Friday, November 09, 2007

ஓர்ம்மகளுடெ விருந்நு


காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து.

ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் - இது வெறும் தோற்றம் என்பவர்களும் வாழ்த்தப்படட்டும் - நோஸ்டால்ஜியா என்பது ஐம்பது அறுபது வருடப் பழைய அனுபவங்களை நினைவு கூர்தல் என்பது கடந்துபோய், வெறும் பத்து வருடத்துக்கு முந்திய கணங்களும் ‘இனி இவை திரும்பப் போவதில்லை’ என்ற போதம் மனதில் அழுத்த, அகப் பயணங்களுக்குக்கதவு திறந்து காத்திருக்கின்றன.

பத்து வருடத்துக்கு முன் மலையாள மொழியில் ‘கலாகௌமுதி’ என்ற ஒரு வாரப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. இன்னும் தான் அது வருகிறது. அச்சு மசிவாடையும், சிக்கும் சிடுக்குமான கேரள அரசியல் வாடையும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான ஒற்றை முகமுமாக வெளியாகும் இன்றைய கலாகௌமுதி பற்றி இங்கே எழுத ஒன்றுமில்லை.

அந்தப் பழைய கலாகௌமுதியில் நான்கு தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. நான்குமே பழையதை அசைபோடுவதை ஒரு கலைத்தன்மையோடு செய்தவை. முதலாவது கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் என்ற கதகளிக் கலைஞரின் சுயசரிதம். அடுத்தது பேராசிரியர் கிருஷ்ணன் நாயர் தன் அனுபவங்களின் அடிப்படையிலும் வாசிப்பின் அடிப்படையிலும் மலையாளப் புத்திலக்கிய க்கங்களை வாராவாரம் விமர்சனம் செய்த இலக்கிய வாரபலன் கட்டுரைப் பகுதியான ‘சாஹித்ய வாரபலம்’. அடுத்தது, கேரள முதலமைச்சராக இருந்த சி.அச்சுதமேனோன் தொடர்ந்து எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள். நான்காவது, மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறந்த பத்திரிகையாளர் என்று அறியப்பட்ட வி.கே.மாதவன்குட்டி எழுதி வந்த ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ என்ற ‘நினைவுகளின் விருந்து’.

இவர்களில் யாருமே இன்று நம்மிடையே இல்லை. 2006 மார்ச் முதல் வாரத்தில் பேராசிரியர் கிருஷ்ணன் நாயரும், அதற்கு ஓர் ஆண்டு முன் வி.கே மாதவன் குட்டியும், அதற்கும் சில ஆண்டுகள் முன் மற்ற இருவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்தார்கள். பழைய கலாகௌமுதி பத்திரிகை இவர்களுக்கு முன்பாக அதே பட்டியலில் இடம் பிடித்து விட்டது. னாலும், இவர்கள் எழுத்தில் வடித்த 1930-60 காலகட்டங்களின் கேரளபூமியும், அவை வெளியான 1990-1995 காலமும் ஒரு வாசகன் என்ற விதத்தில் என் மனதில் அழியாத இடத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டவை. பழையதை நினைவு கூர்வது குறித்த நினைவு கூர்தலான இதை ஒரு derivative nostalgia என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.

மாதவன் குட்டி ஒரு பத்திரிகையாளராக அறியப்பட்டவர். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதிய அவர் வாழ்க்கையின் முதல் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் மட்டுமே கேரளத்தில் மலபார் பிரதேச கிராமத்தில் வாழ்ந்தவர். அந்த நினைவுகளோடு அப்புறம் ஐம்பது வருடத்துக்கு மேலாக தில்லியில் நிரந்தரமாகக் குடியமர்ந்து பத்திரிகைப் பணி செய்துவந்தார். தன் இளமைக் கால நினைவுகளை அடுத்து வந்த வாழ்க்கை அனுபவங்கள் பாதிக்காமல் பாதுகாத்து அவற்றை எழுத்தில் வடிக்க முற்பட்டபோது அவர் ஒரு புது இலக்கிய வடிவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் செய்தியாக மட்டும் தன் பிள்ளைப் பிராயத்தைப் பதிவு செய்ய மாதவன் குட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால், அவர் இலக்கியப் படைப்பு எதையும் அதுவரை எழுதியிருக்கவில்லை. ஒரு நாவலாக எழுதினால் அனுபவமின்மை காரணமாகச் சொல்ல வந்தது கட்டுமீறிப் போய்த் தோல்வி ஏற்படலாம். நம்பகத்தன்மை குறையவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்சுருக்கதோடு சகலமான விதத்திலும் தான் மனதில் காத்து வைத்திருந்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அவர் ஏற்படுத்திக் கொண்டது வாழ்க்கைச் சித்திரங்களை (bio-sketches) கோர்த்துத் தொடுத்து நீட்சியடையச் செய்யும் ஒரு சுவாரசியமான கலவையான வடிவம்.

மாதவன் குட்டி இந்தப் படைப்பில் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் காட்டுவது ஒரு சாக்குத்தான். அவற்றின் வழியே ஒரு சமுதாயத்தின் இருப்பை, வளர்சிதை மாற்றத்தை, மாற்றத்தை எதிர்த்து, அது சாத்தியமில்லை என்று தெரிந்து நிறையச் சங்கடத்தோடும் சகிப்புத்தன்மையோடும் ஏற்றுக் கொண்டு தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு பாரதப் புழையோரத்துக் கிராமத்தைக் காட்டுவதே அவருடைய நோக்கம்.

‘நான் பிறந்தது ஒரு கிராமத்தில். பாலக்காடு தாலுக்காவில் உள்ள கிராமம்’ என்று சாதாரணமாகத் தொடங்குகிறது ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையில் இந்த நூல் நகர்கிறது. அந்த வயதுக்கே உரிய நிஜமும், நிழலும், கற்பனையும், துளிர்விடும் சைகளும், குழந்தைமையும், மெல்ல விழித்தெழும் இனக்கவர்ச்சி எண்ணங்களுமாக அந்தப் பிராயத்தில் திரும்ப நுழைகிறபோது புனைவு மெல்லிய பூச்சாகக் கவிகிறது.

மாதவன் குட்டியின் கிராமம் பெரும்பாலும் நாயர் குடும்பங்களால் ஆனது. அதிலும் கிரியத்து நாயர்கள், அத்திக்குறிச்சி நாயர்கள், வெளுத்தோடன் நாயர்கள் என்ற மூன்று பிரிவு நாயர்களே அங்கே இருந்தார்கள். நாயர் தரை என்று அவர்கள் வீடுகள் இருந்த பகுதி அழைக்கப்பட்டது.
‘செறுமன்’ (சிறுமகன்) என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தவரும் சிலர் கிராமத்தில் உண்டு. அவர்களுக்குக் குளத்தில் குளிக்கத் தனிப் படித்துறை. அங்கே அவர்கள் வளர்க்கும் மிருகங்களும் இறங்கிக் குளித்துச் சேறாகிக் கிடக்கும். அவர்களின் கோவில்கள் கூடத் தனியானவை. நாயர்கள் வழிபடும் கோவில்கள் க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் கோவில்கள் காவுகள் என்று பிரித்துக் காட்டி வழங்கப்பட்டன.

கிராமத்து நாவிதர் சின்னான் நாயர்களுக்கு கிராப் வெட்டிவிடுவார். அவருடைய சகோதரர் பக்கத்து கிராமங்களில் பட்டன்மாருக்கு (அந்தணர்களுக்கு) குடுமி திருத்தி, நாள் நட்சத்திரம் பார்த்து தாடி மழித்து விடுவார். இளைய சகோதரர் ஈழவருக்குத் தலையில் கிண்ணியைக் கவிழ்த்ததுபோல் ‘பப்பட வெட்டு’ என்று வெட்டிவிடுவார். அந்தணர்கள் குறைவானபடியால் கட்டணத்தை அதிகமாக்குகிறார் நாவிதர். அவர்களோ, மாதத்துக்கு இரண்டு முறை சவரம் என்னும் வழக்கத்தை மாற்றி மாதம் ஒரு முறையாக்கி விடுகிறார்கள். சித்தம் தடம்புரண்ட நாவிதர் அந்தணர்களுக்கும் பப்பட வெட்டு என்று மாற்றி வெட்டித்தள்ள கலவரம் ஏற்படுகிறது. மாதவன் குட்டி விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு சிறுவனின் பார்வையில் பட்ட சம்பவம் இது. அவ்வளவுதான்.

ஒரு பிரம்மாண்டமான சமூக, அரசியல் விழிப்புணர்ச்சியோடு கேரளத்தில் பெருமாற்றம் நிகழ்ந்த காலகட்டத்துக்கு சற்றே முற்பட்ட 1930-40 காலம் மாதவன் குட்டி சித்தரிப்பது. அந்தக் காலப் பாலக்காட்டு கிராமத்துக்கு அப்ரஹாம் புதிதாக வந்து சேர்கிறார். அவர் தபால்காரராகப் பொறுப்பேற்று கிராமத்தில் நுழையும்போது, கிராம மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். முதன்முறையாக ஒரு கிறிஸ்துவர் கிராமத்திற்கு வந்திருக்கிறார். அந்தக் கால நாயர்கள் ஜாதி உணர்வில் ஊறியவர்கள். ஸ்தானி நாயர் என்று குலப்பெருமை பேசுகிறவர்கள். அஞ்சல் சேவையை அவசியம் கருதி ஏற்றுக் கொண்டாலும், தபால் அட்டையில் எழுத மாட்டார்கள். அது செறுமன்கள் எழுதிச் சேதி சொல்ல. தபால் உறையில் கடிதம் எழுதி வந்து சேர்ந்தாலும், முதலில் மேல் விலாசம் பரிசோதிக்கப்படும். மகா ராஜ ராஜ ஸ்ரீ என்பதன் சுருக்கமாக ம.ரா.ரா. என்று பெயருக்கு முன்னால் போடாததால் தபால்காரரிடமே கடிதத்தைத் திருப்பிக் கொடுக்கிறார் ஒருத்தர். அந்த ஊரில் கிறிஸ்துவரான அப்ரஹாம் தபால்காரராக வரும்போது நாயர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை அவர் தொட்டுக் கொடுத்த கடிதத்தைக் கையில் வாங்கினால் தீட்டுப் பிடிக்குமா என்பது.

புரையத்து நாராயணன் நாயர் பிரச்சனையைத் தீர்க்கிறார். அவர் கோட்டயத்தில் வேலை பார்க்கும்போது அங்கே நாயர்கள் கிறிஸ்துவர்களோடு பழகுவதைப் பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் தொட்டால் தீட்டு இல்லை என்று அவர் ‘அனுபவத்தில்’ சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து சில புதிய நியமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அப்ரஹாம் வீட்டில் படியேறி வந்து கடிதம் கொடுத்தபிறகு, குடிக்கத் தண்ணீர் கேட்டால் தரலாம். அவர் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்துக் குடிக்க வேண்டும். அப்புறம் அப்படியே வைத்துவிட்டுப் போகலாம். கவிழ்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ‘நியமம்’ செறுமன்களுக்கு ஆனது. ஆக, அப்ரஹாம் இடைத் தட்டில் அந்த சமூக அமைப்பில் இருத்தப்படுகிறார்.

அப்புறம் அப்ரஹாம் கிராமத்தில் வீடு வாங்குகிறார். பரம்பு (தோட்டம்) வாங்குகிறார். ரப்பர் செடி வரவழைத்து வளர்க்கிறார். நிலத்தில் கப்பை (மரச்சீனிக் கிழங்கு) பயிரிடுகிறார். ‘இது கிறிஸ்துவர்கள் சாப்பிடற சமாச்சாரம். நாயர்களுக்கு ஏற்பட்டதில்லை’ என்று கள்ளச் சிரிப்போடு நாயர்கள் அப்ரஹாமின் நடவடிக்கைகளைக் கவனிக்கிறார்கள். அவர் திரேசம்மையைக் கல்யாணம் செய்து கிராமத்துக்குக் கூட்டிவருகிறார். கழுத்தில் நாலு பவுன் நகையும், நீண்டு கருத்த கூந்தலுமாக கிராமத்துக்கு வரும் திரேசாளை நாயர் ஸ்த்ரீகளுக்குப் பிடித்துப் போகிறது - அவள் நெற்றியில் சந்தனப் பொட்டு இல்லாமல் போனாலும்.

அப்ரஹாம் தலைமை தபால் உத்தியோகஸ்தனாகும்போது கிராம போஸ்ட் ஆபீசில் அவருக்குக் கீழ் உத்தியோகம் பார்க்க ஒரு நாயர் நியமிக்கப்படுகிறார். மெல்ல கிராமப் பிரமுகராக உயரும் அப்ரஹாம் ‘அவுரச்சன்’ என்ற மரியாதையாக அழைக்கப்படுகிறார். அவர் உயிர் பிரியும்போது கிறிஸ்துவ சமுதாயத்தின் அரசியல் அங்கமான கேரள காங்கிரஸ் உயிர் பெறுகிறது. கிராமத்தில் இன்னும் சில கிறிஸ்துவக் குடும்பங்களும், மாதாகோவிலும், கப்பையும் மெல்ல நுழைந்து அந்த சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கங்களாகின்றன.

ஒரு நாலு பக்கத்தில் அப்ரஹாம் மெல்ல எழுந்து கிராமத்துப் பெரிய மனிதராவதை அற்புதமான சொற்சிக்கனத்தோடு சித்தரிக்கிறார் மாதவன் குட்டி. ஓவியர் நம்பூத்ரி வரைந்த கோட்டோவியத்தில் அப்ரஹாம் இன்னும் உயிரோடு நடந்து வருகிறார். பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது நம்பூத்ரியின் சித்திரங்களுக்காகவே பத்திரிகையைப் பிரித்ததும் ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ பக்கத்தைத் தேடிப் புரட்டிய ஓர்மை இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அந்தக் கோட்டோவியங்களில் பலவும் புத்தகத்திலும் இடம் பெற்றது இந்த நூலின் வாசிப்பு அனுபவத்தை இன்னும் முழுமையாக்குகிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஆண்டிப் பண்டாரங்கள் கிராமத்தில் வந்து ஊர்ப்பொதுவில் ஆலமரத்தடியில் தங்குகிறார்கள். காலையில் ஆலமரத்தில் காகங்கள் விழித்தெழும்போது அவர்களும் எழுந்து அன்னக் காவடிகளோடு பக்கத்து கிராமங்களுக்குப் போகிறார்கள். அவர்களின் மனைவிமார், கிராமத்தில் எண்ணெய் விற்கிறார்கள். ஆண்டிகளும் அவர்களின் மனைவிகளும் ராத்திரியில் சண்டை போட்டால் ஆலமரத்துக் காக்கைகள் விழித்தெழுந்து பெருஞ்சத்தத்தோடு கரைய ஆரம்பிக்கின்றன. இந்தத் தொல்லைக்குப் பயந்து அவர்கள் குடும்பங்களில் கலகமே ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் சிறப்பு அம்சம் இது என்பதை மாதவன் குட்டி சொல்லாமல் சொல்கிறபோது நமக்குள் ஒரு புன்சிரிப்பு எழுகிறது.

மழை பெய்யாதபோது, வீடு வீடாகச் சென்று ‘மானத்து மகாதேவா, மழைபெய்தால் காதோ’ என்று தமிழில் பாடிக் கும்மியடிக்கிறார்கள் ஆண்டிப் பெண்கள். எண்ணெய் விற்க வந்த ஒரு ஆண்டிச்சிப் பெண்மேல் கண் வைக்கிறார் தரவாட்டு நாயரான கிட்டுண்யார் (கிட்டு நாயர் என்ற கிருஷ்ணன் நாயர்). கமலேடத்தி (கமலாக்கா) கழுத்து டாலர் காணாமல் போகிறபோது எண்ணெய் விற்க வந்த ஆண்டிச்சிதான் திருடிப் போயிருக்கிறாள் என்று கிட்டுண்யார் அவளைத் தேடிப்போய், ஆளில்லாத இடத்தில் அவள் உடல் முழுக்கத் தடவிச் சோதனை நடத்துகிறார். நகை கிடைக்கிறது. அதை அவர்தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தார் என்று கமலேடத்திக்குத் தாமதமாகத் தெரிகிறது.

மாதவன் குட்டி காட்டும் கிராமத்தில் ஒரு வேசியும் உண்டு. குஞ்ஞு மாதவி என்ற அந்தப் பெண்ணை ஒரு நாயர் பையன் காதலித்துக் கைவிட்டுப் போயிருக்கிறான். அவளுடைய தேநீர்க்கடைக்குப் போகவேண்டாம் என்று சிறுவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அங்கே உள்ளே நுழைந்து மெல்ல வெளியே வருகிறவர்களைப் பற்றிய குறுகுறுப்பான பார்வையை, எண்ண ஓட்டங்களை பதின்ம வயது மாதவன் குட்டி அற்புதமாகப் பதிவு செய்கிறார்.

ஒரு நினைவு, அது சார்ந்து ஒரு நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் முக்கியப் பாத்திரமான கிராமத்து ஆண் அல்லது பெண் பற்றி ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம், அந்தச் சித்திரத்தினடியில் பிறக்கும் இன்னொரு நினைவு, இன்னொரு வாழ்க்கைச் சித்திரம் இப்படிப் பின்னலிட்டுப் போகிறது மாதவன் குட்டியின் புத்தகம்.

பழைய கால தென்னிந்திய சமூகத்தில் அவ்வப்போது நிகழும் சம்பவமான யாராவது வீட்டை விட்டுப் போய் அலைந்து திரிந்து விட்டு சாவகாசமாகப் பல வருடம் கழித்துத் திரும்ப வருவது மாதவன் குட்டியின் கிராமத்திலும் நடக்கிறது. நான்கு பெண்குட்டிகளுக்குத் தந்தையான வாத்தியார் குட்டிராமன் நாயர் வீட்டை விட்டுப் போய் பதினெட்டு வருடத்துக்கு அப்புறம் திரும்பி வருகிறார். மனைவி பாஞ்சாலியம்மையும் குடும்பமும் ஏதும் நடக்காததுபோல் அவர் வரவை ஏற்றுக்கொள்கிறார்கள். பள்ளிக்கூட வாத்தியார் வேலை திரும்பக் கிடைக்கிறது. இன்னொரு முறை தந்தையாகிறார் குட்டிராமன் நாயர். ஐந்தாவது பெண்குழந்தை இப்போது.

மொத்தம் நூறு வார்த்தைகளுக்குள் இத்தனையும் சொல்லி முன்னால் போகிறார் மாதவன் குட்டி. வார்த்தைகளுக்கு இடையே உள்ள வெளியைக் கட்டுக்குள் வைக்கத் தெரிந்த அவருக்கு படைப்பின் முழு வெளியும், அதைச் சார்ந்த புறவெளியும் இயல்பாக வசப்படுகின்றன. ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ நூலைத் திரும்பத் திரும்ப வாசித்து அனுபவிக்க வைப்பது அவருடைய இந்தத் திறமைதான்.

(இரா.முருகன்)
19 மார்ச் 2006எடின்பரோ, இங்கிலாந்து

(எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் இடம் பெற்ற கட்டுரை)

Tuesday, November 06, 2007

ஒரு புத்தகம் - ஒரு முன்னுரை

குளிக்கக் காசு கேட்கிற ஸ்காட்லாந்தில், என் பக்கத்து வீட்டுக்காரர் வித்தியாசமான பேர்வழி. விடிகாலையில் குளித்து முடித்து, சுத்தமான, கனவான்ரக உடுப்புகள் அணிந்து சுறுசுறுப்பாக எனக்கு முன்னால் ஓட்டமும் துள்ளலுமாக மாடிப்படி இறங்கிக் கொண்டிருப்பார். ராத்திரி, பகல், சாயங்காலம் என்று எந்த நேரத்தில் கண்ணில் பட்டாலும் த்ரீ பீஸ் சூட், தொப்பி, பளபளக்கும் ஷூவோடு தான் காட்சி தருவது வழக்கம். புத்துணர்ச்சியூட்டும் சோப்பு விற்பதற்காக வருடக் கணக்காக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறவராக அவர் இருக்கலாம் என்று கற்பனை செய்திருந்தேன். அது ஓர் உன்னதமான சோப்பாக இருக்கக்கூடும். குளித்து முடித்தவுடன், இன்று புதிதாகப் பிறந்த உணர்ச்சியைத் தரும் அந்த அற்புதப் பொருளை அனுபவித்த ஆனந்தத்தை அவர் உடலாலும் மனதாலும் முழுவதும் பிரதிபலிக்கும்வரை பொறுமையாகத் தினமும் காமெராவை ஓடவிட்டுக்கொண்டு யாரெல்லாமோ காத்திருக்கிறார்கள். குளிக்கவும், உடுக்கவும், நடக்கவுமாகப் பரிசுத்தமாக நகரும் நாட்கள் எல்லாம அவருக்கு உடமையானவை.

இந்தக் கற்பனை கலைந்தது அண்மையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுதில். அழைப்பு மணியை ஒலித்து, என் வீட்டு வரவேற்பறையில் அவர் நுழைந்தபோது நான் கம்ப்யூட்டரில் கதை எழுதிக்கொண்டிருந்தேன். மாசு மறுவற்ற அவருடைய சுத்தத்தின் முன் நான் தூசியாகக் கரையும் முன்னால், வந்த விஷயத்தைக் கூறினார். எங்கள் இரண்டு வீட்டுக்கும் நடுவே ஓடும் கழிவுநீர்க் குழாயில் அடைப்பு. அதைச் சரிசெய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். செலவை நான் பங்கு போட்டுக்கொள்ள முடியுமா? முப்பது பவுண்ட் ஆகக்கூடும்.

கழிவும் காசும் இதர அசுத்தங்களும் இல்லாத உலகில் அவர் இல்லை என்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. ஃப்யூனரல் டைரக்டராக இருக்கிறாராம். சாவுச்சடங்கு நிர்வாகி. கறுப்பு நிற சூட்டும் தூய வெள்ளைச் சட்டையும் மிடுக்கான டையும் எல்லாம் சவ அடக்கங்களை நிர்வகித்து நடத்திக்கொடுப்பதற்கான உத்தியோக உடுப்பு. கண்ணியத்தோடும் மிடுக்கோடும் தினசரி சாவைச் சந்திக்கிற அந்த மனிதரிடம் நான் கதை எழுதுவதாகச் சொன்னபோது, இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கிறீர்கள் என்று விசாரித்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நான் சுவர்க்கம் அல்லது நரகம் புகுந்தவர்கள் அல்லது அவற்றில் நம்பிக்கை வைக்காத காரணத்தால் வெற்றுவெளியில் மறைந்தவர்களின் பிரதிநிதியால் விசாரிக்கப்படுவேன் என்று முன்பே எனக்குத் தெரிந்திருந்த காரணத்தால் கணக்கு ஒப்பிக்கலானேன்.

நூற்று எட்டு சிறுகதைகள். பதினான்கு குறுநாவல். இரண்டு நாவல், முன்னூற்று இருபத்தெட்டு கட்டுரை. நாற்பத்தேழு கவிதை. அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். குளிக்கப் போவதற்கு முன் இன்னும் மூன்று பத்தி எழுத உத்தேசம்.

நூற்றியெட்டுச் சிறுகதை. அதில் ஏழு காற்றில் கரைந்து போனது. அதாவது அகில இந்திய வானொலியில் ஒலிபரப்புவதற்காக எழுதி, கண்ணாடி அறைக்குள்ளிலிருந்து யாரோ கையை அசைக்க, ஒவ்வொரு தாளாக மரமேசையில் நகர்த்தி, பிரம்மாண்டமாக வைத்திருந்த ஒலிவாங்கியில் குரல் இடறாது ஜாக்கிரதையாகப் படித்து ஒலிப்பதிவு செய்யப்பட்டவை. ரேடியோக்காரர்கள் அந்தத் தாளையெல்லாம் வாங்கிக்கொண்டு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் சன்மானம் கொடுத்தார்கள். நகல் எடுத்து வைக்காத காரணத்தால் அவற்றை இனிக் காணமுடியாது.

ஆனாலும் நூற்றியெட்டும் நினைவில் இருக்கிறது. வார்த்தை ரூபமாக இல்லாவிட்டாலும், ஒவ்வொன்றும் மனதில் தோன்றிய அந்த வினாடி ஞாபகம் இருக்கிறது. எழுதி முடித்ததும் எழுந்த கணநேர ஆசுவாசத்தை, நிம்மதியைத் திரும்ப உணர்கிறேன். முதல் கதையைப் பொறுத்தவரை அது வெளியாகிப் படித்த முதல் நொடியும் நினைவில் பதிந்திருக்கிறது.

எழுதுவதென்பதே சாஸ்வதமான இந்த அபூர்வ கணங்களுக்காகத்தான்.
இந்த நொடிகள் எல்லாம் காலம் உறைந்த மனவெளியில் நிகழ்கிறவை. எட்டு வயதில் விளக்கணைந்துபோன ஒரு நடு ராத்திரி நேரத்தில் வாசலுக்கு வந்தபோது கையில் கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வார்ச் செருப்பு ஒலிக்க ஒருத்தன் தெருவில் நடந்துபோய்க் கொண்டிருந்தான். எத்தனையோ வருடம் கழித்து மும்பாய் நாரிமன் பாயிண்ட் அலுவலகத்தில் ஒரு பிரம்மாண்டமான லிஃப்டில் தனியாக ஏழாம் மாடிக்குப் போய்க் கொண்டிருந்தபோது அந்த லாந்தர்க்காரன் வெகு சுவாதீனமாக உள்ளே கடந்துவந்து ஞாபகம் இருக்கா என்று சிரித்தான். லாந்தர்க்காரன் கூடவே காந்தி வாத்தியாரும், கறுத்த, பவுருஷம் பொங்கிப் பிரவகிக்கும் ஒரு ரயில் இஞ்சினும், நகர மறுக்கிற ஒரு கோயில் தேரும் என் டூ பெட்ரூம் தில்லி ஃப்ளாட்டில் நுழைய, ‘தேர்’ எழுதி முடித்தபோது அன்றைக்கு நடுராத்திரி கடந்துவிட்டிருந்தது.

லாந்தர்க்காரனை மட்டுமில்லை, பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நாராயணியம்மா வீட்டுத் திண்ணையில் குடிபுகுந்த சன்னியாசியை நானும் எட்ட நின்று பார்த்திருக்கிறேன். வீட்டு வாசலில் ஒரு தேரை, சன்னியாசியை வைத்துக்கொண்டு சகஜமாக எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இதைப் பற்றி யோசிக்க ஒரு முப்பது வருடம் காத்திருக்க வேண்டி வந்தது. ஆனாலும் அதெல்லாம் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக சங்கிலித் தொடராக நிகழ்ந்தவை. அப்படித்தான் தோன்றுகிறது.

எமர்ஜென்சி காலத்து மாம்பலம் தெருவில் இன்னொரு இரவு. நான் சென்னை வந்து பாங்க் ஊழியனாக உத்தியோக வாழ்க்கையைத் தொடங்கியிருந்த நேரம். ஊர் ஓய்ந்து தூங்கப் போய்க்கொண்டிருக்கிறது. கடைசிப் பலகையைப் பொருத்தி மூடிக்கொண்டிருந்த மாவுமில் வாசலில் நின்று வயதான ஒருத்தர் ‘ரகுராமா’ என்று மேலே இருண்டு கிடந்த லாட்ஜிங்கைப் பார்த்துச் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். எத்தனையோ வருடத்துக்கு அப்புறம் நான் மாம்பலம் வாசியாகி வண்டிக்கு பெட்ரோல் போடுவதற்காக நடுப்பகலில் காத்திருந்தபோது அந்த ஸ்தூல சரீர வைஷ்ணவர் ‘ஆழ்வார்’ ஆக மனதின் உள்ளறையில் திரும்பவும் உரக்கச் சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.

மலையாளத்தில் மொழிபெயர்த்த கார்சியா மார்க்வெஸ்ஸின் ‘நூறாண்டுத் தனிமை’யைப் படித்துக்கொண்டு மாம்பலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிபம்பு முன்னால் கார்ப்பரேஷன் தண்ணீருக்காக நடுராத்திரியில் காத்திருந்திருக்கிறேன். மேஜிக் ஷோ நடத்த வாய்ப்புத் தரச்சொல்லி, வருடக் கணக்காகச் சளைக்காமல் மந்திரவாதி ஒருவர் எனக்கு போஸ்ட் கார்ட் போட்டுக்கொண்டிருக்கிறார். ஏலக்கடை லாலா ‘மேரா ஜூத்தா ஹை ஜப்பானி’ என்று பாடிக்கொண்டு விநியோகித்த நோட்டீசுக்காகப் பின்னால் ஓடியிருக்கிறேன். திரவுபதை அம்மன் கோவில் பொட்டலில் தொடர்ந்து பத்து நாள் சைக்கிள் சவாரி செய்தவனை ஒரு ராத்திரி முழுக்கக் குழிவெட்டிப் புதைத்து அடுத்தநாள் வெளியே எடுக்க, எல்லோருக்கும் அவன் வணக்கம் சொன்னபோது பதில் வணக்கமாக இந்தச் சின்னப் பையனின் கைகளும் உயர்ந்திருக்கின்றன. இவன் தீர்த்தம் தீர்த்தமாக நீராடிக் கொண்டு, ராமேஸ்வரத்தில் வாளியோடு நடக்கிற வழிகாட்டியைப் பின் தொடர்ந்தபோது, மின்சாரம் போன இன்னொரு ராத்திரி. கோவில் யானை பிளிறி இரும்புச் சங்கலியை அசைத்த சத்தமும், சண்டீசுவரர் சந்நிதி தீபத்தில் இலுப்பெண்ணெய் வாடையும், ஈரக்காலில் நறநறவென்று சமுத்திர மணலலும் இன்னும் இழைகிறது - அதையெல்லாம் கதையில் கடத்தி, உருமாற்றிக் கலந்து வார்த்து வைத்து முடிந்தாலும்.

இருபத்தைந்து வருட தாம்பத்தியத்துக்குப் பிறகு விவாகரத்து பெற்று, மகளைப் பிரிந்த சோகத்தை லண்டன் போகும்போதெல்லாம் பகிர்ந்துகொண்ட நண்பர் ஜெஃப் போனமாதம் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டதாக ஈமெயில் அனுப்பியிருந்தார். அவர் லண்டன் கோபுர வளாகத்தில் காவலராக இல்லை. ஆனால், அந்த 1945-ம் வருட தீபாவளி மலரை நான் படித்திருக்கிறேன். அரண்மனைக்காரர் ஒருத்தர் நூறுரூபாய் கடன் கேட்டு என் அப்பாவுக்கு விண்ணப்பம் அனுப்பியதை நான் தான் கொண்டுவந்து கொடுத்தவரிடமிருந்து வாங்கினேன். அப்பா இருபது ரூபாய் – ரெண்டு அகலமான அந்தக் காலத்துப் பத்து ரூபாய் நோட்டு - எடுத்து மடித்து அதே கவரில் வைத்துக் கொடுத்தனுப்பினார். அந்த அரண்மனைக்காரரின் தம்பி ஒரு மார்கழி விடிகாலையில் சிவன் கோவில் வாசலில் சுருட்டுப் பிடித்தபடி நின்று ஏதோ இரைந்து கொண்டிருந்தார். ஆனால் டிராயிங் மாஸ்டரிடம் கடியாரத்தைப் பழுது பார்க்கக் கொடுத்தது அவர் இல்லை. சொல்லப்போனால், டிராயிங் மாஸ்டருக்குக் கடியாரம் பழுதுபார்க்கத் தெரியாது. அது சயின்ஸ் வாத்தியார்.

‘அம்பி’ என் அப்பாதான். அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிமிடத்தை என்னிடம் ஒரே ஒரு முறை சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டது அவரைப் பிரிந்து இருந்தபோது நினைவு வரக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன். ‘நானே எழுதின மாதிரி இருக்குடா. இதெல்லாம் உனக்குச் சொன்னேனா?’ இல்லேப்பா. ஆனா, இது வேறே மாதிரி இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

முதல் கதை ‘வண்டி’ கணையாழியில் பிரசுரமானபோது புதுதில்லியில் இருந்தேன். கரோல்பாக் தமிழ்க்கடை. முன்னிரவு. ஸ்டாண்ட் போட்ட ஸ்கூட்டர். கையில் புகையும் ஃபோர் ஸ்கொயர் சிகரெட். ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி பத்திரிகை படித்தபோது. கூட நடந்து வந்த வயதான ஸ்திரீயுடன் ஏதோ வேடிக்கையாகப் பேசிச் சிரித்துக்கொண்டு கடந்துபோன இளம் பஞ்சாபிப் பெண்ணின் முகமும், கனமான செண்ட் வாடையும் இப்போது தூக்கலாக எழுந்து வருகிறது. இந்த இருபத்திரெண்டு வருடத்தில் அவளுடைய முகம் வயதாகி வீர்த்திருக்கலாம். என்னுடையதைப் போல.

செண்ட் வாடை அவளை அலுப்படைய வைத்திருக்கலாம். சிகரெட்டை நான் விட்டொழித்ததுபோல. அவள் இன்னும் அலுப்படையாமல் பேசிக்கொண்டிருக்கலாம், நடந்து கொண்டிருக்கலாம் அல்லது கதை எழுதிக்கொண்டிருக்கலாம். கற்பனை செய்யச் சுகமாக இருக்கிறது.

எழுதுவது எப்போதுமே அலுப்புத் தட்டாத விஷயம்தான். இந்த சுவாரசியம் எழுதிக் கொண்டிருக்கும் காலம் முழுக்க, கட்டுவிரியன் பாம்பாகச் சட்டை உரித்துக்கொண்டு நகர்வதில்தான் இருக்கிறது. கதைக் கருவில், சொல்கிற விதத்தில், தொனியில், மொழியில் எந்த முடுக்குச் சந்திலும் சிக்கிவிடாமல் முன்னே போகிற சுதந்திரம் எனக்கு முக்கியமானது. ‘அவருடைய முத்திரை இந்தக் கதையில் அழுத்தமாக விழுந்திருக்கிறது’ என்று யாராவது எதையாவது பற்றிச் சிலாகிக்கும் விமர்சனத்தைப் படித்தால், பிராவிடண்ட் ஃபண்ட் லோன் கிட்டாத சிப்பந்தி அழுத்திக் குத்திய தபால் முத்திரையோடு வந்து விழுகிற சிமிண்டுக் கம்பெனி ஆண்டறிக்கைதான் நினைவுக்கு வருகிறது. இந்த ஆண்டறிக்கைகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுகிறது என்ற காரணத்துக்காக நானும் சிமெண்ட் கம்பெனி நடத்த முடியாது.

எழுத்தை நான் ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ அணுகுவதில்லை. எழுத மனதில் உந்தல் தோன்றும் ஒவ்வொரு முறையும், ஒரு சாவுச்சடங்கு நிர்வாகியாக நான் சீரான உடையணிந்து கண்ணியமான தோரணைகளோடு அதை எதிர்கொள்வதில்லை. அவ்வாறு எதிர்கொள்கிறவர்களை நான் மதிக்கிறேன். கழிவுநீர் அடைப்பு நீக்குதல் போன்ற பொது சுகாதாரத்தை உத்தேசித்த காரியங்களுக்காக அவர்கள் செலவு செய்யவேண்டி வந்தால் நானும் பங்கேற்கிறேன்.

என் பக்கத்து வீட்டுக்காரர் இன்று காலையில் மூன்று பவுண்ட் முப்பது பென்ஸ் திருப்பிக் கொடுத்துவிட்டார். பழுதுபார்க்கச் செலவு கம்மியாகத்தான் ஆனதாம்.

இரா.முருகன்
நவம்பர் 06, எடின்பரோ.

பின்குறிப்பு

நண்பர்கள் பா.ராகவன், பத்ரி, முத்துராமன், இகாரஸ் பிரகாஷ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொகுதியின் ஒவ்வொரு பக்கத்திலும் இடைவரிகளாக இவர்கள் எனக்குத் தட்டுப்படுகிறார்கள்.

(என் சிறுகதைகளின் கிட்டத்தட்ட முழுத் தொகுப்பு
கிழக்குப் பதிப்பக வெளியீடு
'இரா.முருகன் கதைகள்'
ஜனவரி 2007
பக்கங்கள் 846)

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது