளத்தில் மாத்ருபூமி காலண்டர். மற்றது முன் பத்தியில் உள்ளவை.

சேட்டா செருப்பு ஊறிப் போகணும். ஷேர்ட் இட்டுப் போகான் பாடில்யா.

கடைக்காரர்களின் கரிசனத்துக்கு நன்றி சொல்லி நடந்தேன்.

கடைகளைக் கடந்து இடது புறம் திரும்பினால் பொந்து போல் சிறிய வாசல்.

ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர் ஆக்ரஹிக்குன்னது முழுவன் நேரத்தே கிட்டும். ஸ்வர்ணமோ, ஸ்த்ரியோ, பின்னெ லோட்டரியில் வல்ய பம்பர் பிரைஸோ.

ஒண்ணும் வேணாம்ப்பா. கோயில் வாசல்லே விட்ட செருப்பு காணாமல் போகாமல் இருந்தால் போதும்.

பதில் சொல்ல வாயை எடுத்தால், அம்பல வாசலில் மோதிரக் கடை பரத்தியிருந்தவன் டியூப் லைட் வெளிச்சத்தில் 'வெள்ளி நக்ஷத்ரம்' சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் டேப் ரிக்கார்டரில் 'ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்னவர்.. கேவலம் நூறு ரூபயாணு'.

கேவலம் நூறு ரூபாய் கொடுத்து நவரத்தின மோதிரத்தை வாங்கி விரலில் போட்டுக் கொண்டு, தோளில் துணி சஞ்சியில் தங்கக் கட்டிகளும், கூடவே ஒரு தலை குளித்த ஸ்திரியுமாகச் சென்னையில் வீட்டுப் படியேறத் துணிச்சல் இல்லாததால், சாதுவாக அம்பலத்தின் உள்ளே நடந்தேன்.

முணுக் முணுக் என்று ஏழெட்டு ட்யூப் லைட் வெளிச்சத்தில் நிழலாட்டம் காட்டும் கம்பீரமான அம்பலத்தின் மரக் கூரை. சுற்றம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீபங்கள். ஒலிபெருக்கியில் பி.லீலாவின் குரலில் ஒழுகி வரும் நாராயணீயத்தில் பாதாதிகேச வர்ணனை.

எதிர்பார்த்ததுபோலவே வெளித் திண்ணையில் ஒரு கிழவர்.

முத்தச்சா, செருப்பு இங்கே விடலாமா?

அவர் தேர்தல் விளம்பரம் போல் இரண்டு விரலைக் காட்டினார்.

ஷேர்ட்டும் அழிக்கணும்.

சட்டையை அப்புறம் கழற்றுவதாகச் சொல்லி விட்டுத் திரும்பியபோது, மின்சாரம் போயிருந்தது. பாதாதி கேசம் கழுத்து வரை வந்து நிற்கிறது. எண்ணெய்த் தீபங்கள் இன்னும் பிரகாசமாகச் சுடர் விட்டு, சில நூற்றாண்டுகள் பின்னால் இட்டுப் போகின்றன. ஸ்ரத்திச்சுப் போகு. அவிடெ கல்லுண்டு. வயசன் குரல். பின்னணியில் ''ஈ நவரத்ன மோதிரம் தரிக்குன்ன..'.

கோயில் நடை அடைத்திருக்கிறது. அத்தாழ பூஜைக்கு இன்னும் அரை மணி நேரத்தில் திறப்பார்கள் என்று பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி சொல்கிறார்.

வெளிப்பிரகாரம் சுற்றி வருகிறேன்.

குஞ்சன் நம்பியார் முன்னூறு வருடம் முன்னால் ஓட்டந்துள்ளல் நிகழ்த்திய முன் மண்டபம். மரபுக் கலையான கதகளியையும், நாட்டார் கலையான கூத்தையும் இணைத்து அவர் உருவாக்கிய அருமையான கலை வடிவம் இது. சமூக அவலங்களைக் கிண்டல் செய்வதற்கும், அவை பற்றிய பிரக்ஞையைப் பொதுமக்கள் மத்தியில் விதைப்பதற்குமாக, ஓட்டந்துள்ளலை உருவாக்கிய குஞ்சன் நம்பியார் முதன்முதலில் அதை அரங்கேற்றியது அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தில் தான்.

கம்பீரமாகச் சரிந்து நின்றிருக்கும் குடமிழா ஒன்று மூங்கில் கூரை வேய்ந்த மண்டபத்தின் நடுநாயகமாக. குஞ்சன் நம்பியார் முழக்கிய தாளக் கருவி அந்த மிழா. அந்த மக்கள் கலைஞனை மனதில் வணங்கி முன்னே நடக்கிறேன்.

அவனையும் கூடிப் ப்ரதியாக்கி. ஞான் காணான் போயப்போழ் பாடில்ல என்னு பரஞ்š திரிச்சயச்சு. நாளெ மறுநாள் கோடதியில் ஹாஜராக்கும் என்னு கேட்டு.

மெலிந்து கருத்த ஒருத்தர் ஜமுக்காளத்தை உதறி விரித்தபடி சொல்கிறார். அகல் விளக்கு வெளிச்சத்திலும் அவர் முகத்தில் சோகம் நீளமாகக் கையெழுத்துப் போட்டுப் போயிருப்பது தெரிகிறது. சுற்றி நாலுபேர் ஆதரவாகத் தலையசைக்கிறார்கள்.

யார் காவலில் இருக்கிறார்கள்? எப்போது இவர் பார்க்கப் போனார்? கோர்ட்டில் விசாரிக்கப் போவது எதை? தொடர்கதையில் பாதிக்கு மேல் ஆரம்பித்துப் படிப்பதுபோல் இருக்கிறது.

சட்டென்று அவர் ஹார்மோனியத்தை எடுத்து மீட்டிப் பாட ஆரம்பிக்கிறார்.

தெச்சி மந்தாரம் துளசி
பிச்சக மாலகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னெக் கணிகாணேணம்.
வாகச் சார்த்து கழிஞ்ஞிட்டும்
வாசனப்பூ அணிஞ்ஞிட்டும்
கோபிகமார் கொதிக்குன்ன
முகம் காணேணம்.
மணிக்குழல் ஊதிக்கொண்டும்
மஞ்ஞச் துகில் சுத்திக் கொண்டும்..

கஞ்சிராவும் தாளமுமாக மற்றவர்கள்.

போன நிமிடத்தின் சோகம் கரைந்து போன இடம் தெரியவில்லை. கிருஷ்ணார்ப்பணம் எல்லாம். சோகமும் மகிழ்ச்சியும் கூடத்தான்.

மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள்.

பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்கிறார். சந்தன வாடை. மெல்லிய வியர்வை நெடி. பக்கத்தில் நிற்கும் பெண்ணின் தலைமுடியிலிருந்து கேசவர்த்தினி வாசனை. யாரோ கிராம்பு மெல்லும் வாடை. ஏன் சாமி, ராத்திரிக்கு ஆலப்புழையிலே ரூம் எடுத்துடலாமா? அம்பலத்துள்ளில் சம்சாரம் ஒழிவாக்கணும் தயவாயிட்டு.

மணிகள் முழங்குகின்றன. வரிசையாக ஏற்றி வைத்த நெய் விளக்குகளின் குளிர்ந்த ஒளி.

அம்பல நடை திறக்கிறது.

Tuesday, February 08, 2005

varuka

This blog is under construction. The mason works only during the weekends. Please visit again the coming Sunday. Inconvenience regretted.


p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது