Saturday, May 14, 2005

உரை வெண்பா

1) தம்பி தாளெடுத்து வா
----------------------------------

கலைப்படைப்புகளின் 'காணாமல் போனவைகள்' பட்டியலில், ஓவிய மேதை ரெம்ப்ராண்ட் வரைந்த புகழ் பெற்ற ஓவியமான 'குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்' படம் முக்கியமானது.

இந்த ஓவியத்துக்காக ரெம்ப்ராண்ட் எடுத்துக் கொண்ட விஷயம் கலைப்படைப்பாளிக்குச் சவால் விடும் விதத்தில் அமைந்தது.

காட்சியை லாங்க் ஷாட்டில் சித்தரித்திருந்தால், அது எதைச் சொல்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும். டைட் க்ளோஸ் அப் ஆக வரைந்திருந்தால், அந்த முக்கியமான நொடியின் மகத்துவம் மறைந்து வெறும் அனடாமிக்கல் ஸ்டடியாகத் தெரிந்திருக்கும்.

ரெம்ப்ராண்டுக்கு இதை எப்படி, எந்தக் கோணத்தில் சித்தரிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது.

கிட்டத்தட்ட அரை இருட்டில் ஒரு யூதக் கோவில். ஒரு சிறிய மேடை. கீழே மண்டியிட்டபடி பெண்கள், முதியவர்கள். ஜோசப் ஒரு சிறிய வட்ட மேஜையில் குழந்தை ஏசுவை அணைத்துப் பிடித்தபடி இருக்கிறார். பக்கத்தில் மருத்துவர். மருத்துவரையும் குழந்தையையும் தழுவி மேலே இருந்து பொன் நிறத்தில் ஒரு வெளிச்சம் பொழிந்து கொண்டிருக்கிறது. மருத்துவர் ஒரு கையில் குழந்தையின் உறுப்பைப் பிடித்தபடி, இன்னொரு கையில் சிறிய கத்தியோடு ஆயத்தமாக இருக்கிறார்.

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கருதக்கூடிய ஒரு கணம் ரெம்ப்ராண்டின் அற்பத ஓவியத்தில் உறைந்து போய் அந்தக் கணத்தைத் திரும்பத் திரும்ப நிகழ்த்திக் காட்டுகிறது.
1646-ல் வரையப்பட்ட இந்தச் சித்திரம் இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை. 1755 வாக்கில் அது காணாமல் போனது போனதுதான்.

ஓவியத்தின் ஒரு நகலை (அல்லது அசல் ஓவியத்தை வரைவதற்கு முன் வரைந்து பழகிய முன்னோட்டப் பிரதியை) ரெம்ப்ராண்ட் எடுத்து வைத்திருந்ததால், அந்த ஒரிஜினல் ஓவியம் எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், நகல் எல்லாம் அசல் ஆகிவிடுமா?

ஓவியத்தை யார் எடுத்திருப்பார்கள்? ஏன் எடுத்திருப்பார்கள்? என்ன செய்திருப்பார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. ஆனாலும் கலை விமர்சகர்களில் பெரும்பாலானவர்கள் கருதுவது, ஏசுநாதரை இப்படி உடல் முழுக்கக் காட்டியபடி (குழந்தையாக இருந்தாலும்) ரெம்ப்ராண்ட் சித்தரித்தது ஆசாரக் குறைச்சல் என்று கருதிய யாரோ செய்த வேலை தான் அந்தக் கலைப்படத்தைக் கடத்திப் போன செயல். அதை அழித்துக் கூட இருக்கலாம்.

கலையும், இலக்கியமும் அவற்றோடு ஸ்னானப் பிராப்தி கூட இல்லாதவர்களால் நம்பிக்கை, நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்ற ஏதேதோ பெயர்களில் மதிப்பிடப்படுவது, குகை மனிதன் இருண்ட குகைச் சுவர்களில் மிருகங்களையும் சக மனிதர்களையும் வரைந்தபோதே தொடங்கி இருக்க வேண்டும்.

'கூளப்ப நாயக்கன் காதல்' ஐம்பது வருடம் முன்னால் வரைகூட ஆபாசப் புத்தகம் என்று தடை செய்யப்பட்டிருந்ததாகச் சொல்வார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் எழுதப்பட்ட ஃபேனி ஹில் 'authentic porno and a literature of its own kind' என்று விமர்சகர்களால் இப்போது கொண்டாடப்படுகிறது. அது பிரசுரமானபோது, தடை செய்யப்பட வேண்டும் என்று மதகுருமார்கள் போராடித் தடை செய்தார்கள். அப்போது புத்தகம் முழுக்க விற்றுத் தீர்ந்ததாம். வாங்கியவர்களில் பலர் மதகுருமார்கள் தான். படித்துவிட்டுத்தானே தடை செய்யச் சொல்லிப் போராட வேண்டும்!

மூத்த தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 'சம்பங்கிபுரத்துப் பொம்பளைகள்' என்ற ஒரு சிருங்கார ரசம் மிகுந்த நாவலைப் பல வருடம் முன்னால் எழுதினார். ஆனால் அதைப் பிரசுரிக்கத் துணிவின்றிக் கையெழுத்துப் பிரதியாகவே பல காலம் பெட்டிக்குள் வைத்திருந்தார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த (லேசில் கிடைக்காத வாய்ப்பு அது) காலம் சென்ற என் எழுத்தாள நண்பர் தஞ்சை பிரகாஷ், நாவலைப் பற்றி உற்சாகமாகச் சொன்னது நினைவு வருகிறது. அது பிரசுரமாகி இருந்தால், தமிழில் இன்னொரு முக்கியமான சோதனை முயற்சி கிடைத்திருக்கும்.

அதைப்பற்றி பிரகாஷ் நடத்திய (ஒரே ஒரு இதழ் மட்டும் வெளிவந்த) 'குயுக்தம்' இலக்கிய இதழிலும் எழுதியிருந்த நினைவு.

வல்லிக்கண்ணன் தற்போது கையெழுத்துப் பிரதியைக் கிழித்துப் போட்டிருப்பார்.

கதைத்த பிரகாசு காலமானார் கேட்டால்
உதைக்க வருவார் வகண்ணன் - சதையொடு
சம்பங்கி யூர்க்கதை சட்டெனக் கட்டலாம்
தம்பிநீ தாளெடுத்து வா.
*******************************************

2) முடிக்கு விலையென்ன
---------------------------------------

பிரிட்டீஷ் காரர்களை எதற்கு விமர்சித்தாலும், அவர்களை ஒரு விஷயத்துக்காக மனம் திறந்து பாராட்டலாம்.

பழைய, புராதனப் பொருட்களைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்காக.
அதில் நூறில் ஒரு பங்கு நமக்கு இருந்தால் கூட இத்தனை கோயில் சிலைகள் திருட்டுப் போயிருக்காது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிந்தாமணியைப் பதிப்பிக்கவும், குறிஞ்சிப்பாட்டில் உதிர்ந்த மலர்களைத் தேடியும் கால் தேய நடந்தது கொஞ்சம் குறைந்திருக்கும்.

ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் 'காணாமல் போனவை' லிஸ்டில் சேர்ந்திருக்காது.

பிபிசியில் 'ஆண்டிக் ரோட் ஷோ' நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இது நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் நடக்கும் இந்த ஒரு மணி நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி இங்கிலாந்தில் முக்கியமான நகரங்களில் போய்ப் படமாக்கப்படுவது. அந்தந்தப் பட்டணத்திலும், சுற்றி எட்டுப்பட்டி கிராமங்களிலும் இருக்கப்பட்ட பிரிட்டீஷ் மகாஜனங்கள் அவர்கள் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் குடும்பப் பொக்கிஷங்களோடு ஆஜராகி விடுகிறார்கள்.

பழைய ஓவியம், பழைய சிற்பம், கைவினைப் பொருட்கள், பழைய புத்தகம், பழைய மர ஜாமான் என்று எத்தனை எத்தனையோ பொருட்களைப் பார்வையிட்டு சுவாரசியமாகப் பேசியபடி அவற்றை மதிப்பிட வல்லுனர்களும் பங்கு பெறுகிறார்கள்.

அப்படி என்ன என்ன தான் வருகின்றது இந்தப் பழைய பொருள் கண்காட்சியில்?

போன மாதம் ஒரு பாட்டியம்மா கொண்டு வந்த கான்வாஸ் பையைக் கொட்டிக் கவிழ்த்தார். சின்னச் சின்னதாகப் பொட்டலங்கள். பாட்டிக்குப் பாட்டி காலத்துப் பல்பொடியாக இருக்குமோ என்று பார்த்தால், விஷயமே வேறே.
எல்லாப் பொட்டலத்திலும் இருந்தது தலைமுடிதான்.

அந்தம்மா குடும்பமே தலைமுறை தலைமுறையாக முடிவெட்டும் தொழிலில் இருப்பவர்களாம். அதுவும் பிரபலங்களுக்கு சிகை திருத்தும் தொழில்.

பாட்டியின் முப்பாட்டனார் கையில் கத்திரி பிடித்த நேரம் போக, வெட்டிய முடியை எல்லாம் ஒரு இழை வ்¤டாமல் அப்படியே கூட்டிப் பெருக்கிக் குப்பையில் போடாமல், ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருக்கிறார்.

தான் சிகை அலங்காரித்துச் சிங்காரித்த பிரபலங்களின் உதிர்ந்த முடியில் கொஞ்சம் போல் எடுத்துப் பொட்டலம் கட்டி வைத்ததோடு அந்தக் காகிதத்திலேயே நாள், நட்சத்திரம், திதி, வருஷம் போட்டு யாருடைய தலைமுடி என்றும் கைப்பட எழுதி வைத்திருக்கிறார்.

அப்படியான பொட்டலங்களில் ஒன்று நெல்சன் துரையின் தலைமுடி. இந்த ஒற்றைக்கண் வெள்ளைக்காரன் இருநூற்றைம்பது வருடம் முன்பாக, பிரஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனின் கப்பல் படையைத் துரத்தோ துரத்தென்று எகிப்து வரை துரத்தி நைல் நதியில் வைத்துக் கிடுக்கிப் பிடி போட்டு மடக்கிக் கடற்போரில் தோற்கடித்தவன்.

இங்கிலாந்தின் சிறந்த கடற்படைத் தளபதி யாரென்றால் உடனே இவன் பெயரைத்தான் சொல்வார்கள்.

நெல்சனின் சுருள் சுருளான உச்சிக்குடுமி சைஸ் முடிக்கு, இப்போது என்ன மதிப்பு தெரியுமா?
மயக்கம் போடவேண்டாம். சுமார் ஐயாயிரம் பவுண்ட் (கிட்டத்தட்ட நாலு லட்சம் ரூபாய்).

பார்வேந்தன் ராணியம்மா பத்தொன்பது வைப்பாட்டி
தேரோட்டி சேவகன் தேர்ந்தெடுத்த வீரன்
உயிர்போய் வருடம் உருண்டு கடக்க
மயிரும் விலையேறும் பார்
.
*************************************

3) பாதாள ரயில் நிலையம்
-----------------------------------------

யார்க்ஷயரில் பட்ஸி பகுதியில் நடைபெற்ற ஒரு ராத்திரி இசை விழாவில் டி.வி பிரபலங்கள் - ஆண்கள் முழுக்க முழுக்க - பெண் உடைகளில் வந்து ஆடிப் பாடியது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீரியசான டிவி அரசியல் விமர்சகர்கள், விளையாட்டு வர்ணனையாளர்கள், தேங்காய்த் துருவிக் கேள்வி போடும் பேட்டியாளர்கள் எல்லாம் குட்டைப் பாவடையோடு மேடையில் ஆடியதை மணிக்கணக்காகத் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பினார்கள்.

இங்கிலாந்தில் வசதி குறைந்த குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்த நாடு முழுக்க நிதி வசூலித்ததின் பகுதியாக நடந்த இந்த விழா முடிவில், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பவுண்ட் இந்தக் குழந்தைகள் நிதிக்கு நன்கொடையாகச் சேர்ந்து விட்டது.

ஏதாவது காட்சியில் கதாநாயகன் புடவை கட்டி வருவது தமிழ் சினிமாவில் சர்வசாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும் மேற்கில் கிராஸ் டிரஸ்ஸிங் நடைமுறைக்கு மாறுபட்ட, இயல்பான மன, பாலின உணர்ச்சிகளோடு வேறுபட்ட செயலாகத்தான் காணப்பட்டுக் கொண்டிருந்தது இதுவரை. இந்தத் தயிர்வடை சமாசாரத்தை விட சீரியசான ஓரினப் புணர்ச்சி வெகு அண்மையான காலம் வரை சபையில் பேசக்கூடாத விஷயமாக இருந்தது.

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் தம்பதிகளுக்குக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை உண்டா என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், கட்டுப்பெட்டிக் கட்சியாக எல்லோரும் கருதும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தான் ஓரினப் புணர்ச்சியாளர் என்று அறிவித்துப் புருவங்களை உயர வைத்தார். மத குருமார்களில் இப்படிப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் தொடங்கி இருக்கிறது. எல்லாம் எங்கே போய் முடியுமோ?

லண்டன் ஏர்ள்ஸ் கோர்ட் பாதாள ரயில் நிலையத்தில் ஒரு ராத்திரி பார்த்தது இது.

பாதாள ஸ்டேசனில் பத்துமணி ராத்திரிக்கு
ஏதானும் வண்டிவரக் காத்திருந்தேன் - மோதாமல்
தள்ளாடி வந்து தடுக்கி விழுந்தவள்
உள்ளாடை இல்லாத ஆண்.


(2002 Sep)

1 Comments:

At 1:42 pm, Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது