சோறு வேணோ?
"சாப்பிடச் சோறுதான் வேணுமா? ரெண்டு முட்டையும் ஒரு கிளாஸ் பாலும் போதாதா? கூடவே ஒரு கோழியையும் அடித்துக் கறி வைத்துச் சாப்பிட்டால் பரம சுகம்"
- கேரளத்தில் அரிசி விலை குதித்து உயர்ந்ததைச் சொல்லி நடந்த விவாதத்திற்கு மாநில அமைச்சர் திவாகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அளித்த பதில்
அரிசி வாங்கவே காசு இல்லாதபோது மற்றதெல்லாம் வாங்க ஏழை ஜனங்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுந்தபோது, 'நான் சொன்னதை பத்திரிகைக்காரர்கள் வளைத்து ஒடித்து எழுதிவிட்டார்கள்' என்று வழக்கமான வழுக்கலில் மந்திரி தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும், 'அமைச்சர் சொன்னது தவறு. திருத்திக்கொள்ள வேண்டும்' என்று கட்சித் தலைவர் வெளியம் பார்க்கவன் கருத்துச் சொல்லி இருக்கிறார்.
ஐம்பது வருடம் முன்னால் காங்கிரஸ் கேரளத்தில் ஆட்சியில் இருந்தபோது இதே போல் உணவுப் பிரச்சனன ஏற்பட்டது. காங்கிரஸ் தியாகியும் மக்கள் இடையே களப் பணியாற்றியவருமான மூத்த தலைவர் குட்டிமாளு அம்மா, ' ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அரிசி சாப்பிடாமல், விலை குறைந்த கப்பையும் (மரச்சீனி), மத்தியும் (மீன்) உண்ணலாம்' என்று ஆலோசனை சொன்னபோது அவருக்கு 'மத்திமாளு அம்மா' என்று கேலிப்பெயர் சூட்டியதோடு அல்லாமல் அவர் வீட்டு வாசலிலும் சட்டியோடு மீனையும் கப்பையையும் கொட்டி எதிர்த்தவர்கள் இன்று அரிசிக்குப் பதிலாக இன்னும் விலை ஏறியவற்றை உண்ணச் சொல்லி ஆலோச்னை சொல்வது கேரளத்தில் இன்றைய நடப்பு.
0 Comments:
Post a Comment
<< Home