Tuesday, December 25, 2007

சிவகங்கையில் ஒரு சின்னப் பையன்

சிவகங்கை சிவன்கோவில் எதிர் வசத்து ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்தபோது எனக்கு ஏற்பட்ட பெருமகிழ்ச்சியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஆழ்ந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி முடியும்? உங்களுக்கு எப்போதாவது ஒன்பது வயது முடிந்திருக்கிறதா? நீங்கள் அரை டிராயர் அணிந்திருக்கிறீர்களா? குருசாமி டெய்லர் தைத்துக் கொடுத்ததா அது? அழுத்தமான கருப்பிலும், அடிக்கும் நீலத்திலுமாக, மாட்டிக்கொண்டால், தொளதொள என்று வழிந்து முழங்காலுக்குக் கீழே, கணுக்காலுக்குக் கொஞ்சம் மேலே வரை வருமா? அப்புறம், இடுப்புக்கு மேலே இரண்டு பக்கத்திலும் வார் வைத்துப் பெருக்கல் குறி மாதிரி முதுகில் இணைத்திருக்குமா? எல்லாக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்லியிருந்தால், உங்கள் பெயர் ஷண்முகசுந்தரம் அல்லது சுந்தரராஜன் அல்லது முக்தார் சாயபு. நீங்களும் என்னோடு நாற்பத்து நாலு வருஷம் முன்னால் ஐந்தாம் கிளாஸ் தேறி ஆறாவது வகுப்புக்கு, அரசர் உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைத்திருப்பீர்கள். வெள்ளைச் சட்டை, நீல டிராயர் என்று சீருடை அணிந்திருப்பீர்கள். முட்டிக்காலுக்கு நீண்டிருந்தாலும் அந்த நீல டிரவுசரில் இடுப்புக்கு மேல் வார் என்ற அவமானச் சின்னம் நிச்சயம் இருந்திருக்காது. “ஐஸ்கூல்லே படிக்கற பையன்; கொளந்தைப்புள்ளை மாதிரி வார் எல்லாம் என்னத்துக்கு அம்மா?” என்று குருசாமி டெய்லரே அம்மாவிடம் சிபாரிசு செய்து அனுமதி வாங்கியிருப்பார்.

ஆக, அரசர் உயர்நிலைப் பள்ளி என்றால் ஏற்படும் முதல் மகிழ்ச்சியில் குருசாமி டெய்லருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறதுபோல் சீருடையில் மற்றொரு அங்கம் நீல நிற டை. கஷ்டப்பட்டு சிங்கிள் நாட், டபுள் நாட் என்று போட பிரம்மப் பிரயத்தனம் செய்து கழுத்தை நெறிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அழகான ரெடிமேட் முடிச்சோடு, பின்னால் நெக்லஸ் போல் மாட்டிக்கொள்ள கொக்கி வைத்து வந்த அந்த டைக்காகவே இன்னொரு தடவை ஆறாம் வகுப்பு படிக்கலாம். இந்த மகிழ்ச்சிக்கும் மேலாக, அல்லது கீழாக, பளீர் வெண்மையில் கான்வாஸ் ஷ¥. ஷ¥ லேஸ் இரண்டையும் சரியாகக் கோர்த்து முடிந்து கொள்வது கொஞ்சம் சிரமமான காரியம்தான் கூடிய சீக்கிரம் இதில் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பில் நுழைந்ததற்கு முந்திய வருடம்தான் முதன்முதலாகப் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் தொடங்கினார்கள். ஏழாவது வகுப்பு சீனியர்கள் ‘போங்கடா பொடியங்களா’ என்று எங்களைப் பார்த்துக்கொண்டு வெள்ளைக்கார துரை கணக்காக முன்னால் லெப்ட் ரைட் போட்டு நடக்க, அதை லட்சியமே செய்யாமல், ஆறாம் வகுப்புப் பிள்ளைகளான நாங்கள் முந்தின பாராவில் விளக்கப்பட்ட சந்தோஷம் காரணமாகப் பறந்து கொண்டு வருவோம். உடம்பும் அப்போது இறகு போல லேசாக இருந்ததாக நினைவு.

நான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது அப்பா ஊரில் இல்லை. அவர் எப்போதுமே ஊரில் இருந்தது இல்லை. நாலைந்து மாதத்துக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்து போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் நாலு நாள் பயணமாக வந்து சேர்ந்து, பழநியின் குதிரை வண்டி ஜல்ஜல் என்று கம்பீரமாக ஒலியெழுப்பி நிற்க வீட்டு வாசலில் இறங்குகிறவர் அவர். வங்கி அதிகாரி. அவரை கொல்கத்தா, மும்பாய், தில்லி, அகமதாபாத் என்று வருடம் தவறாமல் இந்தியாவின் சகல பிரதேசங்களுக்கும் மாற்றிய அவருடைய மேலதிகாரிகளுக்கு, சிவகங்கையிலும் அந்த வங்கிக்குக் கிளை உண்டு என்ற விஷயம் ஏனோ தெரியாமல் போனது.

மணத்தக்காளி வத்தல் குழம்பு, கீரை மசியல், மிளகு ரசம், சுட்ட அப்பளம் என்று ‘அப்பா மெனு’ அமலாக்கப்படும் காலம் அப்பா ஊருக்கு வரும் அந்த நான்கு நாளும். வழக்கப்படி கொஞ்சம்போல் கொறித்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தபடி அப்பா புதுப்பள்ளிக்கூடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“விளையாட்டு மைதானம் ஓரமா நாலைஞ்சு வேப்ப மரம் இருக்குமே, எப்படி இருக்கு?”

“தெரியலியே அப்பா”

“இவனை எந்த ஸ்கூல்லே போட்டே?” அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்டபோது நான் போர்ட் ஹைஸ்கூலில் சேர்ந்திருப்பேன் என்று அவர் சந்தேகப்பட்டிருப்பார் என்று தோன்றியது. போர்ட் ஹைஸ்கூல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி என்றாலும், குருசாமி டெய்லர் தைக்கிற உடுப்பு ஒரு பார்வைக்குப் பாவாடை மாதிரி தெரிவதால் அப்படி யோசித்திருக்கலாம்.

“சின்னக் குழந்தை. இப்பத்தான் நாலு மாசமாப் புதுப்பள்ளிக்கூடத்துக்குப் போறான். அதுக்குள்ளே எல்லாம் பார்த்துப் பழகி அத்துப்படியாயிருக்குமா என்ன?” பாட்டியம்மா கால் ஆணிக்குக் களிம்பு தடவியபடிக்கு என் தரப்பில் ஆணித்தரமாக வாதாடி அப்பாவின் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

வேப்ப மரத்தில் ஆரம்பித்து, முன் மண்டபம், கல் படிக்கட்டு, சாத்தப்பய்யா ஊருணி என்று அப்பா ஊஞ்சலில் மெல்ல ஆடியபடிக்கு பள்ளிக்கூடத்தை வலம்வர, பக்கத்தில் உட்கார்ந்து முன்னும் பின்னும் அவரோடு நகர்ந்துகொண்டிருந்த எனக்கு (வழக்கம்போல்) தாமதமாகத்தான் புரிந்தது - அப்பாவும் முன்னொரு காலத்தில் அரசர் உயர்நிலைப்பள்ளியில்தான் படித்திருக்கிறார். தொடர்ந்து தடதட என்று அவர் காலத்து ஆசிரியர்களின் பெயர்களை வரிசையாக அடுக்கி, யார் வகுப்பில் எத்தனை மதிப்பெண் வாங்கினார் என்று தகவல் தர ஆரம்பிக்க , நான் நீல டை பெருமையை நிலைநாட்டப் பெருமுயற்சி செய்தேன். அந்த நிமிடம்தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

“நான் படிக்கறபோது அழகுக் கோனார்னு ஒரு அட்டெண்டர்”

“அழகுக் கோனாரா? இருக்காரே”

அப்பாவும் பிள்ளையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்ட அந்த அற்புதமான கணத்தை வழங்கிய அழகுக்கோனாரும் அரசர் உயர்நிலைப்பள்ளி என்றால் நினைவுக்கு வருகிற இன்னொரு மகிழ்ச்சி.

தீபாவளி, பொங்கலுக்காக இரண்டு நாள் விடுமுறை, காலாண்டு அரையாண்டு, முழுப் பரீட்சைக்கான நீண்ட விடுமுறை போன்றவற்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை எடுத்துக்கொண்டு தலையில் முண்டாசும் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக அழகுக் கோனார் மெல்ல நடந்து வருவார். ஆசீர்வாதம் சார் அறிவியல் வகுப்பில் ஆர அமர விளக்கும் •போட்டோசின்தசிஸில் ஒரு கண்ணும், மற்றது பள்ளி நூல்நிலையப் பக்கம் அழகுக் கோனாருக்காகத் திருப்பியும் காத்திருப்பதில் தொடங்கிய மகிழ்ச்சி. அப்புறம் அழகுக் கோனார் தெருவோடு நடந்து போவதைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் கிடைக்க ஆரம்பித்தது. இரண்டு தலைமுறையைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெரியவர் அழகு நிச்சயம் செஞ்சுரி அடித்து ‘நாட் அவுட்’ ஆக இன்னும் வலம் வந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

மகிழ்ச்சிப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பது ‘டேப்லெட்’. கூடவே பாஸ்கர சேதுபதி சார். புதுக் காகித மணத்தோடும், கருப்பு வெள்ளைப் படங்களோடும், அழகான ஆங்கிலத்தில் அச்சடித்து வந்திருந்த வரலாற்றுப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்தபடி சுமேரிய நாகரீகம் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் சேதுபதி சார். சுமேரியர்கள் அரசியல் சட்டங்களை டேப்லெட்டில் எழுதி வைத்திருந்தார்கள் என்று பாடம் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்புக்கு அளவே இல்லை. டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ? தீபாவளி கழிந்து மூன்றாம் நாள் சர்வ நிச்சயமாக வரும் காய்ச்சலுக்காக டாக்டரிடம் போனால், ஆள் உயர போத்தலில் இருந்து எடுத்து ஒரு உறையில் போட்டு, “தினசரி மூணு வேளை ரசம் சாதம். சாப்பாட்டுக்கு அப்புறம் முழுங்கு. பாட்டி பல்வலி எப்படி இருக்கு? அப்பா லெட்டர் போட்டாரா? தீபாவளிக்கு வீட்டிலே என்ன ஸ்வீட்? எப்படிப் படிக்கிறே? கணக்கிலே எத்தனை மார்க்?” என்று பதில் சொல்லக்கூடிய, கூடாத கேள்விக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தபடி கையில் தருகிற சமாச்சாரம் இந்த டேப்லெட். சுமேரியர்கள் மூவாயிரம் வருடம் முந்தியே தீபாவளிக் காய்ச்சலில் அவதிப்பட்டிருக்கிறார்களா? அல்லது அரசியல் சட்டத்தை எழுதக் காகிதம் கிடைக்காமல் மாத்திரை மேல் எழுதினார்களா? (டாக்டர் தருகிற ஜயண்ட் சைஸ் மாத்திரையில் இந்திய அரசியல் சட்டத்தையே எழுதிவிடலாம்).

நான் பதுங்கிப் பதுங்கி மெதுவாகச் சந்தேகத்தைக் கேட்டபோது, சேதுபதி சார் விளக்கினார் - “டேப்லெட் என்றால் களிமண்ணில் உருவாக்கிய எழுத்துப் பலகையும் தான்”. இப்போதும் காய்ச்சல் என்று டாக்டரிடம் போனால், பெரிய சைஸ் களிமண் பலகையைக் கொடுத்து முழுங்கச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பில் புயல் மாதிரி ஒரு பிரவேசம், சத்தியகிரிராஜன் சார். பல்கலைக் கழகப் பேராசிரியராக, ரீடராகப் பணியாற்றிய அவர் எனக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார் என்று சொன்னால் அவரைத் தெரிந்த பலபேர் நம்ப மாட்டார்கள். ஆனால் என்னைத் தெரிந்த சிலராவது நிச்சயம் நம்புவார்கள். “பட்டன் அப், பட்டன் அப்” என்று சொல்லியபடியே வகுப்பில் நுழைந்து, சட்டையில் சரியாகப் பொத்தான் போடாத மாணவர்கள் கன்னத்தில் தட்டி (இன்னும் வலிக்கிறது) இடி முழக்கத்தோடு பாடத்தை ஆரம்பிப்பார். பாடப் புத்தகத்தைத் தாண்டிச் சிந்திக்கத் தூண்டியவர் அவர்தான் என்பதை நினைத்தால் அந்த வலி மறந்து போய் அவரும் மகிழ்ச்சிப் பட்டியலில் இடம் பெறுகிறார்.

இந்தி மாஸ்டர் முத்துகிருஷ்ணன் சார் அடுத்தபடிக்கு மேடைக்கு வரலாம். நல்ல நகைச்சுவை உணர்ச்சி. நெடுநெடுவென்று உயரம். சுறுசுறுப்பு. ஒரே பிரச்சனை இந்திதான். இந்தி திணிப்பு மும்முரமாக நடந்துவந்த காலம் அது.

முத்துகிருஷ்ணன் சார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். “ஆவோ பேட்டா. பேட்டி ஆவோ. புவாஜி ஆயியே. மேலா சலே”. அப்பா வீட்டில் ஒவ்வொருத்தராக அழைத்து பொருட்காட்சிக்குக் கூட்டிப் போகிறார். அங்கே போனதும் முதல் காரியமாக ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி ஒவ்வொன்றாகப் பிய்த்து விநியோகிக்கிறார். “பேட்டா கேலா காவ். பேட்டி கேலா காவ். பெஹன்ஜீ கேலா காயியே”. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் எல்லோரும் வரிசையில் நின்று வாழைப்பழம் பெற்றுச் சாப்பிட்டு வரிசை கலையாமல் குடைராட்டினத்தில் சுற்றுகிறார்கள். அப்புறம் அப்படியே நடந்து

- சரி விடுங்கள், அந்த வினோதமான குடும்பம் இன்னும் வட மாநிலப் பாடப் புத்தகங்களில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இந்தி திணிப்பு வாழைப்பழக் குடும்பத்தோடு முடியவில்லை. உடற்பயிற்சிக்கான கட்டளை கூட இந்தியில் தான் என்று ஆனது. எட்டாம் வகுப்பில் எங்களை மைதானத்தைச் சுற்றி ஓட வைத்தும், பிரதி வெள்ளிக்கிழமை சாயங்காலம் வியர்க்க விறுவிறுக்க, முரசு ஒலியெழுப்ப ‘சாவ்தான், வீஸ்ராம்’ என்று இந்தியில் முழங்கி ஒரு மணி நேரம் விதவிதமாக உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்ய வைத்தும் இன்பப்படுத்திய நீலமேகம் சார் மறக்கக் கூடியவரா என்ன?

நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் புகுந்தபோது, நீலமேகம் சாரும் கூடவே நுழைய வெலவெலத்துப் போனது. வகுப்புக்குள்ளேயே வைத்து இந்தியில் உடற்பயிற்சி சொல்லித்தரப் புதிதாக ஏதாவது சட்டம் வந்திருக்கலாம். குர்ஸி பே கடோ. வீஸ்ராம். கேலா காவோ.

“போயொரு கால் மீளும் புகுந்தொரு கால் பின்செல்லும்” என்று நீலமேகம் சார் அழகாக நளவெண்பாவைப் பாடம் சொல்ல ஆரம்பித்தாரே பார்க்கணும்! திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் தமிழாசிரியராக அந்த வருடத்திலிருந்து மாறினார். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க் குமுகாயம்” என்று தொடங்கி அவர் எழுதிக் கற்பித்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு பற்றிய கட்டுரையை வீட்டு மாடியில் நடைபோட்டபடி உரக்கப் படிக்கும்போது சிவாஜி ‘மனோகரா’ வசனம் பேசுகிறதுபோல் மனதில் பெருமிதம் பரவும். அதுவும் ‘பார்புகழும் தமிழக முதலமைச்சரான அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைக்க” என்ற இடம் வரும்போது ஒருதடவைக்கு இரண்டு தடவை சொல்லப்படும். அந்த வருடம் தமிழக வரலாற்றில் முக்கியமானது. அதற்கு முன்னால் அறிஞர் அண்ணா பெயரை வகுப்பில் உச்சரித்தால் சாவ்தான்.

சிவாஜி என்றால் நினைவுக்கு வருகிறவர் எங்கள் வி.ஆர்.நாகராஜன் சார். பள்ளி இறுதி வகுப்பில் வகுப்பு ஆசிரியராக ஆங்கிலமும், வரலாறும் எடுத்தவர் அவர். ஆப்ரஹாம் லிங்கனின் கெட்டீஸ்பர்க் சொற்பொழிவா, ஆஸ்கார் ஒய்ல்டின் ‘மகிழ்ச்சி இளவரசன்’ கதையா, ஜிம் கார்பெட்டின் வாழ்க்கைச் சித்திரமான ‘லாலாஜி’யா, வி.ஆர்.என் சார் நடத்தினால் எங்களுக்கு முன்னால் மேடை போட்டு நாடகம் நடப்பதுபோல் ஒன்றிப் போய்விடுவோம்.

இரண்டு வாரம் முன்னால் லண்டன் கோபுரத்தில் டியூடர் வம்ச நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். எந்தத் தவறும் செய்யாத பேரரசி ஆன்பொலின் சிரச்சேதம் செய்யப்பட்ட இடம் ஏற்கனவே பார்த்துப் பழக்கமானதுபோல் தோன்றியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டில் வி.ஆர்.என் சார் அந்தக் காட்சியை அற்புதமாக விளக்கியது இன்னும் நினைவில் இருப்பது தான் காரணம்..

வகுப்பில் நடுவில் ஏதாவது இரைச்சல் எழுந்தால் (தீபாவளி விடுமுறை சர்க்குலரோடு அழகுக் கோனார் ஆஜராகும்போது நடப்பது), “தம்பி தம்பி, என்ன இது •பிஷ் மார்க்கெட் போல” என்று சின்னதாகக் கோபப்படுவார் வி.ஆர்.என். முழுச் சைவரான அவர் மீன்கடைப் பக்கம் போயிருக்க வாய்ப்பே இல்லை என்பதை அவரிடம் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றினாலும், ஆப்ரஹாம் லிங்கன் மற்றும் அனிபொலின் கேட்டுக் கொண்டபடி தீபாவளி சந்தோஷத்தில் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.

ஆனாலும் வி.ஆர்.என் சார் என் ஒரு சந்தேகத்தை மட்டும் தீர்க்கவே இல்லை.

யாரோ சொன்னார்கள் - சவுந்தரராமனா, ஷாஜஹானா என்று நினைவில் இல்லை. சிவாஜி கணேசனுக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது வி.ஆர்.என் சார்தான் என்று. அவரிடம் கேட்டபோது சிரித்தபடி, “அதெல்லாம் எதுக்கு உனக்கு? இங்கிலீஷ் ரிவைஸ் செஞ்சியா? வோர்ட்ஸ்வொர்த்தோட ‘சைல்ட் இஸ் தி •பாதர் ஓ•ப் த மேன்” புரிஞ்சதா இல்லியா? “ என்று பாடத்துக்குத் தாவி விட்டார்.

முந்தாநாள் ராத்திரி ஒரு கனவு கண்டேன். பள்ளிக்கூடத்தில் வி.ஆர்.என் சார் வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். கட்டை மீசையும், சோடா புட்டிக் கண்ணாடியும், கழுத்தில் கொக்கி மாட்டாத நீல டையுமாக நான். அவர் இன்னும் அதே இளமையோடுதான் “ஸ்வாலோ ஸ்வாலோ, லிட்டில் ஸ்வாலோ” என்று ஆஸ்கார் ஒய்ல்டின் மகிழ்ச்சி இளவரசனாக நவரசமும் ததும்பப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். நான் கருத்தரங்கிலே பேசுகிறதுபோல் எழுந்து நின்று பணிவான குரலில் கேட்கிறேன் - சிவாஜிக்கு நடிகர் திலகம் என்று பட்டம் அளித்தது நீங்கதானா? அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். அதற்குள் வாசலில் அழைப்பு மணியை அடித்து யாரோ எழுப்பிவிட்டு விட்டார்கள்.

காலிங் பெல்லைக் கண்டுபிடித்தவர்களை லண்டன் டவரில் வைத்து ஆன்பொலின் போல் சிரச்சேதம் செய்ய வேண்டும்.

(சிவகங்கை அரசர் உயர்நிலைப்பள்ளி தன் நூற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவினை இந்த ஆண்டு கொண்டாடியதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு மலர் கட்டுரை).

Thursday, December 20, 2007

ஒண்ணித் திலநகை - ஓரம்போ;ஆழி மழைக் கண்ணா, ஆடி வா



இன்றைக்கு மார்கழி நாலு. 'ஆழி மழைக்கண்ணா' திருப்பாவைத் தினம். 'ஆழியில் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிந்து, வாழ உலகில் பெய்திடாய்' என்று நாச்சியார் உளமுருக இயற்கையை வேண்டும்போது அறைக்கு வெளியே குளிரக் குளிர ஒரு பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் அவசர அவசரமாக இந்த அற்புதமான திருப்பாவையை விளக்க (என்ன செய்ய, அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பது நாலு நிமிடம் தான்), தொடர்வது மணியம் செல்வன் நேர்த்தியாக அமைத்த அரங்கில் இந்தப் பாசுரத்த்துக்கு அபிநயம் கொடுத்து அமைந்த பரதம். அமிர்தவர்ஷணி ராகத்தின் கம்பீரத்தோடு ஆழி மழை கொட்டத் தொடங்கி இரண்டே நிமிடத்தில் ஜெட் வேகத்தில் பாசுரமே பாடி ஆடி முடித்தாகி விட்டது. ஆழி மழைக் கண்ணா என்று கையை விரித்து வேண்டுகிற பத்து வினாடி, ஊழி முதல்வன் உருவம் போல் கருத்த மேகத்தை அபிநயிக்க இன்னொரு ஐந்து வினாடி, நாலு பேர் திசைக்கு ஒருத்தராக நின்று சங்கு பிடிக்கிற பாவம் காட்ட வலம்புரி அதிர்தல், அப்புறம் எல்லோரும் மண்டியிட வாழ உலகில் பெய்திடாய். பெப்ஸி விளம்பரம் கூட இன்னும் அதிக நேரத்துக்கு வரும்.

சரி, திருப்பாவை முடிந்தது. மார்கழியின் இன்னொரு மனத்தை விட்டகலாத அம்சமான திருவெம்பாவை. அதுவும் நாலாவது பாவைப் பாட்டு அழகான உரையாடலாக அமைந்த 'ஒண்ணித்தில நகையாய்'. ஊஹூம். மார்கழி என்றால் மீடியாவுக்குத் திருப்பாவை மட்டும்தான்.

தூர்தர்ஷன் பொதிகையில் ஒண்ணித் திலநகை தூக்கம் முடித்து வந்தாள். நாச்சியார் போன பிறகுதான் அதுவும்.

இரண்டு நாள் முன்னால் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் -
"அதென்ன சார், டிவியில் வைணவம் தான் எப்போதும் பார்க்கவும் கேட்கவும் கிடைக்கறது. பொதிகையிலே காலை ஆறரைக்கு 'கண்ணனில் ஆரமுது'. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி அற்புதமாக பகவத்கீதைக்குப் பொருள் சொல்கிறார். அதோடு, வடமதுரை, துவாரகை, திருக்குறுங்குடி, பழமுதிர்சோலை என்று அத்தனை தலங்களுக்கும் போய் அனுபவங்களையும், தல வரலாறுகளையும் சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் தப்பித்தவறிக் கூட சைவம் பற்றி ஒரு தடவை கூட மூச்சு விடுவதில்லை. பழமுதிர்சோலை அழகரின் வைபவத்தை நாவார வர்ணித்தவர், பழமுதிர்சோலை சங்க காலம் - அதற்கு முன்பிருந்தே முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்று என்பதைக் கோடிகாட்டக் கூட இல்லை. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொன்னதை எல்லாம் விளக்க வேண்டாம். ஒரு வார்த்தை சைவம் பற்றி, 'பழமுதிர்சோலை மலை கிழவோனே' பற்றிச் சொன்னால் என்ன குறைந்து விடும்? அதை விடுங்கள். மதுரையில் கூடல் அழகப் பெருமான் விண்ணககரத்தில் திருமாலின் வனப்பையும், ஆற்றில் இறங்கிச் சேவை சாதிப்பதையும் வர்ணித்த அவர், மதுரை மாநகர் என்றாலே மனமெல்லாம் நிறையும் அங்கயற்கண் அம்மை எங்கள் மீனாட்சியின் திருக்கோவில் பற்றியோ அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முந்திய திருக்கல்யாண உற்சவம் பற்றியோ வாயே திறக்கவில்லை. வைணவம் தழைக்கட்டும். தமிழ் வளர்த்த பக்தி இலக்கியத்தின் இன்னொரு கண்ணான சைவத் திருமுறைகளை, சிவ நெறியை பின் தள்ள என்ன காரணம்?"

யோசித்துப் பார்த்தால், இந்தப் பின் தள்ளல் சைவத்திலேயே தான் தொடங்குகிறது என்று புரியும். சிதம்பரம் கோவில் கருவறையில் நின்று ஓதுவார மூர்த்திகள் உள்ள்த்தை உருக்கும் தேவாரப் பண் இசைக்க முட்டுக்கட்டை இடப்படுவதில் ஆரம்பமாவது இல்லையா இது?

Wednesday, December 19, 2007

சோறு வேணோ?

"சாப்பிடச் சோறுதான் வேணுமா? ரெண்டு முட்டையும் ஒரு கிளாஸ் பாலும் போதாதா? கூடவே ஒரு கோழியையும் அடித்துக் கறி வைத்துச் சாப்பிட்டால் பரம சுகம்"

- கேரளத்தில் அரிசி விலை குதித்து உயர்ந்ததைச் சொல்லி நடந்த விவாதத்திற்கு மாநில அமைச்சர் திவாகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அளித்த பதில்

அரிசி வாங்கவே காசு இல்லாதபோது மற்றதெல்லாம் வாங்க ஏழை ஜனங்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுந்தபோது, 'நான் சொன்னதை பத்திரிகைக்காரர்கள் வளைத்து ஒடித்து எழுதிவிட்டார்கள்' என்று வழக்கமான வழுக்கலில் மந்திரி தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும், 'அமைச்சர் சொன்னது தவறு. திருத்திக்கொள்ள வேண்டும்' என்று கட்சித் தலைவர் வெளியம் பார்க்கவன் கருத்துச் சொல்லி இருக்கிறார்.

ஐம்பது வருடம் முன்னால் காங்கிரஸ் கேரளத்தில் ஆட்சியில் இருந்தபோது இதே போல் உணவுப் பிரச்சனன ஏற்பட்டது. காங்கிரஸ் தியாகியும் மக்கள் இடையே களப் பணியாற்றியவருமான மூத்த தலைவர் குட்டிமாளு அம்மா, ' ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அரிசி சாப்பிடாமல், விலை குறைந்த கப்பையும் (மரச்சீனி), மத்தியும் (மீன்) உண்ணலாம்' என்று ஆலோசனை சொன்னபோது அவருக்கு 'மத்திமாளு அம்மா' என்று கேலிப்பெயர் சூட்டியதோடு அல்லாமல் அவர் வீட்டு வாசலிலும் சட்டியோடு மீனையும் கப்பையையும் கொட்டி எதிர்த்தவர்கள் இன்று அரிசிக்குப் பதிலாக இன்னும் விலை ஏறியவற்றை உண்ணச் சொல்லி ஆலோச்னை சொல்வது கேரளத்தில் இன்றைய நடப்பு.

Tuesday, December 18, 2007

கொசு

பாண்டிச்சேரியில் ஒரு ஆண்டில் ஒரு நபரை சராசரி 2352 தடவை கொசு கடிக்கிறது. வசதியான வாழ்க்கை அமைந்தவர்களையும் ஒரு வருடத்தில் குறைந்தது 20 தடவையாவது கொசு கடிக்கிறது.

- வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டர் ஆய்வு அறிக்கையிலிருந்து

(மலையாள மனோரமா 16 டிசம்பர் 2007)

இதையெல்லாம் எப்படி ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடிப்பாங்க?

Sunday, December 16, 2007

ஒரு நவம்பர் கச்சேரி

மியூசிக் அகாதமி – உஸ்தாத் ஃபத்தே அலிகான் – நவம்பர் 10 இரா.முருகன்

சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. டிசம்பர் இசைவிழாவின் போது மூக்கில் நுழைத்து உறிஞ்ச விக்ஸ் இன்ஹேலர், கம்பளி மப்ளர், இருமல் மாத்திரை சமாச்சாரங்களோடு ராத்திரி கச்சேரியாக பீம்சென் ஜோஷியைக் கேட்க பெருந்திரளாக ஆஜாராகி விடுவார்கள் நம்ம மக்கள்.

‘இதான் கிரானா கரானா சங்கீத பாணியா? அட, இந்த ஆலாபனை பூர்ய தனாஸ்ரீ போல இருக்கு, ஆஹிர் பைரவியிலே நம்மளை விட கம்பீரமான சோகம் பாருங்க’. இப்படி கண்டக்டட் டூரில் தாஜ்மஹாலைப் பார்க்க ஆக்ரா போகிற டூரிஸ்ட்கள் போல் எட்டி நின்று பார்த்துக் கேட்டு நாலு கிளாப்ஸ் உதிர்த்துவிட்டு மியூசிக் அகாதமிக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று அடுத்து கைதட்டுவார்கள்.

பாட்டியாலா பாணி பாகிஸ்தானி பாடகர் பத்தே அலிகானின் நவம்பர் பத்தாம் தேதி கச்சேரிக்கு, பீம்சிங் இயக்கிய பா-வரிசை படங்கள் போல் படைதிரண்டு மியூசிக் அகாதமிக்குள் படியேறியவர்களும் இவர்களே.

பாட்டியாலா கரானா சென்னை ரசிகர்களுக்குப் பழக்கமானதே. வாக்கிங் ஸ்டிக், வைரக் கடுக்கன் பெரிசுகள் இன்னும் சிலாகிக்கும் படே குலாம் அலிகான், பத்து இருபது வருடம் முன்னால் பைரவியில் ‘பவானி தயாநி’ பாடி மார்கழிக் குளிரில் ஐஸ்கட்டியாக ரசிகர்களை உருக வைத்த பர்வீன் சுல்தானா எல்லாம் பாட்டியாலா பாணி சங்கீதக்காரர்கள் தான். ஆனாலும் இந்தக் கச்சேரி வேறே தினுசு.

இந்து பத்திரிகையின் வெள்ளிகிழமை விமர்சனப் பகுதி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியை உஸ்தாத் பத்தே அலிகானும், அவர் மகன் ருஸ்தம் பத்தே அலிகானும் ரொம்பவே சாத்வீகமாக ஆரம்பித்தார்கள். யார் யோசனையோ, மேற்கத்திய பாணியில் மேடையில் மட்டும் விளக்குப் போட்டு, அரங்கமே இருளே என்று அந்தகாரத்தில் ஆழ்த்தப்பட்டிருந்தது. “விளக்கைப் போடுங்கப்பா, கேட்கறவங்க முகத்தைப் பார்க்காம எங்க ஊர்லே பாடிப் பழக்கம் இல்லே” என்று வித்வான்கள் ஆட்சேபிக்க, ரசிகர்களின் உற்சாகமான கரவொலியில் நாலு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சம் போட்டன.

அப்பா கான் குரலையும், பக்கவாத்தியமாக உட்கார்ந்திருக்கிற சாரங்கி வித்வான் வாத்தியத்தின் தந்திகளையும் டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்க “உங்க ஊர்லே இந்த ராகத்தை கல்யாணின்னு சொல்றதாக் கேள்விப்பட்டிருக்கோம். எங்க ஊர்லே இதோட பேரு யமன்” என்று அறிவிப்போடு ருஸ்தம் கானும் இதர பாகிஸ்தான்காரர்களும் யமுனா கல்யாணி ராகத்தைக் கதவு திறக்கலானார்கள்.

நாலு நோட் முன்னே போனதும் பிள்ளை கான் மைக்கைப் பிடித்து, “எங்க ஊர்லே பாடறபோது வாஹ் வாஹ்ன்னு உரக்கச் சொல்லி உற்சாகப்படுத்தறது ரசிகர்கள் வழக்கம். சத்தம் போடுங்கப்பா” என்று குரல் கொடுத்தார். அதிருதில்லேன்னு கேட்டுக் கேட்டு ஆமான்னாலும் இல்லேன்னாலும் விடாமல் அப்புறம் ரசிகர்களை சங்கீத மழையில் புரட்டியெடுத்து விட்டார்கள் அப்பாவும் பிள்ளையும்.

யமன் வெற்றிகரமாக அரங்கேறிய பிறகு கவர்னர் பர்னாலா சிரமப்பட்டு மேடையேறி தம்பூராக்காரரையும் விடாமல் பூச்செண்டு கொடுத்தார். பஞ்சாபியில் பாடச்சொல்லி பர்னாலா ‘ஆளுநர் விருப்பம்’ வெளியிட்டதோடு இண்டர்வெல்.

இடைவேளை முடிந்து கச்சேரி தொடரும் முன்னால், திரும்ப அரங்கத்தில் இருட்டுக்கடை. “பாகிஸ்தான்லே தான் இருட்டுன்னு பார்த்தா இங்கேயுமா?” ஜூனியர் கான் சமயம் பார்த்து அடித்த ஜோக் முஷாரப் காதில் விழுந்திருக்காது.

பர்னாலா கேட்டபடிக்கு பஹாடி ராகத்தில் பாட ஆரம்பித்தார்கள் கான் ஜூனியரும் சீனியரும். முகமத் ரஃபி ‘சவுத்வி கா சாந்த் ஹை’ இந்தி சினிமா பாட்டு மூலமும், தமிழில் பி.சுசீலா கர்ணனில் ‘கண்ணுக்குக் குலமேது’ மூலமும் ரசிகர்கள் மனதில் அழியாத இடத்தைப் பிடித்த மலைப் பிரதேச ராகம் இது. பத்தே கான் “கித்தே சங்கா மேரே டோல்” என்று தொடங்கிய பகாடி வித்தியாசமாக இருந்தது.

சீனியர் கான் பகாடியில் இமயமலைத் தென்றலோடு ஆல்ப்ஸ் சிகரங்களின் குளிர்காற்றையும் கலந்தார். கிழக்கில் புறப்பட்டு, மேற்கத்திய சங்கீத முறைக்கு ஜிவ்வென்று ஷண்டிங் ஆகி தடம் புரளாமல் அவர் சஞ்சரிக்கும் இனிமையில் மெய்மறந்திருக்கும் போது மைக்கைப் பிடுங்கி திரும்ப ஜூனியர் கான் – “நாங்க பஞ்சாபிக்காரங்க. சத்தமா, வாய்விட்டுப் பாடாட்ட சரிப்படாது. பாருங்க, எங்கப்பா எப்படி இந்துஸ்தானியிலே அழகா வெஸ்டர் மியூசிக்கை கலக்கறார்னு”.

மெய்மறக்க வைக்கும் பாட்டுக்கு நடுவே சதா பேசுவது பாகிஸ்தானில் வழக்கம் போல இருக்கிறது. தொடவேண்டும் உச்சத்தை என்று கணவனும் மனைவியும் அந்தரங்கமாகும் நேரத்தில் “இந்த மாசம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டியாச்சா?” என்று விசாரிக்கிறது போன்ற தொந்தரவான சமாச்சாரம் இல்லியோ இது.

பஹாடிக்கு அப்புறம் வந்த கமாஸ் தும்ரி (அவங்க பாணியிலே கமாஜ்) இன்னொரு வித்தியாசம். சங்கராபரணத்தில் ‘ப்ரோசேவா ரெவருரா” என்று மஞ்சு பார்க்கவி சிருங்காரம் காட்டிய கமாஸ் இல்லையாக்கும் இந்த கான் சாகேப் கமாஜ்.

பாட்டியாலா கரானாவில் படேகுலாம் அலிகான், பர்வீன் சுல்தானா என்று ஒரு அமைதியான பிரிவும், பத்தே அலிகான் குடும்பத்தின் த்ரூபத், தாத்ரா, தும்ரி, கயால் என்று ஃபாஸ்ட் பீட் ஆன இன்னொரு பிரிவும் உண்டு என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது. இவர்கள் துணிந்து சோதனை முயற்சியில் ஈடுபடுகிறவர்கள். வேகமே மூச்சு. மேல் ஆக்டேவ்களில் குரல் கிட்டத்தட்ட அபஸ்வரமாகக் கீச்சிடும் வரை நிறுத்துவதில்லை என்று ஜூனியர் கான் ஒரு முடிவோடு தான் சென்னைக்கு மூட்டை கட்டியிருக்கிறார் என்று தெரிகிறது.

தொடர்ந்து வந்த கலாவதி நம்ம ஜேசுதாஸ் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம்’ என்று ஆரம்பித்து, பைரவிக்கு ட்ராக் மாறுவதற்கு முன் பொழிவது. சுருதி சுத்தமாகக் காதில் விழுந்து மனசு முழுக்க கலாவதி நிறைந்தது.

ரசிகர்களை பாட்டோடு ஒத்தாசையாகக் கைதட்டும்படி ஜூனியர் கான் கேட்டுக் கொள்ள அப்புறம் சூஃபியானா கலாம் என்ற ஆன்மீகத் தேடலைப் பற்றிய இனிமையான பஞ்சாபிப் பக்திப் பாடல்கள். ஜூனியரை மட்டும் பாட விட்டுவிட்டு சீனியர் ஓய்வெடுத்துக் கொண்ட நேரம் அது. கிட்டத்தட்ட முப்பது வருடமாக உலகம் முழுக்கச் சுற்றிச் சீடர்களுக்குப் பயிற்சி அளித்துக் களைத்தவர் அவர்.

“இன்னும் கொஞ்சம் பலமாக் கைதட்டுங்க”

ஜூனியர் கான் ஆர்மோனியக் கட்டைகளை பலமாக அழுத்தியபடி கடைசிப் பாட்டாக எடுத்து விட்டது “தமாதம் மஸ்த் கலந்தர்”. பங்களாதேஷ் பாடகி ரூனா லைலா இருபது வருடம் முன்னால் மெல்லிசை மேடைகளில் பிரபலமாக்கிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஸ்பீட் பாட்டு இது. ஆனாலும் இந்துஸ்தானி இசைக் கச்சேரியில் மங்களம் பாட இந்தக் கிட்டத்தட்ட டப்பாங்குத்து வேணுமா?

இதே ரீதியில் சுத்தபத்தமாக ஏலநீ தயராதாவில் ஆரம்பித்து, ராதா காதல் வராதா ரீமிக்ஸ் வழியே மன்மத ராசா என்று முடிக்க நம்ம வித்வான்களுக்குத் துணிச்சல் வர இன்னும் இரண்டு தலைமுறையாவது கடந்து போக வேண்டியிருக்கும்.




p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது