Sunday, May 01, 2005

பலசரக்கு

கவிதை என்ற இலக்கிய உருவம் பிறந்த அதே நாளில் (அல்லது அதற்கு முன்னால்) மோசமான கவிஞர்களும் உருவாகி விட்டார்கள்.

காதை இழுத்து அறுப்பது போன்ற பச்சைத் தமிழ்த் தண்டனைகளுக்கு எல்லாம் பெப்பே சொல்லி விட்டு இங்கே மோசமான கவிதை பெருகிக் கொண்டே தான் போயிருக்கிறது.

ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் கதைகள் பலவற்றிலும் கடைசிக் காட்சியில் ஆஸ்ட்ரிக்ஸ¤ம், ஒபீலிக்சும் மற்ற கிராம நண்பர்களும் அவர்களின் வெற்றியைக் கொண்டாடக் காட்டுப் பன்றி மாமிசத்தோடு அட்டகாசமாக விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, கிராமக் கவிஞனான காக்க·போனிக்ஸ் கைகால் கட்டப்பட்டு, வாயில் துணியோடுமரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பான் பரிதாபமாக.

ஐரோப்பாவில் மோசமான கவிஞர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிண்டல் செய்யவாவது கூட்டம் கூடிய நிகழ்ச்சிகள் உண்டு.

போன நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்படி ஒரு ஆங்கிலக் கவிஞர் கவியரங்கத்தில் ஏறித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு 'கவிதை' படிக்க, கடுப்பாகி அவரை அடிக்கப் போனார்கள் ரசிகர்கள். மோசமான கவிஞர் என்றாலும் ஆசாமி புத்திசாலி என்பதால் இதை எதிர்பார்த்து, கையில் வண்ணக் குடைகளை விரித்தபடிகோமாளிகளின் கூட்டம் ஒன்றை மேடைக்கு முன்னால் நிற்க வைத்து விட்டுத் தாய்மார்களே, பெரியோர்களே என்று ஆரம்பித்தாராம்!

ஸ்காட்லாந்து கவிஞரான வில்லியம் டோபாஸ் மக்கொனகலை அவருடைய சொந்த ஊரான டுண்டி நகர மக்கள் ஒருமித்துத் திரண்டு மரியாதை செய்ததோடு அவரைப் பற்றி ஒரு இணையத் தளத்தையும் உருவாக்கி விட்டார்கள்.

Beautiful Railway Bridge of the Silvery Tay!
With your numerous arches and pillars in so grand array
And your central girders, which seem to the eye
To be almost towering to the sky.
The greatest wonder of the day,
And a great beautification to the River Tay,
Most beautiful to be seen,
Near by Dundee and the Magdalen Green

என்று ரயில்வே பாலம் பற்றிய'அமரத்துவம் வாய்ந்த' கவிதை வரிகளை எழுதியவர் இவர்.

ஆயிரத்து எண்ணூறுகளில் தொடங்கி இதுவரை இவர்போல் மோசமான ஒரு கவிஞர் உலகத்தில் எந்த மொழியிலும் பிறக்கவில்லை என்று அவர்கள் பெருமையோடு அடித்துச் சொல்கிறார்கள்.

இப்படி எல்லாம் தமிழர்களின் பெருமையில் பங்கு போட இவர்களுக்கு என்ன தைரியம்!
*************************************
இந்த வாரம் நான் ரசித்த கவிதை.

சொல் விளையாட்டின் குறும்பு மொழிபெயர்ப்பில் காணாமல் போய்விடுகிறது என்பதால், ஆங்கிலத்திலேயே தருகிறேன் -
பொயட்ரி.காம் இணையத் தளத்தில் இருந்து -

Bathroom Humor
---------------
A most peculiar guy
In the adjacent stall:
"I love you too. Goodbye"
Concludes his cellphone call.
Now, doesn't it deflate your
Idea of the romantic
That even calls of nature
Require Bell Atlantic?

(Bob McKenty)
********************

லண்டன் மாநகரில் போன ஞாயிறன்று நடந்த விவசாயிகள் பேரணி பிரதம மந்திரி டோனி பிளேரை அவருடைய வழக்கமான ஒதைங்கடா சதாம் ஹ¤சைனை உதாரை அடக்கி வாசிக்கச் செய்து விட்டது. அண்ணாச்சி நாற்காலி ஆட்டம் காணலாம் அல்லது அடுத்த தேர்த்லில் தொழிற்கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போகலாம் என்ற பயம் காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் நரி.

இங்கிலாந்து கிராமங்களில் எத்தனையோ நூற்றாண்டுகளாக நரி வேட்டை ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்கள் லொங்கு லொங்கு என்று முன்னால் ஓட, குதிரைகளில் ஏறி உட்கார்ந்து துப்பாக்கியும் கையுமாகப் புதர்களில் நரிகளைத் தேடிச் சுட்டு வீழ்த்துகிற இந்த வேட்டைக்குத் தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பது இங்கிலாந்து விவசாயிகளைக் கொதித்தெழ வைத்திருக்கிறது. மஞ்சுவிரட்டுக்குத் தடை என்றால் நம்ம எட்டுப்பட்டிக் காளைகள் 'த்தா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று பாய்ந்து வருவார்களே அது போல்.

கண்ட்ரிசைட் அலையன்ஸ் என்ற கிராமப்புறக் கூட்டமைப்பின் சார்பில் கிட்டத்தட்ட நாலு லட்சம் விவசாயிகள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அருகே அணிவகுத்து நடந்து பேரணி நடத்தி லண்டன் நகரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது இந்த நூற்றாண்ட்டில் இதுதான் முதல் முறையாம். த்ரீ பீஸ் சூட் அல்லது ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்த இந்த விவசாயிகள் மனதளவில் நம்மூர் வேட்டி துண்டு விவசாயிகள் போலத்தான். நிலமும் நீரும் மண்ணும் அதன் மணமும் இவர்கள் மனதில் பச்சென்று ஒட்டியிருக்கிறது.

நரி வேட்டை மட்டுமில்லை பிரச்சனை. தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் கிராமப்புற மக்களை அலட்சியம் செய்கின்றன என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டு (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?).

இங்கிலாந்து கிராமங்களில் கிட்டத்த்ட்ட மூவாயிரம் தபால் ஆபீஸ்கள், கிட்டத்தட்ட அதே அளவு வங்கிக்கிளைகள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. காவல் நிலையங்களை மூடிவிட்டு நடமாடும் காவலான ·மொபைல் பொலீஸ் மூலம் தான் பாதுகாப்பு. மருத்துவமனைகள் ஆகக் குறைச்சல்.

நகரவாசிகள் அதிக விலை கொடுத்து கிராமப்புற வீடுகளை வளைத்துப் போட்டுக்கொள்வதால் (விடுமுறைக்கு வந்து தங்க), கிராமப்புற மக்கள் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம்...

இது இப்படி என்றால், இவர்களுக்கு எதிராக சில நகர் சார்ந்த அரசியல்வாதிகள் அதிரடியாக வைக்கும் புகார்களும் கோரிக்கைகளும் இப்படி -

விவசாயத்துக்குக் கொடுக்கும் நிதி உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும்.இதை வாங்கி விவசாயிகள் கொழுக்கிறார்களே தவிர தானிய, மாமிச விலை குறையவில்லை. விவசாயத்தை இந்த நாட்டில் தடை செய்து,வெளிநாட்டிலிருந்து குறைந்த செலவில் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

வரம் வாங்கிய பஸ்மாசுரன் கடைசியில் பரமசிவன் தலையிலேயே கை வைக்க வந்தது போல், உலக மயமாக்கல் எங்கே போய் முடியப் பார்க்கிறது பாருங்கள்.
**************************************


நண்பர் எழுத்தாளர், இலக்கிய திரைப்பட விமர்சகர் யமுனா ராஜேந்திரனைச் சந்திக்க லண்டனில் அவருடைய கருங்குதிரைத் தெரு இல்லத்துக்குப் போயிருந்தேன்.
ப்ளாக் ஹார்ஸ் ரோட், விக்டோரியா பாதாள ரயில் தடத்தில் இறுதியான புகையிரத நிலையத்துக்கு முந்தியது.

கென்சிங்டனில் இருந்து போய்ச்சேர முக்கால் மணிநேரம் பிடிக்கும் பயணம் மனதில் இன்னும் இருக்கக் காரணம் கையில் கோக்கோ கோலா காகிதக் கப்பும் தோளில் குழந்தையும், இன்னொரு தோளில் லெதர்பையுமாக ரயில்பெட்டியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இளம்பெண். திபேத்திய சாயல் தெரியும் முகம். பையிலிருந்த ஐம்பது பென்ஸ் நாணயத்தைக் குவளையில் போட்டுவிட்டு அவளுடன் பேச நினைத்தேன். அவளுக்கு ஆங்கிலம் தெரியாததாலோ அல்லது தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாததாலோ அது முடியாமல் போக, அடுத்த நிறுத்தத்தில், குவளையைத் தோள்பையில் வைத்துக் கொண்டுசாமானிய ரயில் பிரயாணியாக இறங்கி விட்டாள் அவள்.

ராஜேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது லண்டனுக்கு வரும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தைச் சொன்னார் - பலரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து அழைத்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவர்களில் பலருக்கும் ஆங்கிலம் தெரியும்.. ரயிலை, பஸ்ஸைப் பிடித்து வருவது அத்தனை கஷ்டமானதா என்ன? வாயிலே இருக்கு வழி.. அதுவும் இங்கே எல்லா ரயில் நிலையத்திலும் பச்சைக் குழந்தைக்கும் புரியும்படியாக விவரம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

பல எழுத்தாளர்கள் pamper செய்யப்பட வேண்டும்; அவர்கள் எழுத்தை அடி பணிந்து படிக்க வேண்டும்; பேச்சைத் தொழுதெழுந்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது யமுனாவின் அடுத்த குற்றச்சாட்டு. 'ஆளை விடுங்க சார் .. நான் எழுதினதைப் படிக்கவேண்டும் .. அதைப்பற்றிக் கதைக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன் .. எனக்கும் இந்த ஆராதனைக்கும் ரொம்ப தூரம்' என்றேன்.

தமிழ்ப்பதிப்பாளர்கள், புத்தக வணிகர்கள் பற்றியும் யமுனாவுக்கு விமர்சனம் உண்டு.

"ஒரு பவுண்ட் என்பது நம்ம ஊர் மதிப்புக்கு எழுபது ரூபாய். அங்கே இருக்கப்பட்டவர்கள் இங்கே எல்லோரும் லட்சக்கணக்காக சம்பாதித்துக் கொட்டுவதாகவும், அதில் ஒருபகுதி நியாயமாகத் தங்களுக்குப் போய்ச்சேரவேண்டியது என்பது போலவும் எதிர்பார்த்து, வெளிநாட்டில் இருந்து வரவழைத்தால் இஷ்டம் போல் புத்தகத்துக்கு விலை வைப்பது, ஏனோதானோ என்று பார்சல் செய்து அனுப்புவது என்று செயல்படுகிறார்கள்" என்று வருத்தப்பட்டார் அவர். பத்மநாப ஐயரும் கிட்டத்தட்ட இதையே தான் சொன்னார்.

இங்கே இருக்கும் தமிழர்கள் ஒவ்வொரு பவுண்டையும் எத்தனை உழைத்துச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். அதுவும் லண்டன் போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, சாப்பாடு, பிரயாணம் என்று செலவிடப்பட வேண்டிய தொகை மற்ற இடங்களோடு ஒப்பிட்டால் மிக அதிகம். அறுபது வயது கடந்தாலும் ஓய்வில்லாமல், ஞாயிற்றுக் கிழமைகளிலும் உழைக்கிற பெரியவர் பத்மநாப ஐயர். நான்கு பெரிய தொகுதிகள் கொண்டு வந்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து இலக்கியச் சேவைக்காக இப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்த கைக்காசையும், நேரத்தையும் இழக்கச் சிலராவது இருப்பதைப் பற்றியும், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் இலக்கிய மழை குறித்தும் எத்தனை முறை வேண்டுமானாலும் நான் மனம் நெகிழ்ந்து எழுதத் தயார்.

ஐயரும் யமுனாவும் தெரிவித்த கருத்துக்களை நம்மூர்ப் பதிப்பாளர்களிடமும், நண்பர் எழுத்தாளர் திலீப்குமார் போன்ற நூல் விற்பனையாளர்களிடமும் சேர்ப்பிக்கிறேன் - ஆவன செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன்.
*****************

இங்கிலாந்தில் முடி திருத்துதல் நல்ல லாபம் சம்பாதிக்க வகை செய்யும் தொழிலாக மாறி வருகிறது. முன்னைவிட நிறையப் பெண்கள் இந்தத் தொழிலில் இறங்கி இருக்கிறார்கள்.

தாய்லாந்திலும் அமெரிக்காவிலும் முடிதிருத்தகங்களில் பெண்கள் தான் முழுக்க முழுக்கப் பணிபுரிவதைப் பார்த்திருக்கிறேன். தாய்லாந்தில் பெரும்பாலும் தாய் அழகிகள் அல்லது சீன வனிதைகள். கலிபோர்னியாவில் பிலிப்பைன்ஸ், வியத்னாமியப் பெண்கள்.

ஆனால் இங்கே இங்கிலாந்தில் பிரிட்டீஷ் பெண்களே வாயில் சூயிங்கம்மைக் குதப்பிய்படி ஆண் பெண் வாடிக்கையாளருக்குச் சரமாரியாக வெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்க்ள்.

முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு, கர்ப்பப்பை தொடர்பான துன்பங்கள் ஏற்படுவதாக அண்மையில் ஒரு ஆய்வில் கண்டுபிடித்தாலும் - இவர்கள் சதா கையாளும் முடிக்கு ந்¢றமேற்றும்சாயத்தால் வருவதாம் இது - இவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

பல ஊர்களில் கிளைகள் இருக்கும் ஒரு முடிவெட்டும் ந்¢றுவனத் தலைவருக்கு வாரிசான ஒரே மகள் படுகுஷியாக முடி வெட்டக் கிளம்பியிருக்கிறார் - அப்பா நடத்தும் ஒரு கடையில் வெட்டிப் பழகி தொழில் நுட்பம் தெரிந்தபிறகு. மில்லியன் பவுண்ட் பணம் புரளும் நிறுவனமாக அவருடைய நிர்வாகத்தில் வ்¢ரைவில் வரலாம்.

குறைந்தது ஒண்ணரை பவுண்டிலிருந்து அதிக பட்சம் முப்பது பவுண்ட் வரை கட்டணம். கிட்டத்தட்ட மொட்டை அடித்தது போல் ஒரு தலையலங்காரம் தான் இங்கே ஆண்கள் மத்தியில் பிரபலம். நாற்காலியில் உட்காரும்போதே 'சமத்தோல்லியோ, ஒட்ட வெட்டாதேம்மா' என்று ஸ்டாண்டிங்க் - கட்டிங் - இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்காம்ல் லேப்டாப்பில் ஏதோ வேலையில் மும்முரமாக இருந்து அரை மொட்டையனாக உலவிய அனுபவம் எனக்கு உண்டு.

தமிழ் இலக்கியத்தில் முடிவெட்டுதல் எங்கே எல்லாம் வருகிறது என்று அலசுவது ஒரு சுவாரசியமான காரியம்.

மழித்த்லும் நீட்டலும் வேண்டா என்ற வள்ளுவரை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

முடிவெட்டிக் கொள்ளத் தலை கொடுத்தபடி ஒரு ஆசாமி வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார். காளமேகப் புலவர் அந்தப் பக்கம் போயிருக்கிறார். இந்த ஆள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், 'யோவ் காளமேகம் . மன் என்று ஆரம்பித்து மலுக்கு என்று முடியும்படி ஒரு வெண்பா பாடும்' என்று அந்த் வம்புக்காரக்கவிஞரைக் கேட்டிருக்கிறார். லட்டு மாதிரி இப்படி ஒருத்தன் மாட்டிக் கொண்டால் காளமேகம் விடுவாரா?

இந்த ஆள் நீளமாகக் குடுமி வைத்துக் கொள்ளாமல் வெட்டிக் கொள்ளக் காரணம் என்னவென்றால், இவன் வீட்டுப் பெண்டிர் குடுமியைப் பிடித்து இழுத்து ஓங்கி இவன் தலையில் குட்டாமல் இருப்பதற்குத் தான்' என்று பாடி விட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வசவுக்கு ஆளை எதிர்பார்த்துப் போய்விட்டார். 'மன்னு திருமலைராயன்' என்றுதொடங்கி, 'இழுத்துக் குட்டாமலுக்கு' என்று மன்னில் ஆரம்பித்து மலுக்கில் முடியும் அந்த் வெண்பா.

சி.மணியின் ஒரு புதுக்கவிதையில்

'வேலை வீடு தேடி வரும்
காத்து நிற்கும்'

என்று வாசலில் பெட்டியுடன் பொறுமையாகக் காத்திருந்து நடுவில் ஒரு வினாடி தலை நுழைத்து உள்ளே பார்த்து, உடனே திரும்பி வெளியே ந்¢ற்கிற நாவிதரை, வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருக்கும் வீட்டுக்காரர் அடுத்த வாரம் வரச் சொல்வார். அதிகம் பேசாமல் மனதை நமநமவென்று பிசையும் கவிதை இது.

ம.அரங்கநாதனின் ஒரு சிறுகதையில் அநாதையான முத்துக்கறுப்பனை (அவர் கதை எல்லாவற்றிலும் கதாநாயகன் பெயர் முத்துக்கறுப்பன் தான்!) அவர் சித்தப்பா முடி வெட்டும் தொழிலாளியிடம் உதவியாளனாகச் சேர்த்து விடுவார். தான் 'மேல்சாதிக் காரர்' ஆனாலும் தன் அண்ணன் மகனனச் சிறுமைப்படுத்துவதாக அவருடைய சின்னத்தனமான எண்ணம். ஆனால் முத்துக்கறுப்பன் வளர்ந்து அந்தக் கடைக்கே அதிபராகி நல்ல நிலைமைக்கு வருவதாகக் கதை வளரும்.

ம.அரங்கநாதனின் 'காடன் மலை' சிறுகதைத் தொகுதி படித்திருக்கிறீர்களா? தமிழ் எழுத்தாளர்களில் அரங்கநாதன் ஒரு திருமூலர்; நம்மாழ்வார். ரத்தினச் சுருக்கமாகக் கதை சொல்வதில் அவருக்கு இணையாக யாசுநாரி காவபாத்தாவைத் தான் சொல்ல வேண்டும். (காவபாத்தா பற்றி எழுதியிருந்தேனே ..)

சார்வாகனின் 'அமர பண்டிதர்' முடி திருத்தும் நண்பர் ஒருவர் கட்டும் கோவில் பற்றியது. அடங்கி ஒலிக்கும் அங்கதம் நிறைந்த குரல் சார்வாகனுடையது. (தொழுநோயைக் குணப்படுத்துவதற்காக, நோய்த் தடுப்புக்காக சமூகத்தில் விளிம்புநிலை மக்களிடையே இடையறாது தொண்டு புரிவதற்காக அரசு விருது பெற்றபிரபல மருத்துவ அறிஞர் சார்வாகன் என்று எத்த்னை பேருக்குத் தெரியுமோ!)

வி.கே மாதவன் குட்டியின் மலையாள நூலான் 'ஓர்மகளுடெ விருந்நு' புத்தகத்தில் இருந்து போன நூற்றாண்டு தொடக்கத்தில் மலையாளக் கிராமத்தில் நிலவிய தலைமுடி அடையாளம் பற்றிய பகுதியை இங்கே நான் மொழி பெயர்த்துக் கொடுத்திருந்தது நினைவு வருகிறது.

பிராமணர்கள் என்றால் குடுமி, நாயர்கள் என்றால் அழகாக வெட்டப்பட்ட க்ராப், ஈழவர் என்றால் தலையில் பப்படத்தைக் கவிழ்த்தது போன்ற பப்படவெட்டு .. நாவிதர் இப்படித்தான் வெட்டியாக வேண்டும். மாதவன்குட்டியின் கிராம நாவிதர் ஒரு புரட்சி செய்து நம்பூதிரிக்குப் பப்படவெட்டும் நாயருக்கு மொட்டையும் போடுவார் -அவர் சுதியேற்றிக் கொண்டு கத்திரி பிடித்ததால் அவரைக் கோவித்துப் பயன் இல்லாமல் போனதாம்!
************************

போன வாரம் இங்கே ·ப்ளாக்பூலில் நடந்த நாட்டை ஆளும் தொழிற்கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து வந்த மாஜி ஜனாதிபதி பில் கிளிண்டன், பிரதமர் டோனி பிளேரோடு ஒரே மேடையில் நின்று இராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்று முழங்கிஇருக்கிறார்.

கிளிண்டனை அமெரிக்காவில் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. இங்கே அவர் என்ன, அரசியாரே சொன்னாலும், எதுக்கு இப்போ போர் என்பதே பெருவாரியான மக்களின் எண்ணம்.

கிளிண்டன் இப்படிப் போர் ஆதரவுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, இன்னொரு மாஜி அமெரிக்க ஜனாதிபதி நீச்சல் குளத்தில் இலை அள்ளி வெளியே போட்டபடி நாள் முழுக்கச் செலவழிக்கிறார்.

அவர் 91 வயதான ரொனால்ட் ரீகன். பழைய ஹாலிவுட் நடிகரான ரீகன் அல்ஷீமர் நோயால் பீடிக்கப்பட்டு சதா ஏதாவது பிதற்றியபடி வாழ்க்கையின் மிஞ்சிய நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் சீக்கிரமே போய்ச் சேர்ந்தால் கூட நல்லதுதான் என்று அவர் மனைவி (82 வயது) நான்சி கூட நினைக்கிறார் என்றுபடித்தபோது வேதனையாக இருந்தது. நான்சியின் தற்போதைய முழு வேலை ரீகனைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதுதான். 60 வயது நிரம்பிய அவர்களுடைய மகள் இறந்தது கூட ரீகனுக்கு இன்னும் தெரியாதாம். எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.

நினைத்துக் கொண்டாற்போல் வீட்டில் நீச்சல் குளத்தில் போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் இலைகளைப் பொறுக்கித் தரையில் எறிந்து கொண்டிருக்கிறார் ரீகன். அவரை அப்படியாவது தொடர்ந்து இயங்கியபடி வைத்திருக்க, அவர் தரையில் போட்ட இலைகளைப் பொறுக்கி எடுத்துத் திரும்பத் தண்ணீரில் எறிய ஒரு வேலைக்காரர் அவர் கண்ணுக்கு மறைவாக நிற்கிறாராம்.
*********************************************

இந்த வாரம் நான் ரசித்த ஒரு கவிதை - எரிக்கா ஜாங் எழுதியது.

பெண்தான்
------
என் பாட்டியின் பொழுது
ஆப்பிள் கேக் தயாரிப்பதிலும்
தூசி துப்பட்டை நீக்குவதிலும்
துணி துவைப்பதிலும் தைப்பதிலும்
கழிந்து போனது என்பதால்
நான் கிட்டத்தட்ட
வீட்டைக் கவனிப்பதே இல்லை.
என்றாலும் எனக்கு வீடு பிடிக்கும்.
என் வீடு சுத்தமாக இருந்தால்
நன்றாக இருக்கும்தான்.

என் அம்மாவின் நிமிஷங்கள்
வாக்குவம் கிளீனரின் சத்தத்தில் உறிஞ்சப்பட்டதாலும், இயங்காமல் போன
வாஷிங்க் மிஷினோடு
சதா போராடி
அதைச் சரிசெய்ய வருகிறவனை எதிர்பார்த்து
தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு
அவள் காத்திருக்க வேண்டி வந்ததாலும்
நான் என் துணிகளை வெளுக்க
லாண்டரிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

தூசி அடைந்த வீட்டில் வாழ்கிறேன்.
ஆனாலும் எல்லோரையும் போல்
எனக்கும் சுத்தமான வீடுகளைப் பிடிக்கும்.
என் டைப்ரைட்டர் விசைகள் போல
என் விரல்களின் அடியே
பொங்கிப் பொங்கி வர
ரொட்டிக்கு மாவு பிசைய
எனக்கும் பிடிக்கும்.

சலவைத்துணி வாசம்,
கொதிக்கும் குழம்பின் சுகமான வாடை
எல்லாம் எனக்கும் பிடித்தமானவையே.
கிட்டத்தட்ட காகிதம், மசி வாடை போல.
தேர்ந்தெடுக்க எதுமில்லாமல்
இருந்திருக்கக் கூடாதா?
நான் இரண்டு பெண்ணாக
இருந்திருக்கக் கூடாதா?
நாட்கள் இன்னும் நீளமானவையாக
இருக்கக் கூடாதா?
ஆனால் அவை சுருக்கமானவை.

ஆகவே நான் எழுதுகிறேன்.
தூசி அடைந்து கொண்டிருக்கிறது.
நான் என் டைப்ரைட்டர் முன் அமர்ந்து
என் பாட்டியை நினைத்துக் கொள்கிறேன்.
எல்லா அம்மாக்களையும் நினைத்துக் கொள்கிறேன்.
அவர்கள் இழந்த நிமிடங்களையும்.
தம்மை விட அவர்கள் நேசித்த வீடுகளையும்.

நான் நேசிக்கும் இவன்
சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான்.
ஏனென்றால் -
இத்தனை நூற்றாண்டுகளுக்கு அப்புறம்
அவனுக்குத் தெரியும்.
என்னைவிட அவனுக்கு
அது சுலபமான காரியம் என்று.

*************************************************

எரிக்கா ஜாங்கின் கவிதை பற்றி போன டயரியில் குறிப்பிட்டிருந்தேன். அமெரிக்காவில் கணவர்களும் ஜாங்கின் கவிதையில் சொன்னபடி வீட்டு வேலையில் உதவுவதாகவும், குழந்தைகளைத் தூக்கி வளர்ப்பதில் மனைவிக்குத் ஆதரவுக் கரம் நீட்டுவதாகவும் தேன்சிட்டு தெரிவித்தார். நன்றி, தேன்சிட்டு (புனைபெயர்?) சிறுமிகளுடன் பேசமாட்டேன் என்று யார் சொன்னது? ஒவ்வொரு கடிதமும் எல்லோருடனும் பேசுவதற்குத் தானே?

இங்கே இங்கிலாந்தில் சோனிக் குழந்தையோ, கழுக் மொழுக்
பாப்பாவோ யாராக இருந்தாலும் ப்ராமில் வைத்துத் தள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.

நம்ம ஊரிலும் ப்ராம் நாகரீகம் வந்து - எவ்வளவு நாளாகி விட்டது தெரியுமா?

'கல்கி' 1940-களில் சென்னை தி.நகர் உஸ்மான் தெருவிற்குக் குடிபெயர்ந்தபோது (அப்போதெல்லாம் உஸ்மான் தெருவில் நகைக்கடை, ஜவுளிக்கடை, முமுகிப் போகும் நிதிநிறுவனம் எல்லாம் இல்லையாம்), தினசரி சாயந்திரம் கல்கி தம்பதியர் வாக்கிங்க் போவார்களாம்- அவர்களுடைய பிள்ளையை ப்ராமில் வைத்துத் தள்ளியபடியே.

தற்போதைய கல்கி நிர்வாக ஆசிரியரும் என் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவருமான பெரியவர் கி.ராஜேந்திரனை ப்ராமில் உட்கார்ந்து போகும் குழந்தையாக நினைத்துப் பார்க்க எவ்வளவு நினைத்தாலும் முடியவில்லை!!

குழந்தையைத் தூக்கி வளர்ப்பதில் ஒரு சவுகரியம் உண்டு. பிற்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "உன்னை மார்மேலும் தோள் மேலும் தூக்கி வளர்த்தேனே" என்று டயலாக் விடலாம்.

ப்ராமில் சுமந்து போனால், "உன்னை உருட்டிக் கொண்டு போய் வளர்த்தேனே" என்று சிவாஜிடைப் உருக்கத்தோடு வசனம் பேச முடியாது.
********************************

ஞாயிற்றுக் கிழமை செய்தித்தாள் கொஞ்சம் வித்தியாசமான சமாசாரம். தினத்தந்தியில் 'பின் அப்', ஊர்க்குருவி பதில், சமையல் குறிப்பு. தினமணியில் வசவசவென்று 'தினமணி கதிர்' என்ற பெயரில் ஒரு ஞாயிறு மலர்(அதற்கு இரண்டு வருடத்துக்கு முன் இருந்த தனி அடையாளத்தை ஏனோ தொலைத்துத் தலைமுழுகி விட்டார்கள்). தினமலரில் சினிமா, இலக்கியம் பற்றி கரம் மசாலா தூவல்கள் .

மற்ற நாட்களில் வரும் எட்டுப்பக்கப் பத்திரிகை சரியாகப் பிடித்துக் கொள்ளாவிட்டால் காற்றில் எகிறிக் கொண்டு பறந்து விடும்.ஞாயிற்றுக் கிழமை பத்திரிகை ஒரு முப்பது கிராம் அதிகம் கனம். அதுதான் வித்தியாசம்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமைப் பத்திரிகை சமயத்தில் ஒரு கிலோ கூட வரும் எடையில். பக்கம் பக்கமாக அதில் கால்வாசி தள்ளுபடி விற்பனை விளம்பரம், மீதி வாராந்திர டெலிவிஷன் நிகழ்ச்சி விவரம் என்று வைத்துக் கொண்டாலும்.

நியூயார்க் டைம்ஸின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பை வீடு வீடாகப் பத்திரிகை வினியோகிப்பவர் தூக்கிப் போட்டதில் மேலே விழுந்து காயம் பட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த ஒருத்தரைப் பற்றிப் படித்த ஞாபகம்.
இங்கிலாந்து செய்தித்தாள்கள் அவற்றின் அமெரிக்க தோஸ்த்களை விடக் கொஞ்சம் சோனி. ஆனால் நம்ம ஊரு ஞாயிறு மலரை விட இருபது மடங்காவது ஊட்டச்சத்தும் புஷ்டியுமானவை.

இதில் செக்ஸை வாரித் தெளித்த பத்திரிகை, ஜாக்கிரதையாக அதைக் கலந்தவை, சுத்த பத்தமானவை என்று பலதும் உண்டு.

நான் பத்திரிகை வாங்கும் பாக்கிஸ்தானிக் கடையில் காது சரியாகக் கேட்காத ஒரு பாட்டியம்மாள் தான் ஞாயிற்றுக்கிழமை காலை கல்லாவில் இருந்து காசு வாங்கிப் போடுவார். கடையை நிர்வகிக்கும் அவருடைய பிள்ளைகள் விடுமுறை என்பதால் வீட்டில் ஹாய்யாகத் தூங்க, பாட்டியம்மாவுக்கு வேலை நெட்டி முறியும்.

பின்னே சும்மாவா? டைம்ஸ் என்று எடுத்தால், ஏழெட்டு செக்ஷன் - தினசரி செய்தி, பிசினஸ், விளையாட்டு, சிறுவர் மலர், பாஷன் சிறப்பிதழ், டிவி நிகழ்ச்சி, இசை, சினிமா, நாடக, டிவிடி விமர்சனம், தொட்டுக் கொள்ளக் கொஞ்சம்போல் இலக்கியம். சமயத்தில் இலவச இணைப்பாக ஒரு சி.டியில் ஏதாவது இசை .. ஒரு பத்திரிகையின் ஒரு பிரதியையே ஒழுங்காக மடித்து வைக்கவே தாவு தீர்ந்து விடும். பல பத்திரிகைகள்.ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான இணைப்புக்கள். பல பிரதிகள்

பாக்கிஸ்தானிப் பாட்டியம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாவிட்டாலும், பத்திரிகைகளை சரியாகப் பிரித்து அடுக்கி ஏழரை மணிக்குத் தயாராக்கி விற்பனைக்கு வைப்பது ஆச்சரியம்.

நான் பார்த்தவரை (என்னையும் சேர்த்து) காலை நேரத்தில் டைம்ஸ் தான் நிறைய அங்கே விற்பனையாகிறது. காளிதாசன், சாண்டில்யன் வர்ணனை அழகிகளின் காற்றோட்டமான படங்களோடு கலர் கலராக கொலு இருக்கும் மற்றப் பத்திரிகைகளைப் பாட்டியம்மா
கல்லாவிலிருந்து நகர்ந்து, வேறு ஆண்பிள்ளைகள் கல்ல்லாவில் உட்கார்ந்தபிறகு வாங்குவார்கள் போல் இருக்கிறது.

ஒரு துண்டு கடுக்காயையோ எதையோ வாயில் போட்டு மென்றபடி, "க்யா பேட்டா, சப் டீக்டாக் ஹை நா?" என்று எல்லா கஸ்டமர்களையும் அன்போடு விசாரிக்கும் அந்தப் பாட்டித்தள்ளைக்கு முன்னால் பமீலா ஆண்டர்சனின் அதிரடியான படம் போட்ட வேறு பத்திரிகையை நீட்டிக் காசு கொடுத்து வாங்க யாருக்கும் மனம் வருவதில்லை என்று தெரிகிறது. பெண்கள், அதுவும் தாய் வயது ஸ்திரிளோடு பேசப் பழக வேண்டியிருக்கும்போது இப்படிக் கொஞ்சம் போல் நாசுக்கைக் கடைப்பிடிக்கிறது இயல்பானது -
இங்கிலாந்து என்றாலும் கூட.

(September 28 - October 5, 2002)

1 Comments:

At 2:56 am, Blogger Balaji-Paari said...

பலசரக்குல மசாலா வாசனை தூக்கல்.

(இந்த மாதிரி வேக வைச்ச உருளைகிழங்க மட்டும் சாப்பிடறவங்க அப்படித்தான் சொல்வாங்க ;) )

ஒரு சுத்து சுத்தி வந்த உணர்வு. நன்றிகள்.

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது