Wednesday, July 13, 2005

மத்தளராயன் என்ற பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்

திண்ணை இணைய இதழில் மத்தளராயன் என்ற புனைபெயரில் 'வாரபலன்' என்ற பகுதியை நான் மிக அண்மைக்காலம் வரை எழுதி வந்திருக்கிறேன்.

இந்தப் பெயரைப் பயன்படுத்தி இப்போது பல வலைப் பதிவுகளில் பின்னூட்டம் வருவதைக் காண்கிறேன்.

அவை எதுவும் நான் எழுதியதில்லை என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

An excerpt from Vaaraphalan, July 13, 2003

பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை.

காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ் சாகுருவியாக ஸ்டேண்டர்ட் அண்ட் புவர் ரேட்டிங் சரிந்த சோக சமாசாரத்தையும் இன்னோரன்ன விஷயங்களையும் தினமும் தருகிற அலுப்பு ஒரு பக்கம். ரயில் விபத்து, எஸ்மாவில் கைது, டிஸ்மிஸ், விடுதலை, பள்ளிப்பையன் தற்கொலை போன்ற சகலரையும் எதோ விதத்தில் பாதிக்கும் விஷயங்கள் பற்றிப் படிக்கும்போது ஏற்படும் கவலை, பயம், சகலமானதிலும் நம்பிக்கை இழப்பு என்று இன்னொரு புறம்.
சனிக்கிழமை அலுவலகம் கிளம்பும்போது வாசலில் காத்திருக்கிற மாம்பலம் டைம்ஸ் என்ற எங்கள் பேட்டைப் பத்திரிகை தரும் ஆசுவாசத்தை வேறு எந்தப் பத்திரிகையும் தர முடியாது.

பத்திரிகை வாங்க ஒரு பைசா செலவில்லை என்பதில் தொடங்கும் நிம்மதி அது. ஈராக்கும், சார்ஸ§ம், வில்லன் புஷ்ஷ§ம் மந்திரம் போட்டது போல் மறைய, இங்கே முதல் பக்கத்தில் ஆரிய கௌடா தெருவில் மரத்தைச் சுற்றி மாநகராட்சி வைத்திருந்த சிமிண்ட் பாளங்கள் நீக்கப்பட்டன. அயோத்தியா மண்டபத்தில் வோக்கல் கான்சர்ட் பை ரங்காச்சாரி யண்ட் பார்ட்டி. புது ரயில்வே டைம்டேபிள் மாம்பலம் ஸ்டேஷனில் விற்பனைக்குக் கிடைக்கிறது (விலை இருபத்தைந்து ரூபாய்).

ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் இருந்தபோது அவர் எழுதிய எதையும் நான் படித்ததில்லை. ஆனால் மாம்பலம் டைம்ஸில் வாராவாரம் படிக்கிறேன். ரங்கராஜனின் கட்டுரை மொழி சுவையானது. பின் நவீனத்துவப் பண்டிதர்கள் தலைகீழாக நின்றாலும் அந்த லகுவும் ஆற்றொழுக்கும் அவர்கள் எழுத்துக்கு வரவே வராது.

மாம்பலம் டைம்ஸில் ராண்டார் கை 'மாம்பலம் ம்யூசிங்ஸ்' என்ற பெயரில் மாம்பலம் பிரமுகர்களைப் பற்றி எழுத ஆரம்பித்து சாவகாசமாக கல்கி, சாண்டில்யன், நாகையா வரை வந்தார். பிறகு லட்சுமிகாந்தன் கொலைப் பக்கம் பேனாவைத் திரும்பினார். அப்புறம் அதிலிருந்து மீண்டு வரவே இல்லை. ஆச்சு ரெண்டு வருஷம், லட்சுமிகாந்தன் அமரத்துவம் பெற்று மாம்பலம் டைம்ஸில் இன்னும் வாராவாரம் வளைய வருகிறார். கன்னித்தீவுக்கு முன்னால் ராண்டார்கை லட்சுமிகாந்தன் கதையை முடித்து விடுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.

பேட்டைப் பத்திரிகையில் இன்னொரு மகிழ்ச்சி, ஐம்பது அறுபது வருடத்துக்கு முற்பட்ட காலத்துக்குப் போய் இறங்கியது போல் ஏற்படும் பிரமை.

"வீட்டு நம்பர் இன்னது, லேக் வ்யூ ரோட், மாம்பலம் வாசியான ஆராவமுதன் கடந்த வியாழக்கிழமை மதியம் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு வெறிநாயால் துரத்தப்பட்டார். கடித்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் ஜூபிளி தெரு டாக்டர் கிருஷ்ணன் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்து ஊசி போட்டார். ஆராவமுதனும், டாக்டர் கிருஷ்ணனும் மேற்கு மாம்பலத்தில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம் நிருபரிடம் சொன்னார்கள்"

பரபரப்பும் ஓட்டமும் ஆகக் குறைந்திருந்த நாட்களில், அதாவது ரெண்டாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அது போகட்டும் -

மேற்கு மாம்பலத்தில் நாய்கள் பற்றி இந்த ஆள் பிரஸ்தாபிக்கிறானே? அதுக்குப் பின்னால் என்ன இருக்கும்? ஏதாவது இலக்கிய வம்படி வல்லடி வழக்கடியா? மேற்கு மாம்பலத்தில் இருக்கப்பட்ட சிற்றிலக்கிய, பேரிலக்கிய வாதிகள் யாவர்? கோமல் சாமிநாதன்? அவர் போய்ச் சேர்ந்தாச்சே. போஸ்டல் காலனி 'ழ' ராஜகோபாலன், விருட்சம் அழகியசிங்கர் ..

இப்படி யாராவது நகுலனின் நாய்கள், நடுநிசி நாய்கள், நாச்சார் மட நாய்கள் ரேஞ்சுக்கு ஆராய்ச்சி எல்லாம் செய்ய ஆரம்பித்தால் நான் சொல்லிக் கொள்வது இதுதான் -

ராஜகோபாலனும், அழகியசிங்கரும் சாதுப்பிராணிகள். இதை எழுதுகிறவன் சரியான 'லொள்'ளுப் பேர்வழி. குரைக்கிற நாயாகப்பட்டது கடிக்கக்கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.


மத்தளராயன் என்னும் இரா.முருகன்

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது