Friday, July 08, 2005

இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் - Revised

பெயரிலியின் பதிவு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. எழுபதுக்களில் தெற்குத் தமிழகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களுக்கு ஆவேசமான ரசிகர்கள் நிறைய இருந்தார்கள். இது அறுபதுகளிலேயே தோன்றிய ஒன்று என்று நினைக்கிறேன். இந்திய வானொலியில் காலை ஏழே காலுக்கு தில்லியிலிருந்து கரபுர என்று இரைச்சலுக்கு நடுவே 'ஆகாசவாணி, செய்திகள், வாசிப்பது சாம்பசிவம்' என்று யந்திரத்தனமான குரலில் படிக்கிற செய்தி அறிவிப்பாளர்களை விட, பக்கத்து இலங்கையிலிருந்து சினேகிதமான குரலில் தொடங்கி, 'இப்போது நேரம் சரியாகப் பத்து மணி ஐந்து நிமிடம். வணக்கம் கூறி விடை பெறுவது' என்று அன்போடு முடிக்கும் ஈழத் தமிழ் அறிவிப்பாளர்கள் நம் மக்களுக்கு நெருங்கியவர்களாக இருந்தார்கள்.

எனக்கு நினைவு வருகிற அறிவிப்பாளர்கள் - மயில்வாகனம், பரராசசிங்கம், சில்விஸ்டர் பாலசுப்பிரமணியம், ஏ.எச்.அப்துல் அமீது, கே.ஏ.ராசா, புவனலோசனி வேலுப்பிள்ளை, ராசேஸ்வரி சண்முகம் .. அப்புறம், ஆசிய சேவையில் 'ஸ்ரோதாக்களுக்கு நமஸ்காரம்' என்று மாலை நாலு மணிக்குக் கேட்கும் ஒரே மலையாளக் குரலுக்குரிய கருணாகரன்.


இவர்களில் அமீது இன்னும் பிரபலமாகச் சென்னையில் நட்சத்திர அறிவிப்பாளராக, மாறாத அதே குரல் வளத்தோடு இருக்கிறார். ராசா இறந்து போனதை ஒரு வலைப்பதிவில் படித்தபோது நெருங்கிய உறவினரைப் பறிகொடுத்த துக்கம்.

ராசேஸ்வரி சண்முகத்துக்கு ஆராதகர்கள் இன்னும் இருக்கிறார்கள், இணையத்திலும் இருக்கிறார்கள். சேலம் ஆத்தூர் அன்பர் ஒருவர் ரா.சவின் புகைப்படத்தோடு எழுப்பிய இணையக் கோவில் இங்கே. மரணத் தறுவாயில் இருந்த ஒரு ரசிகர் நேயர் விருப்பமாகக் கேட்டது அவர் குரலைத் தானாம்.

மற்றவர்கள் என்ன ஆனார்கள்? யாருக்காவது தெரியுமா?

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது