Saturday, August 06, 2005

சோபான சங்கீதமும் எடக்க வாத்தியமும்


கேரளக் கோவில்களில் நடை திறக்கும் நேரத்தில் மத்தளத்தை இசைத்து ஒருவர் பாடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பக்கம் சாதாரண மத்தளம் போல் அதிர்ந்து ஒலி எழுப்பும் தோல் உள்ளதால் தாள வாத்தியமாகவும், மறு புறம் பிருகடைகள் அமைந்து அவற்றை இறுக்கித் தளர்த்துவதன் மூலம் ஆதார சுருதி மீட்ட முடிவதால் இசைக் கருவியாகவும் அமைந்து தனியான கார்வையுடன் ஒலிக்கும் அந்த வாத்தியத்துக்கு எடக்க என்று பெயர்.

எடக்க பற்றி சுந்தர ராமசாமி தன் நாவலான ஜே.ஜே சில குறிப்புகளில் கூறுவது ரசமானது -

"இடைக்கா வாத்தியத்தின் சத்தம் நெஞ்சைத் தொடுகிறது. வர்ண வேலைப்பாடுகள் அதிகமற்ற ஓசைகள். ஒரு சுழற்சியில் மீண்டும் மீண்டும் சுற்றிவரும் ஓசை. ஆனால் மனத்தைச் சிறகு முளைக்கச் செய்கிறது. அதை வாசிக்கும் மாராரை ஓடிச்சென்று தழுவிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 'இந்த நிமிஷத்திலிருந்து உம்முடனேயே இருக்கிறேன். எனக்குக் கற்றுத்தாரும்' என்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது."

எடக்க வாசித்தபடி பாடும் சங்கீதம் கர்னாடக சங்கீதத்தின் கூறுகள் அனைத்தும் கொண்டது என்றாலும் அவசரமின்றி நிதானமாக வலித்து இழுத்துப் பாடப் படுவதாகத் தோன்றும். கோவில் சார்ந்த இசைமரபான அது சோபான சங்கீதம் என்று அழைக்கப்படும்.

கதகளி அரங்கில் செண்டை ஒலியோடு பாடகர்கள் பாடுவது சோபான சங்கீத முறையில் தான். கண், கை அபிநயங்களை (முத்திரைகள்) ஒவ்வொரு வாக்கியத்துக்கும், சில வேளை ஒவ்வொரு சொல்லுக்கும் அநேக விதத்தில் ஆட்டக் கலைஞர் வெளிப்படுத்த வேண்டியிருப்பதற்குச் சோபான சங்கீதத்தின் நெகிழ்ந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.

புலர்காலை நேரத்தில் மலையாளக் கிராமத்து சிற்றம்பலத்தில் தொழுவதற்காகக் காத்திருக்கும்போது, காதில் கேட்டு மனதில் இழைந்து பரவும் சோபான சங்கீதம் எழுப்பும் உணர்வு உன்னதமானது.

தமிழகத் திருக்கோவில்களில் கைத்தாளம் மட்டுமே துணையாக, தமிழ் மரபார்ந்த பண்ணிசையாக ஓதுவார மூர்த்திகள் தேவாரப் பதிகங்கள் இசைப்பது வழக்கம். சோபான சங்கீதம் தரும் இசையனுபவம் அதே தன்மையானது.

இசை விமர்சகர் சுப்புடு ஒரு முறை தினமணியில் இசைவிழா சீசன் விமர்சனம் எழுதும்போது, "கேரளத்தில் சோபான சங்கீதம் என்று ஒன்று பாடுவார்கள். கேட்கச் சகிக்காது" என்று போகிற போக்கில் எழுதிப் போக, அதை மறுக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது.

சோபான சங்கீதத்தில் ஒரு கீற்றை இங்கே சுட்டியைச் சொடுக்கிக் கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/p/x/wJyuO89zEtNvwrOupt7D/

இளம் பாடகர் நிகில் பாடிய இந்த கானம் இடம்பெற்ற படம், மோகன்லால் நடித்த 'ராவணப் பிரபு'.

மேலே உள்ள புகைப்படம் மலையாளத் திரைப்படமான 'புனர்ஜனி'யிலிருந்து. எடக்கா வாசித்தபடி சோபான சங்கீதம் பாடி நிற்கும் சிறுவன் பிரணவ் மோகன்லால்.

1 Comments:

At 12:22 pm, Blogger துளசி கோபால் said...

எந்தொரு ஸுகம், கேள்க்கான்!!!!

வளரே நந்நி.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது