Sunday, April 30, 2006

எடின்பரோ குறிப்புகள் - 14

போன வார நம்புங்கள் நாராயணன் அல்லது ஆட்டுங்கல் நம்பூத்திரி ராசிபலனின் தனக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேர் கவனித்திருந்தால், நெருங்கிய நபர்களால் பெருங்கஷ்டம் என்று தெரிந்திருக்கும்.

போன புதன்கிழமை ஒரே நாளில் அவருடைய மூன்று அமைச்சர்கள் பிளேருக்குத் தலைவலி, திருகுவலி என்று கிரமமாக உண்டாக்கி, உட்கார்கிற இடத்தில் மிளகாய் விழுதைப் பதமாகத் தடவி எரிய வைத்துவிட்டார்கள்.

உள்துறை அமைச்சர் சார்லஸ் கிளார்க் தொடங்கி வைத்தார். அவருடைய அமைச்சகம் கடந்த நாலு வருடத்தில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு வெளிநாட்டுக்காரர்களை தண்டனை முடிந்ததும் விடுவித்திருக்கிறது. இதில் என்ன தப்பு இருக்கு என்று ஆச்சரியப்பட்டால், இதோ - பிரிட்டீஷ் சட்டவிதிகளின்படி, இந்தக் கிரிமினல் குற்றவாளிகள் தண்டனைக்காலம் முடிந்ததும், அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும்.

ஆனால் நடந்ததோ வேறு தரத்தில். கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் என்று பலதரப்பட்ட இவர்கள் எல்லாரும் சிறையில் இருந்து இறங்கி வந்து லண்டனிலும், பர்மிங்ஹாமிலும், கிளாஸ்கோவிலும் இன்னும் பிரிட்டன் முழுக்கவும் அடியெடுத்து வைத்து, நாட்டு மக்களோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். ஒரு நூறு பேர் போலத் திரும்பப் பிடிபட்டார்கள் என்று அரசாங்கம் அவசர அவசரமாக அறிவித்தாலும், பாக்கி தொள்ளாயிரம் பேரையும் பிடித்து நாடு கடத்துவது என்பது பகல்கனவுதான்.

இப்படிப் படு காஷுவலாக அயல்நாட்டுக் குற்றவாளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் கிளார்க் ராஜினாமா செய்ய வேணும் என்று எதிர்க்கட்சிகள் குரலை உயர்த்திவிட்டார்கள். ‘என்னோட அமைச்சரகம்தான். யார் இல்லேன்னாங்க? ஆனா, அங்கே இண்டு இடுக்கில் என்ன தப்பு நடக்கிறது என்று தூண்டித் துருவிப் பார்ப்பது என்னோட வேலையில்லை’ என்று சார்லஸ் கிளார்க் நம்ம ஊர் அமைச்சர்கள் ஸ்டைலில் எகிற, பிரதமர் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

இதுக்கே இப்படிக் கவலைப்பட்டால் எப்படி, கொஞ்சம் இதையும் சமாளியுங்க என்று சுகாதார அமைச்சர் பாட்ரீஷியா ஹீவிட் அம்மையார் தன் பங்குக்கு மிளகாய் அரைத்திருக்கிறார்.

நாட்டின் ஒட்டுமொத்த உடல் நலமும் ஆரோக்கியமும் தேசிய சேவையான நேஷனல் ஹெல்த் சர்வீஸ் என்ற என்.ஹெச்.எஸ் மூலம் பராமரிக்கப்படும் இங்கிலாந்தில், மூக்கடைப்பில் இருந்து, புற்றுநோய்வரை சிகிச்சை பெற நாட்டுமக்கள் அரசு மருத்துவனைகளைத்தான் நாடுவது வழக்கம். வரிப்பணம், அரசு மானியம் என்று காசு பணத்துக்குக் குறைச்சல் இல்லாமல் இருந்த என்.ஹெச்.எஸ்ஸின் நிதிநிலைமை நிர்வாகச் சீர்கேடு மூலம் தற்போது கண்டமேனிக்குச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மாதச் சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நர்சுகள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை வேலையிலிருந்து திடீரென்று நிறுத்தப் போகிறதாகத் தெரிகிறது. ஆரோக்கிய சேவையைக் குற்றுயிரும் குலலயுயிருமாக உயிருக்குப் போராட வைத்துவிட்டதாக அரசு மேல் குற்றச்சாட்டும், கோபமும் பரவலாக எழுந்திருக்கிற நேரம் இது.

இப்போது பார்த்து சுகாதார அமைச்சர் பாட்ரீஷியா ஹீவிட் அம்மையார் ராயல் காலேஜ் ஓஃப் நர்சிங் என்ற அரசு செவிலியர் கல்லூரியில் ஆண்டுவிழா உரையாற்றக் கனகம்பீரமாகப் புறப்பட்டுப் போயிருக்கிறார். என்.எச்.எஸ் அருமையான ஆரோக்கியத்தில் இருக்கிறதாகவும், நர்சுகள் தான் தங்கள் வேலைமுறையை சிறப்பாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் திருப்பணியை மைக்கைப் பிடித்துக் கொண்டு இந்த அமைச்சர் ஆரம்பிக்க, பாரம்பரியம் மிக்க ராயல் நர்சிங் கல்லூரி வரலாற்றிலேயே முதல்முறையாக கூச்சல், குழப்பம். அமைச்சர்
உடனடியாக உரையை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

டாக்டர்களும், நர்சுகளும் ஆத்திரத்தோடு அரசு நடவடிக்கைகளை எதிர்த்து கேள்விக்கணைகளை அமைச்சரை நோக்கித் தீவிரமாக எடுத்துவிட, அம்மையார் அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியே சாடிவிட்டார். பத்திரிகைகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் கொண்டாட்டம். தொழிற்கட்சி நாட்டு மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுவது வெட்கக்கேடு என்றும், ஹீவிட் அம்மாவும் ப்ளேர் அய்யாவும் உடனடியாக கால்கடுதாசி எழுதிக் கொடுத்துவிட்டு இறங்கிப் போக வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் உரக்க முழங்க, ப்ளேர் ஒரே நாளில் இரண்டாவது தடவையாக அடுத்த பிரச்சனையைச் சந்திக்க வேண்டிய கட்டாயம்.

அமைச்சர்கள் மட்டும் தான் பிரதமரை நோகடிக்க வேணுமாக்கும், நான் எதுக்கு இருக்கேன் உதவிப் பிரதம மந்திரியாக என்று ஜான் பிரஸ்காட் அடுத்த பிரச்சனையாகியிருக்கிறார்.

எல்லாம் பெர்பூமோ, ஜான் மேஜர் என்று காலம் காலமாக பிரிட்டீஷ் அரசியல் தலைவர்களை, முக்கியமாக அமைச்சர்களைச் சபல புத்திக்கு இரையாக்குகிற
சமாச்சாரம்தான். அறுபத்தாறு வயது ஜான் பிரஸ்காட், நாற்பத்து நாலு வயதேயான தன் டயரி செகரெட்டரி குமாரி டெம்பிளோடு எக்கச் சக்கமான நெருக்கத்தில் இருந்ததாக டேப்ளாய்ட் பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மைதான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும் பழைய பிரதமருமான ஜான் மேஜர் தன் அமைச்சரவையில் பெண் அமைச்சர் ஒருத்தரோடு காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக, அவர்கள் எல்லாம் பதவியிலிருந்து வெளியே போய் பல வருடத்துக்கு அப்புறம் குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘கன்சர்வேட்டிவ்கள் ஒழுக்கம்-னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற ஆளுங்க’ என்று சாடிய ஒழுக்க சீலர் பிரஸ்காட் ‘என்னமோ புத்தி தவறிடுச்சு, தப்புத்தான், மன்னிச்சுங்க’ என்று ப்ளேரிடமும், தன் அறுபது வயது மனைவியிடமும், நாட்டு மக்களிடமும் காலைப் பிடிக்காத குறையாக மன்னிப்புக் கேட்கிறார்.

பிரஸ்காட்டின் கள்ளக்காதல் அவருடைய சொந்த விவகாரம் என்று ப்ளேர் சமாளித்தாலும், எதிர்க்கட்சிகள் தொழிற்கட்சியின் பரிசுத்தமான உருவம் சிதைவதைக் கள்ளச் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கிரிமினல்களைக் கட்டவிழ்த்துவிட்ட உள்துறை அமைச்சர் கிளார்க் மற்றும் தேசிய ஆரோக்கிய சேவையை முடக்கிப்போட்ட ஹீவிட் அம்மையார் இருவர் மேலும் சகலருக்கும் அதிருப்தியும் கோபமும். காதல் மன்னன் பிரஸ்காட்? அந்தக் கிழம் எக்கேடும் கெடட்டும்; கவர்மெண்ட் ஆபீசில் கவர்மெண்ட் கட்டில் கவர்மெண்ட் மெத்தை போட்டு கவர்மெண்ட் வேலை நேரத்தில் கவர்மெண்ட் ஊழியரான காதலியோடு சொந்த டூயட் பாடாமல் இருந்தால் சரிதான் என்பதே பொது அபிப்பிராயம்.

அடுத்த தேர்தலில் தொழிற்கட்சி மறுபடியும் கெலித்து, மற்ற அமைச்சர்கள் திரும்பி வந்தாலும், பிரஸ்காட் அமைச்சரவையில் இருப்பார் என்று தோன்றவில்லை. ரிடையரான காலத்தில் அவர் பொழுதை உருப்படியாகக் கழிக்க நம்மாலான சிபாரிசு அவரை பிரிட்டீஷ் பேட்டண்ட் இணையத் தளத்துக்கு-பேடண்ட்.கவ்.யூகே- விஜயம் செய்யும்படி கேட்டுக்கொள்வது.

அங்கே, லட்சக் கணக்கான பேடண்ட்கள் பற்றிய தகவல் நடுவில் இந்த சமாச்சாரம் தட்டுப்படும். ஐம்பது வருடம் முந்தி ஒரு பிரிட்டீஷ்காரர் உருவாக்க நினைத்து பேடண்ட் வாங்கியது. விஷயம் வேறொண்ணுமில்லை. ஆணுறை. கொஞ்சம் விசேஷமானது. God Save the Queen என்று கூடுதலில் உச்ச கட்டத்தில் இசையெழுப்பிப் பாடும். பேடண்டுக்கு உயிர்கொடுத்து, தானும், இன்னும் பலரும் தேசபக்தியோடு காதல் செய்ய பிரஸ்காட் வழிசெய்ய வாழ்த்துகள்.
8888888888888888888888888888888888888888

பிரிட்டனில் ஊராட்சித் தேர்தல்கள் வரும் இந்த நேரத்தில், போன பொதுத் தேர்தல் செலவுக் கணக்காக அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சியான டோனி ப்ளேரின் தொழிற்கட்சிச் செலவுக் கணக்கிலிருந்து -
தேர்தல் வெற்றிக்காகப் பிரச்சாரம் உருவாக்க ஒரு அமெரிக்க ஆலோசகருக்குக் கொடுத்த கட்டணம் நாலு கோடி ரூபாய். பழைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனோடு தொடர்புடைய கம்பெனி இது.

டோனி ப்ளேர் தன் முந்தைய அமைச்சரவையின் ராஜினாமாவை பக்கிங்ஹாம் அரண்மனையில் சமர்ப்பித்துவிட்டு, பத்து டவுணிங் தெரு வீட்டுக்கு டாக்சியில் போக நானூத்தெண்பது ரூபாய் செலவு.

பிரதமரின் மனைவி செர்ரீ ப்ளேர் கணவரோடு கூடத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறார். அப்போதெல்லாம் ப்யூட்டி பார்லருக்குப் போய் சிகையலங்காரம் செய்து கொண்ட வகையில் செலவு சுமார் அறுபத்து நாலாயிரம் ரூபாய்.

எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் செலவுக் கணக்கிலிருந்து -
ஓட்டுப் போடச்சொல்லி ஈமெயில் அனுப்ப, பத்து லட்சம் ஈமெயில் முகவரிகள் வாங்கிய வகையில் செலவு கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து லட்சம் ரூபாய்.

இளவரசர் சார்லஸ் - கமீலா பார்க்கர் கல்யாணத்துக்குப் போகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஹோவர்டின் மனைவிக்கு ஒப்பனைச் செலவு ஐநூறு ரூபாய்.

இன்னொரு எதிர்க்கட்சியான லிபரல் டெமகிராட் கட்சியின் முக்கிய எலக்ஷன் செலவாகக் காட்டப்படும் கணக்கு - கட்சித் தலைவர் சார்லஸ் கென்னடி நல்லதாக நாலு பேண்ட் சட்டை தைத்துக் கொண்ட வகையில் ரூபாய் நாலு லட்சம் செலவு.

நம்ம ஆளுங்க கொடுக்கப் போகும் கணக்குகளுக்கு இதெல்லாம் பயன்பட்டால் சந்தோஷம்தான்.
88888888888888888888888888888888888888888888888888888

ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான ஏப்ரல் இருபத்து மூனு தேதியில், இந்த வருடம் லண்டன் மாரத்தான் சிறப்பாக முடிந்திருக்கிறது. போன வருடம் பெண்கள் ஓட்ட வீராங்கனையாகத் தேர்வான பாவ்லா ராட்க்ளி ஃப் இந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாகப் பங்குபெற முடியாமல் போய்விட்டது. போன வருடம் அவர் ஓடிக்கொண்டே உடை நனைய அற்ப சங்கையைத் தீர்த்துக் கொண்ட புகைப்படத்தை ஒரு பத்திரிகையாளர் ஒளிந்திருந்து எடுத்து சகலமான பத்திரிகைகளிலும் அது பிரசுரமான சங்கடம் இன்னும் பாவ்லா ராட்க்ளிஃபுக்குத் தீரவில்லையோ என்னமோ. No more making history by making water என்று நினைத்திருக்கலாம்.

போன ஒலிம்பிக்கில் வெங்கலப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீராங்கனை டீனா காஸ்டர் இந்த இருபத்தாறு மைல் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். கென்யாவைச் சேர்ந்த லிமோ ஆண்கள் சாம்பியனாகத் தேர்வாகியிருக்கிறார்.

இவர்கள் தவிர சின்னத்திரை நட்சத்திரங்கள் வர்த்தக நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்போடு பப்ளிசிட்டிக்காக ஓடி, அங்கங்கே நடை தளர்ந்து நின்றிருக்கிறார்கள். ஒரு ஓட்டக்கார ஜோடி திருமண உடையில் ஓட்டமாக ஓடி, லண்டன் டவர் பக்கம் ஓடியபடிக்கே மோதிரம் மாற்றிக் கல்யாணம் முடித்துக் கொண்டது. பாதிரியாரும் கூடவே அங்கி தரையில் புரள ஓடினதாகத் தகவல் இல்லை.

லண்டன் சிறையிலிருந்து நாலு குற்றவாளிகள் லண்டன் மாரத்தானில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஓட்டப் பந்தயம் முடிந்து சமர்த்தாக ஜெயிலுக்குத் திரும்ப ஓடி வந்து விட்டதில் உள்துறை அமைச்சருக்கு துக்கிணியூண்டு நிம்மதி கிடைத்திருக்கலாம்.
88888888888888888888888888888888888888888888888

Sunday, April 23, 2006

எடின்பரோ குறிப்புகள் – 13

பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில் (blacking factory) வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டி வந்த பனிரெண்டு வயதேயான டிக்கன்ஸ், நாள் முழுக்க போத்தல்களில் கருப்புத் திரவத்தை அடைக்கிறான். அவனுடைய வேலை நேர்த்திக்காக, கண்ணாடிச் சுவர்கள் கொண்ட சின்ன அறைக்குள் உட்கார வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறான். ஆங்கில இலக்கியத்தில் ஆழமான தடங்களைப் பதித்த அந்த மகத்தான எழுத்தாளன் வழியில் போகிறவர்கள் ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்துப் போகிற எக்ஸிபிஷன் பிராணியாக, எதிர்காலம் பற்றிய கனவுகள் நசித்துப்போய் உடம்பெல்லாம் அழுக்கும் பிசுக்குமாக உழைத்துக்கொண்டிருந்தபோது மனதில் என்ன நினைவுகள் ஓடிக்கொண்டிருந்திருக்கும்?

ரயில் ஒரு வினாடி குலுங்க, மடியில் மெத்தென்று சின்னக் கரங்கள் பதியும் உணர்ச்சி. கண் விழித்துப் பார்க்க, மூன்று வயது காணும் ஒரு வெள்ளைக்காரச் சிறுமி. ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது அவளுடைய புன்சிரிப்பு ஒளிவிடும் முகத்தில். ஸ்பிரிங் போல் சுருள் சுருளான அந்தத் தலைமுடி கறுப்பர் இனத்துக்கு உரியதில்லையோ?

எதிரில் நிமிர்ந்து பார்த்தபோது, ஒரு கறுப்பு இனப் பெண்மணி. அவள் அருகில் கறுப்பான ஆனால் வெள்ளைக்காரக் களையோடு சின்னப் பையன். என் பக்கத்தில் உட்கார்ந்து இண்டிபெண்டெண்ட் பத்திரிகையில் மூழ்கியபடி ஒரு வெள்ளைக்காரர் ஹலோ என்கிறார். சிறுமியை மடியில் இருத்திக் கொள்ள அவர் பத்திரிகையை மடக்கும்போது குழந்தை அதை வாங்கித் தரையில் போட்டுக் காலால் தேய்த்துவிட்டுச் சிரிக்கக் குடும்பம் முழுவதும் கூடவே சிரிக்கும் ஒலி.

கனவா என்று சந்தேகத்தோடு பிக்கடலியில் இறங்கி வெளியே வர சின்ன மழையில் தரையும் மனமும் குளிர்ந்திருக்கிறது.

8888888888888888888888888888888888888

இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்ஸ்டரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக் கனவுகளை விட அவர் இசையமைப்பில் வெளியான ‘ஃபாண்டம் ஓஃப் தி ஓபரா’ முக்கியமானது.

பிரஞ்சு எழுத்தாளர் காஸ்தன் லெரோவின் லெ பாந்தெம் தெ லெ’யோபரா நாவல் அடிப்படையில், பரீஸ் ஒப்பரா தியேட்டரில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு மர்ம மனிதன் அல்லது அமானுஷ்ய உருவமான முகம் மறைத்த பிறவியொன்று ஓபராக் கலைஞர்களுடன், இசை நிகழ்ச்சிகளுடன் இடையாடுவது பற்றிய மூன்று மணி நேர நிகழ்வு இந்த இசை, நாடக, நடனப் படைப்பு. அதாவது ஓப்பரா சூழலில் ஓப்பரா பற்றி நிகழும் ஓப்பரா.

இசையரசிகளான திவாக்கள், சோபர்னோக்கள், டெனார்கள், பாலே கலைஞர்கள் என்று கிட்டத்தட்ட அறுபது பேர் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி இசையிலும், நாடக ஆக்கத்திலும் நடன அமைப்பிலும் ஒரு வினாடி கூடத் தொய்வு இல்லாமல் விறுவிறுவென்று அமைந்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறது.

ஏகப்பட்ட உலோகக் கம்பிகள் பிடித்திழுத்து உயர்த்த, ஒரு பெரிய சரவிளக்கு மேடைக்கு மேலே மெல்ல ஆடியபடி உயருகிறது. தான் இசைப்பயிற்சி அளித்த கதாநாயகியோடு பரீஸ் ஓப்பரா தியேட்டரின் நிலத்தடிப் பகுதியில் படகு ஓட்டியபடி கம்பீரமாகப் பாடுகிறது அந்த மர்ம உருவம். காட்சி மாற, வரிசை வரிசையாக விரைந்து நகரும் நடனக் கலைஞர்களின் இசையும் நடனமும் உச்சக்கட்டத்தை அடையும்போது அந்த உருவம் அடிக்குரலில் இசைத்தபடி வளைந்து போகும் மாடிப்படிகளில் மெல்ல இறங்கி வருகிறது. பழைய நாடக நாயகியின் குரல் பிசிறில்லாது மேலே மேலே பறந்து, திடீரென்று தவளைக் கூச்சலாக மாறிக் கரகரத்து அபஸ்வரமாக ஒலிக்கிறது. அமானுஷ்ய உருவம் கையசைக்கிறது. தொள்ளாயிரம் பவுண்ட் கனமான சரவிளக்கு அடுத்த வினாடி மேடையில் உதிர்ந்து விழத் தொடங்க, கீழே ஆர்க்கெஸ்ட்ரா பிட்டில் இருபதுக்கும் மேற்பட்ட வயலின்காரர்கள் கொஞ்சம் நடுக்கத்தோடு மேலே பார்த்தபடி தோளில் சாய்த்து வைத்த வயலின் தந்திகள் உச்சஸ்தாயியை எட்ட வில்லை அழுத்தி உயர்த்துகிறார்கள்.

கொட்டகையை விட்டு வெளியே வரும்போது பிரமிப்பு மட்டும் மிஞ்சுகிறது. ரீஜண்ட் தெரு விளையாட்டு உடை, ஷூ விற்கும் கடையில் கண்ணாடிக் கூண்டுக்குள் டிரெட்மில்லில் ஒரு தாடிக்காரர் நடந்தபடி இருக்கிறார். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நடை தொடருமாம். குழுவாக நிகழ்த்தப்படும் கின்னஸ் சாதனை. Amazing என்கிறார் என் பக்கத்தில் அமெரிக்கரோ, கனாடியரோ ஒருத்தர். அவரவர் பிரமிப்பு அவரவர்களுக்கு.


8888888888888888888888888888888

லண்டன் கிளஸ்டர் வீதி பழைய புத்தகக்கடை பற்றிச் சொல்லியாக வேண்டும். இந்தப் பத்து வருடத்தில் பல தடவை அங்கே போனதெல்லாம் புத்தகம் வாங்குவதற்காக என்று சொல்ல முடியாது. அந்தப் புத்தகக் கடை இருக்கிற கட்டிடம், பக்கத்துத் தெருக்கள் தொடங்கி, கடைக்குள் நூறு வருடம் முந்திய மக்கிய பளபளப்பில் அலமாரிகளில் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பழைய புத்தகங்கள் வரை இதமான ஒரு அந்தக்கால வாடை. கிளஸ்டர் ரோடு புத்தகக் கடைக்குக் கால்கள் இழுக்க ஒவ்வொரு தடவை நடக்கும்போதும் அடிமனதில் ஒரு anglophile சிரிப்பது கேட்கும்.

நூறு பவுண்ட் கொடுத்து ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வெளிவந்த பழைய ஸ்ட்ராண்ட் பத்திரிகையை வாங்க விரையும் கைகளை ரொம்பப் பிரயத்தனப்பட்டுக் கட்டிப்போட்டுவிட்டு, பத்து பவுண்டில் விக்டோரியா கால வெஸ்ட்மினிஸ்டர் பற்றிப் பொடி உதிரும் புத்தகம் எடுக்கும்போது சந்தோஷமும் வருத்தமும் கலந்து வரும். சிரித்த முகத்தோடு சதா தட்டுப்படுகிற புத்தகக் கடைக்காரரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நெருங்கிய உறவினரையோ நண்பரையோ திரும்பக் காணும் மகிழ்ச்சி.

இரண்டு மாதம் முன்னால் தான் தெரிந்தது லண்டன் கிளஸ்டர் ரோடு பழைய புத்தகக்கடைக்காரர், பிரபல ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீனின் மருமகன் என்று. நம்முடைய சொந்தம் ஆர்.கே.நாராயணின் படைப்புகள் உலகம் முழுவதும் வலம்வர வழியமைத்துக் கொடுத்த கிரகாம் கிரீனின் மருமகன் அவர் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் கிரீன் பற்றி, நாராயணோடு அவருக்கு இருந்த நட்பு பற்றியெல்லாம் நிறையப் பேசியிருக்கலாமே. ஆர்.கே.என்னின் சுவாமியும் சிநேகிதர்களும் முதல் பதிப்பு, பைனான்ஷியல் எக்ஸ்பெர்ட்டின் முதல் எடிஷன் இப்படியும் தேடியிருக்கலாமே!

இந்தத் தடவை ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு கிளஸ்டர் ரோடு பழைய புத்தகக்கடைப் படியேற, கிரகாம் கிரீனின் மருமகன் கடையில் இல்லை. அவருடைய மனைவியாக இருப்பார் என்று ஊகிக்க முடிந்த பெண்மணி நிறைய இந்தியர்கள் கடைக்கு வருவதாகச் சொன்னார். கிரகாம் கிரீனின் ‘கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு’ ஆன ஸார்ட் ஓஃப் அ லைஃப் படிக்க எடுத்திருப்பதாகவும் சொன்னார். ஆர்.கே நாராயண் பற்றிக் கேட்டிருக்கிறார். படித்ததில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் டவர், பாலம் பற்றிய நுணுக்கமான படங்கள் (கிட்டத்தட்ட ஓவியர் சில்பி வரைகிற பாணி) அடங்கிய 1910-ல் வெளியான புத்தகம் ஒன்றை இருபது பவுண்டுக்குப் பதிலாக அதிலும் பாதிவிலைக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தார். ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் மர ஸ்கேல் வைத்து, புழுக்கைப் பென்சிலால் நாலைந்து கோடு இழுத்து பத்து பவுண்ட் வரவை எழுதிவிட்டுப் பக்கத்தில் ஒரு சிறு அலமாரியைக் காட்டினார். எல்லாம் கிரகாம் கிரீன் சேகரித்த புத்தகங்களாம். அடுத்த முறை வரும்போது ஓய்வாகப் பார்க்க வேண்டும் ஒவ்வொன்றாக – அதெல்லாம் அங்கே இருந்தால்.

அந்த நோட்டுப் புத்தகம் எத்தனை வருடப் பழசு என்றும் மறக்காமல் கேட்க வேண்டும்.
88888888888888888888888888888888

பி.பி.சியின் ‘தி ஸ்ட்ரீட்’ தொடரில் ஒரு காட்சி.

வேலையிலிருந்து நீக்கப்படும் ஒருத்தர் அதிகாரியிடம் காலைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக இன்னும் சிறிது காலம் வேலையில் தொடர அனுமதி தரச்சொல்லிக் கெஞ்சுகிறார். போயிடுப்பா, இல்லேன்னா, காவல்காரனைக் கூப்பிட்டு உன்னை வெளியே கொண்டு விட வேண்டியிருக்கும் என்கிறார் அதிகாரி.

பிழைப்புக்கு வழியில்லாத அந்த ஐம்பத்தெட்டு வயதுக்காரர் தற்கொலை
செய்துகொள்ள முயற்சிக்கிறார். தூக்குப் போட்டுத் தொங்கப் பார்த்தால், கயிறு அறுந்துபோகிறது. மின்சார ஒயரைத் தொட்டு ஷாக் அடித்துச் சாக நினைத்தால், ப்யூஸ் போகிறது. நூலகத்தில் போய் புத்தகம் தேடுகிறார். ‘எப்படி வெற்றிகரமாகத் தற்கொலை செய்து கொள்வது?’ கிடைக்கிறது. இரவல் வாங்கிப்போக, லைப்ரேரியனிடம் புத்தகத்தை நீட்டுகிறார்.

‘இதை யார் திரும்பக் கொண்டு வந்து கொடுப்பாங்க?” நூலகர் சிரத்தையாக விசாரிக்கிறார்.

ப்ளாக் ஹ்யூமரில் பிரிட்டீஷ்காரர்களை மிஞ்ச முடியாது.

Tuesday, April 18, 2006

எடின்பரோ குறிப்புகள் – 12

அதிகாலை ஐந்து மணிக்குத் தோப்புத் தெருவுக்கு வரவேண்டிய டாக்சிக்காரர் க்ரோவ்னர் தெருவில் அலைந்து திரிய வேண்டிப்போனது டாக்சிக் கம்பெனி அம்மணியின் தவறு மூலமாக.

தவறு கொஞ்சம் முன்னாடியே ஆரம்பமாகி விட்டது. ஈஸ்டர் விடுமுறை தொடங்குவதற்குக் கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட்டு சட்டென்று முடிவெடுத்து விமானப் பயணமாக லண்டனுக்குக் கிளம்பியது முதல் தப்பு. காலைக் காப்பி கூடக் குடிக்காமல் அடித்துப்பிடித்துக்கொண்டு விமானத்தாவளம் போய்ச்சேர்ந்தது ரெண்டாம் தப்பு. ஆறரை மணிக்குக் கிளம்பும் பி.எம்.ஐ ஃஃப்ளைட்டில் வாங்கோண்ணா என்று உபசார வார்த்தையோடு, ஆவி பறக்கப் பறக்க ஒரு டம்ளர் அல்பமான காப்பித் தண்ணியாவது கலந்து எடுத்து வந்து நீட்டமாட்டார்களோ என்று எதிர்பார்த்தது அடுத்த தப்பு. மாட்டார்களாம்.

ஏர் ஹோஸ்டஸ் டிரேயில் காப்பி, டீ சகிதம் வந்தபோது, கழுத்தில் கண்டக்டர் மாதிரி தோல்பை. காப்பி சாயா வேணுங்களா? கட்டாயம் வேணும் தாயி. ஒண்ணரை பவுண்ட் அடைச்சா காப்பி. சாயா ஒரு பவுண்ட். பிஸ்கட் அம்பது காசு. எடுக்கட்டா?

செங்கல்பட்டு ஜங்ஷன் பிளாட்பாரத்தில் சேது எக்ஸ்பிரஸ் நிற்கும்போது ‘இட்லி வடை சூடான காப்பி’ என்று கடந்து போகிற குரல்களை இனி விமானங்களிலும் நாசுக்கான ஆங்கிலத்தில் கேட்கலாம்.

888888888888888888888888888888888888888888888888

ஈஸ்டர் நெருங்கி வந்தும், இன்னும் நாலைந்து டிகிரி செல்சியஸைத் தாண்டாமல், நெடுநல்வாடையடிக்கும் எடின்பரோவிலிருந்து புறப்படும்போது லண்டன் காலநிலை பத்து டிகிரியில் சஞ்சரிப்பதாக பிபிசி தளம் சொன்னது. எதற்கும் இருக்கட்டும் என்று வெங்காயச் சருகு போல ஒரு விண்ட் ஷீட்டரை சட்டைக்கு மேலே அணிந்து கொண்டு கிளம்பியது இன்னொரு தவறு. நசநசவென்று வியர்க்கத் தொடங்கியிருக்கிறது. சனியனைக் கழற்றிச் சுருட்டி முதுகில் சுமக்கும் மூட்டையில் திணிக்க வேண்டியதுதான்.

பிக்கடலி சர்க்கிள் பாதாள ரயில்நிலையத்தில் முதலாவது நகரும் படிக்கட்டு ஆமை வேகத்தில் மேலே போய்க்கொண்டிருக்கிறது. இது முடிந்து அடுத்த படிக்கட்டும் நகர்ந்து மேலே கொண்டுபோய் விட்டால்தான் பிக்கடலி தெருவும், ரீஜண்ட் தெருவும் மற்றதும்.

படிக்கட்டுத் தொடங்கும் இடத்தில் இரண்டு இளைஞர்கள் கிதாரை இசைத்து அருமையாகப் பாடிக்கொண்டிருக்க, படிக்கட்டில் நின்றபடிக்கே ஒரு தாடிக்காரனும் கூட்டுக்காரியும் அவர்களைக் கிண்டல் செய்வதுபோல் கண்டாமுண்டா என்று ஆடுகிறார்கள். அதையும் சிலர் ரசிக்கிறார்கள்.

எதையும் கவனிக்காமல் நகர்ந்தபடிக்கே இளம் ஜோடி ஒன்று தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. மேல்படி வருவதற்கு ஒரு வினாடி முன் சட்டென்று பிரிந்து முன்னால் குதித்துக் கைகோர்த்து நடக்கிறார்கள். ரெண்டு பேரும் சுந்தரிப் பெண்குட்டிகள். லண்டனில் குளிர் விட்டுப்போய்விட்டது.
888888888888888888888

கென்சிங்க்டன் பகுதி பஸ் ஸ்டாப்களில் அண்ணன் அழைக்கிறார் ரக போஸ்டர்கள். லண்டன் நகர மேயர் கென் லிவிங்ஸ்டன் நெரிசல் வரி கட்டச்சொல்லி மக்களை அழைக்கிறார்.

வாரநாட்களில் பரபரப்பான பகல் பொழுதுகளில் லண்டன் – வெஸ்ட்மினிஸ்டர் முக்கிய வீதிகளில் காரை ஓட்டிப் போனால், நெரிசல் வரி கட்ட வேண்டும். லண்டனில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேயர் இரண்டு வருடம் முன்னால் வகுத்த திட்டம் வெற்றிகரமாக நடக்கிறது, அதாவது மாநகராட்சியையும், முணுமுணுத்தபடி தினசரி தண்டம் அழும் நகரவாசிகளையும் பொறுத்தவரை.

ஏகப்பட்ட கார், வேன், ஆள் அம்பு என்று வைத்துக்கொண்டு சகலமான அதிகாரிகளும் சதா நகரத் தெருக்களில் வாகனங்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்ததலும், ஒரு காசு கூட நெரிசல் வரி கட்டமுடியாது என்று அமெரிக்கத் தூதரகம் அடம் பிடித்து வருகிறது. கிட்டத்தட்ட லட்சம் பவுண்ட் வரிபாக்கி. உன்னால் முடிஞ்சதைச் செஞ்சுக்கோ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு போகிற அமெரிக்கத் தூதரை ‘ரொம்ப சின்னத்தனமான மனுஷன்’ என்று மேயர் விளாசியிருக்கிறார். ஆனாலும் டாலர்தேசத்திலிருந்து காசு பெயரவில்லை.

நெரிசல் வரியை இப்போது கொஞ்சம் உயர்த்தியிருப்பதாக மாநகராட்சி போஸ்டர்கள் அறிவிக்கின்றன. தினசரி எட்டு பவுண்ட் வரி. ஒரு வருடத்துக்கு மொத்தமாகச் செலுத்தினால், நாற்பது நாள் லைசன்ஸ் இலவசம்.

பெட்ரோல் செலவு. காருக்கு இன்ஷூரன்ஸ். பராமரிப்பு. கூடவே வருடத்துக்கு ரெண்டாயிரத்து நானூறு பவுண்ட் வரி. நம்ம ஊரில் இந்தப்படிக்கு காசு கொடுப்பதாக இருந்தால் வருடம் ஒரு செஹண்ட் ஹாண்ட் கார் வாங்கிவிடலாம்.

88888888888888888888888888

இங்கிலாந்தில் இப்போது பென்ஷன் நிதி நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது. அரசு, தனியார் நிறுவனங்கள் பென்ஷன் நிதியை முதலீடு செய்திருந்த இனங்களிலிருந்து வரும் வருமானம் குறையத் தொடங்கியிருப்பதால், இப்போதைய, இனிவரப் போகிற பென்ஷன்தாரர்களுக்கு மாதாந்திர பென்ஷனைக் கொடுப்பது செலவுக் கணக்கை எகிற வைக்கும்.

பிரச்சனை தீர ஒரு வழியாக அமைச்சர் கார்டன் ப்ரவுன் அறிவித்திருப்பது இதுதான் – உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது. இதையடுத்து, பிரிட்டீஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்புச் செய்திருக்கிறது. பைலட்டுகள் இனி அறுபது வயது வரையும், ஏர் ஹோஸ்டஸ்கள் அறுபத்தைந்து வயது வரையும் வேலை பார்க்க வேண்டும்.

கண்ணைக் கவிந்தபடி காக்பிட்டில் வயோதிக விமானிகள் உட்கார்ந்து விமானத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தள்ளாடியபடி உள்ளே ஏர்ஹோஸ்டஸ்கள் சாயா, காப்பி விற்றுக் காசுவாங்கிப் போட்டுக்கொண்டு மூட்டுவலியோடு நடந்துபோகிற காலம் வருவதற்கான அறிகுறிகள் தட்டுப்படுகின்றன.

8888888888888888888888888888888

பென்ஷன் பெறும் வயது உயர்கிறதோ இல்லையோ, கணிசமான பிரிட்டீஷ்கார முதியவர்கள் தொண்ணூறு, நூறு வயது கடந்து பிரச்சனையில்லாமல் மூச்சுவிட்டுக் கொண்டு ஓடியாடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

எலிசபெத் மகாராணிக்கு வரும் ஜூன் மாதத்தில் எண்பது வயதாகிறது. ஈஸ்டரை ஒட்டி மகாராணி மாண்டி பர்ஸ் என்று ஆயிரக்கணக்கான பேருக்கு தட்சணை கொடுப்பது வழக்கம். மற்றதில் மரபு கடைப்பிடிக்கப் படுகிறதோ என்னமோ, மாண்டி பர்ஸ் விஷயத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் தொண்ணூறு காசு. அதுதான் காலம் காலமாக வழங்கப்படும் தட்சணை. ரெண்டாயிரத்து ஆறாம் வருடத்திலும் ஏழைகளுக்கு அதே தொண்ணூறு பென்ஸ் காசைத்தான் துணிப்பையில் போட்டு நீட்டுகிறார் மகாராணி. அவருடைய எண்பதாம் பிறந்த நாள் என்பதால் அரை பவுண்ட் கூடுதலாகத் தரப்படும் என்று தெரிகிறது.

ராணியம்மாவின் எண்பதாம் ஆண்டு நிறைவு சிறப்புப் புகைப்படத்தை அருமையான கருப்பு வெள்ளையில் எடுத்தவர் ஒப்செர்வர் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர். ஜேன் பவுன் என்ற இந்தப் பெண்மணி பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணியைப் படம் எடுத்து முடித்து, எண்பதாம் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ராணி சொன்னார், “ஜேன், உனக்கும் அதேபடி வாழ்த்துகள்”. புகைப்படக் கலைஞர் ஜேன் பவுனும் எண்பது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

888888888888888888888888888888888

ஜேனுக்கும் ஜோனுக்கும் ஒரு எழுத்தும் இருபது வயதும் வித்தியாசம்.

காரிலோ, பஸ்ஸிலோ இல்லை தேம்ஸ் நதியில் படகு விட்டபடியோ லண்டனைச் சுற்றுவதை விட நடந்து திரிந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.

டிஸ்ட்ரிக்ட் லைனில் வெஸ்ட்மினிஸ்டரும், எம்பாங்மெண்டும் கடந்து டெம்பிள் பாதாள ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது, பத்தொன்பதாம் நூற்றாண்டு உடையில் நிற்கிற மூதாட்டி ஜோன். சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளில் இடம்பெறும் லண்டனைச் சுற்றிக்காட்டத் தயாராக நிற்கிறார் இவர். ஆறு பவுண்ட்தான் கட்டணம்.

பத்து நிமிடத்தில் முப்பது பேர் நடைப் பயணத்தில் சேர, உற்சாகமாக நடக்க ஆரம்பிக்கிறார் இந்த வழிகாட்டி. டிக்கன்ஸ் நாவல்கள், கட்டுரைகளை ஒன்று விடாமல் கரைத்துக் குடித்த இவர் வரலாறு, வம்சாவளி பற்றிப் பத்திரிகைகளில் எழுதுகிறவர். கூடவே பழம்பெரும் நாடக நடிகை.

குறுக்குச் சந்துகளில் புகுந்து புறப்பட்டு, வீதியோரமாக, பழைய கட்டடங்களின் முன்னால், அவற்றைச் சுற்றிக்கொண்டு பின்னால், அப்புறம் ஒரு சாட்டமாக அடுத்த தெருமுனைக்கு என்று சளைக்காமல் நடக்கிற ஜோனோடு கூட அரக்கப்பரக்க நடக்கிறவர்களில் இளம் பெண்களும், நடுவயது ஆண்களும் அதிகம்.

டெம்பிள் பகுதி நீதிமன்றங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள், அரசு ரணசிகிச்சைக் கழகம், எம்பாங்மெண்ட் இருக்கும் இடத்திற்கு நேர்கீழே இருந்த நதியோரப் பட்டறைகள், தொழிற்கூடங்கள், புகை, அசுத்தம், குளிர் மூட்டம், சாரட் வண்டிகள், ஸ்டேஜ் கோச்கள் என்று இரண்டு நூற்றாண்டு முந்திய விக்டோரியா கால உலகத்தின் எச்சங்களை ஜோனின் கைகள் சுட்டிக்காட்ட, அவர் குரல் தளர்வில்லாமல் ஒலிக்கிறது. டிக்கன்ஸ், அவருடைய பெற்றோர், டிக்கன்ஸின் கதாபாத்திரங்களான பிக்விக், டேவிட் காப்பர்பீல்ட், ஸ்மால்வீட், டெட்லாக் சீமாட்டி, சாம் வெல்லர், வெஸ்பிட், பாப் சாயர், பேகின் என்று பல உண்மை, கற்பனை மனிதர்கள் முப்பது செகண்ட் இடைவெளிகளில் ஜோனின் முகபாவத்திலும் ஏற்ற இறக்கத்தோடு ஒலிக்கும் குரலிலும் வறுமையோடும், நோயோடும், மகிழ்ச்சியோடும், பகட்டோடும், குரூரத்தோடும், பெருமிதத்தோடும் உயிர் பெறுகிறார்கள். டிக்கன்ஸ் எழுதிய வரிகளாக ஒலித்து மறைகிறார்கள்.

ஒரு முடுக்குச் சந்து திரும்பி நிற்கிறார் ஜோன். பழைய கட்டிடம் ஒன்றைக் காட்டுகிறார். “ஓல்ட் க்யூரியாசிட்டி ஷாப் இதுதான்”. அவர் குரல் கம்முகிறது. டிக்கன்சின் அதே பெயரிலான நாவலில் நெல் என்ற குழந்தைப் பெண்ணும், அவளுடைய பாட்டனும் இந்தக் கடையை நடத்தி வந்ததை, சூதாட்டத்தில் எல்லாம் இழந்த பாட்டனோடு கூடக் கஷ்டப்பட்டு அலைந்து, நெல் உயிர்விடுவதை அற்புதமான உயிரோட்டத்தோடு ஜோன் சொல்ல, நேரம் உறைந்து போய் நிற்கிறது.

ஆண்ட்ரூ லாய்ட் வெப்ஸ்டரின் இசையமைப்பில் வெற்றிகரமாகத் தொடர்ந்து இருபது வருடமாக அரங்கேறிவரும் பிரம்மாண்டமான இசை நாடகமான (ஓப்பரா) ‘ஃபாண்டம் ஓஃப் தி ஓப்பரா’ பார்க்க இப்போது கிளம்பினால்தான், பிக்கடலி சர்க்கிளை ஒட்டிய வைக்கோல் சந்தைப் பகுதியில் நாடகக் கொட்டகை போய்ச் சேர முடியும்.

*****************************************

Sunday, April 09, 2006

எடின்பரோ குறிப்புகள் - 11

ஒரு மாதம் கழித்து இதைத் தொடரும்போது, உதிர்ந்த மலர்களோடு தொடங்க வேண்டி இருப்பதில் வருத்தம்.

மலையாள இலக்கியம் ‘சாஹித்திய வாரபலம்’ கிருஷ்ணன் நாயர், குப்தன் நாயர் என்ற இரண்டு முக்கியமான விமர்சகர்களைக் கடந்துபோன முப்பது சில்லறை நாட்களில் இழந்துள்ளது. குப்தன் நாயரைத் தீவிர இலக்கிய ரசிகர்கள் அவருடைய சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் அறிவார்கள்.

கிருஷ்ணன் நாயருடைய ரசிகர்களில் மலையாளப் பத்திரிகை படிக்கிற, இலக்கியத்தோடு குறைந்த பட்சப் பரிச்சயம் உள்ள ஒரு பெரிய ஜனக்கூட்டமே அடங்கும். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக வாராவாரம் மிடில்-ஓஃப்-தி-ரோட் பத்திரிகைகளில் இலக்கியம் பற்றிச் சளைக்காமால் எழுதி வந்த ஜாம்பவான் அவர். எழுதிய பத்திரிகை அவ்வப்போது மாறிவந்தாலும், கட்டுரைத் தொடருக்கு ஒரே பெயர்தான் - சாஹித்ய வாரபலம். முப்பத்தேழு வருடத்தில் இரண்டே வாரம் தான் இந்த இலக்கிய வாரபலன் கட்டுரை எழுதாமல் நாயர் பேனா மூடிவைக்கப்பட்டது. ஒன்று அவர் அபூர்வமாகக் காய்ச்சலில் விழுந்தபோது. மற்றது அவருடைய மகன் சாலை விபத்தில் இறந்துபோன வாரம்.

சினிமா, அரசியல் விமர்சனம் போல் அந்தந்த வாரத்துக்குக் கொஞ்சம் முன்னால் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதை, கவிதை என்று எடுத்துக்கொண்டு சிரத்தையாகச் செய்த விமர்சனம் கிருஷ்ணன் நாயருடையது. இந்த விமர்சனத்தைச் சாக்காக வைத்து அவர் படித்த, படித்துக் கொண்டிருந்த ஆங்கில, வேற்று மொழி இலக்கியங்களைச் சளைக்காமல் அறிமுகப்படுத்திய உற்சாகமான விமர்சகர் அவர்.

ஒரு புலர்காலைப் பொழுதில் மலையாளத்தில் இனிமேல் சிறுகதையோ, கவிதையோ எழுதமாட்டோம் என்று எல்லா எழுத்தாளர்களும், எழுதினாலும் போடமாட்டோம் என்று பத்திரிகை ஆசிரியர்களும், அச்சுப்போட்டு வந்தாலும் படிக்க மாட்டோம் என்று வாசிக்கத் தெரிந்த மலையாளிகளும் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்துச் செயல்பட்டிருந்தால்கூட கிருஷ்ணன் நாயர் வாரபலன் கட்டுரையை நிறுத்தியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அவருக்கு வேற்று மொழி இலக்கியம் பற்றி எழுத, முக்கியமாக இலக்கியம், ரசனை பற்றிப் பொதுவாகக் கதைக்க வண்டி வண்டியாகக் கைவசம் இருந்தது.

ஜப்பானிய எழுத்தாளர் மிஷிமோ பற்றி இந்து பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதிய ஒரு கட்டுரை பற்றி கிருஷ்ணன் நாயரோடு இண்லண்ட் லெட்டர் யுத்தம் நடத்திய அனுபவம் டயரிக்காரனுக்கு உண்டு. ஆனாலும் அவருடைய இலக்கியச் சேவைக்காக, குறிப்பாக, நூற்றுக்கணக்கான லத்தீன் அமெரிக்க, ஜப்பானிய, ஆப்பிரிக்க இலக்கியவாதிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதற்காக லட்சக்கணக்கான மலையாள வாசகர்களில் ஒருவனாக நாயருக்கு எப்போதும் நன்றி பாராட்டுகிறதில் பெருமிதமே.

கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு பத்திரிகையை விட்டு மற்றதுக்கு வாரபலம் கட்டுரைத் தொடரை மாற்றி வந்த ஒரு கிளி ஜோசியக்காரனாகக் கிருஷ்ணன் நாயரை உருவகப்படுத்தி மதிப்புக்குரிய மலையாள இலக்கியவாதியான ஒரு நண்பர் டயரிக்காரனுக்கு இரண்டு வருடம் முன்பு எழுதியிருந்தார்.

என்னெ க்ஷமிக்கணெ பகுமானப்பெட்ட …….. நம்முடெ ஸ்வந்தம் கிருஷ்ணன் நாயர் மரிச்செங்கிலும் வாழ்த்தப்பெடட்டே.
888888888888888888888888888888888888888888888888888888888888888

காலமானார் பட்டியலில் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் தேவராஜனும் சேர்ந்துவிட்டார்.

வயலார் கவிதைக்கு - அதெல்லாம் கவிதை இல்லை என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவார் கிருஷ்ணன் நாயர் - தேவராஜன் மாஸ்டர் இசையமைத்து, ஏசுதாசும், பொரயத்து லீலா என்ற பி.லீலாவும், ஜானகியும் பாடி, சத்யனும், மதுவும், நசீரும், ஷீலாவும், ஜெயபாரதியும் அபிநயித்து மறக்க முடியாதவை ஆக்கிய திரைப்படப் பாடல்கள் ஏராளம்.

அறுபது - எழுபதுகளின் மலையாள நாடக மேடைக் கானங்களுக்கும் புத்துயிர் கொடுத்தவர் தேவராஜன். தன் ஆப்த நண்பரும் கவிஞருமான ஒ.என்.வி.குறூப் எழுதி தேவராஜனே பாடிய ‘துஞ்ஞன் பரம்பிலே தத்தே’ இசைத்தட்டு இணையத்தில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள். (‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ நாடகம் என்று நினைவு; ‘எண்டெ மகனாணு சரி’ நாடகம் அது என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னாலும் சரிதான்). தேவராஜன் மாஸ்டருக்கு ஜி.என்.பாலசுப்ரமணியம் மேல் இருந்த அபிமானம் புரியும்.

தமிழில் அவர் இசையமைப்பில் துலாபாரம் (‘காற்றினிலே’, ‘சங்கம் வளர்த்த தமிழ்’), அன்னை வேளாங்கண்ணி (‘வானமென்னும் வீதியிலே’ மாதுரி - ஏசுதாஸ் பாடலுக்கு அபிநயம் ஜெ.ஜெ - ஜெமினி), ஜெயகாந்தனின் கதையை எஸ்.வி.சுப்பையா திரைப்படமாக்கிய ‘காவல் தெய்வம்’ படத்தில் ‘அல்லாவின் தயவினிலே’ (டி.எம்.எஸ், பி.பி.எஸ் குரல்களும் சிவாஜி - முத்துராமன் நடிப்பும்) என்று சில படங்களே நினைவு வருகின்றன. சுவாமி ஐயப்பன் படத்தில் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே’ பாட்டை விட்டுட்டீங்களே என்கிறார் நண்பர் தூள்.காம் பாலாஜி.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

போன மாதம் காலமான மலையாள குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.திருப்பணித்துற பற்றி எழுதாமல் இந்த ஓபிச்சுவரி பூர்த்தியடையாது.

‘திருப்ணித்ற’ பற்றி இரண்டு வருடம் முன்னால் திண்ணையில் மத்தளராயனாக எழுதிய கட்டுரையை அன்பர்கள் தேடிப்பிடித்துப் படித்தால் அவர்களுக்கு சகல சவுபாக்கியமும் திருப்பணித்துறையின் ஆசிர்வாதமும் கிட்டும்.

மாதிரிமங்கலம் சேஷன் வெங்கட்ராமன் என்ற மலையாளத் தமிழரான திருப்பணித்துற சினிமா, சின்னத்திரை நடிகராகப் பரவலாக அறியப்பட்டவர். ஹரிஹரனின் ‘பெருந்தச்சன்’ படத்தில் நெடுமுடி வேணுவோடு வரும் அசட்டு நம்பூத்ரியா, ‘மின்னாமினுங்கின் நுறுங்கு வெட்டம்’ படத்தில் பார்வதி ஜெயராமின் தகப்பனாக வரும் மனசில் ஈரமில்லாத நம்பூத்ரியா, ஏஷியாநெட் டி.வி மெகா சீரியலில் ரத்தம் குடிக்கத் துரத்தி வரும் காதோரம் லோலாக்கு இல்லாத கள்ளியங்காட்டு யட்சி சுகன்யாவைக் கண்டு மிரண்டு ஓடும் கிருஷ்ணன் கோயில் சாந்திக்கார நம்பூத்ரியா - திருப்பணித்துற நடிக்காவிட்டால் இந்த நம்பூத்ரிகள் காற்றில் கரைந்து போயிருப்பார்கள்.

தமிழில் ஒரே படம். மம்மூட்டியின் ‘மௌனம் சம்மதம்’ -நாகேஷின் அதிரடியான எடுபிடி.

கதாகாலட்சேபக் கலைஞர், கணக்கு வாத்தியார் என்ற மற்ற சிறப்புகளும் இந்தத் தமிழ் மலையாளிக்கு உண்டு என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அப்பாடா, நினைவஞ்சலி ஒரு வழியாக முடிந்தது. இங்கிலாந்து பத்திரிகைகளில், முக்கியமாக கார்டியனில் பக்கம் பக்கமாக ஓபிச்சுவரி போடுவதோடு, அதையெல்லாம் புத்தகமாக வேறு வெளியிடுகிறார்கள். போன வாரம் இங்கே எடின்பரோ பத்திரிகையில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது - காலமானார் பகுதி எழுத அனுபவம் உள்ள பத்திரிகையாளர் தேவை.

தினமணியில் தினசரி ‘நீர்மட்டம்’ செய்தி எழுதவே ஒரு நிருபர் இருந்ததாக நா.பா சொல்வார். தினசரி ‘பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் முப்பது அடி, வைகை அணண இருபத்தேழு அடி, மேட்டூர் தண்ணீர் இல்லை’ என்று மர ஸ்கேலால் எழுதுவதை விட இது சுவாரசியமான வேலையாகத்தான் இருக்கும்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால் இசையரங்கிலும் அடுத்து என்ன நிகழ்ச்சி, எப்போது என்று விளம்பரங்களை மேய்வது, லோத்தியன் வீதி பங்களாதேஷ் சாப்பாட்டுக் கடையில் ரொட்டி, ராத்திரி போஜனம், திரும்ப நாடகம் என்று தொடர்ந்து செலவழிக்க வேண்டி வரும்.

நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கிட்டத்தட்ட இருபது பவுண்ட் கட்டணம். ஆனாலும் எடின்பரோ லைசியம் தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ‘பாஸ்ட்’ அவை நிறைந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையான காட்சிகளுக்குக் கணிசமாக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

அரங்கில் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. இரண்டு பக்கத்திலும் வெள்ளைக்கார மூதாட்டிகள் கையில் பைனாகுலரோடு அமர்ந்திருக்க, நடு இருக்கையில் உட்கார வேண்டிய கட்டாயம்.

நாடகம் உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ஐரோப்பிய இலக்கிய சாதனைகளை யார் பட்டியல் போட்டாலும் தவறாமல் இடம் பெறுவது ஜெர்மன் கவிஞர் கதே எழுதிய கவிதை நாடகமான பாஸ்ட் (Faust). பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியப் பகுதி வரை வாழ்ந்த கதே அரசியல், கலை, இலக்கியம் என்று எல்லா வகையிலும் பரபரப்பாக விளங்கிய இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சிந்தனை ஓட்டங்களையும், அவற்றை மீறிய அசாத்தியப் படைப்பு ஆற்றலையும் இந்தக் கவிதை நாடகத்தில் வடிக்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட அறுபது வருடம். அவருடைய வாழ்நாள் சாதனை என்று தயங்காமல் சொல்லலாம் இரண்டு பாகமாக அமைந்த இந்தப் படைப்பை.

ஹோமரின் கிரேக்க இதிகாசமான இலியாதில் வரும் நாயகி ட்ராய் நகரப் பேரரசி ஹெலன், சாமானியர்கள்,சாத்தான், தெய்வம், மிருகங்கள் என்று கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படைப்பை மேடையேற்றுவது அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். லைசியம் தியேட்டர் நாடகக் குழுவினர் இதை அனாசயமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதுவும் போன நூற்றாண்டு இலக்கியப் படைப்பை நவீன மேடை உத்திகள், பின் நவீனத்துவ நாடகமொழி இவற்றின் அடிப்படையில், நிகழ்கால பிரக்ஞையும், காலப் பிரமாணமும் கச்சிதமாகப் பொருந்திவரும்படிக்கு.

உடலுறவு பற்றி சதா உதிர்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் நாடகம் முழுக்க விரவி இருப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுதான் நிகழ்கலையான நாடகம் என்று தெரிவிக்கப்பட்டு நிகழ்த்தப்படும்போது பார்வையாளர்களாக இருந்தும், நாடகப் பிரதியை வாசித்தும் வளர்ந்தவர்களுக்கு, என்னதான் ஐரோப்பிய நாடக வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்தாலும், உடலுறவை கிட்டத்தட்ட நிகழ்த்திக்காட்டும் காட்சியமைப்புகள் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். கூட்டப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவை இவை.

கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.

‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடும்போது தயங்குகிறான். ‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’ என்று திருத்திச் சொல்கிற பாஸ்ட் இந்தக்காலத் தயக்கமும், குழப்பமும் கலந்த மதிப்பீடுகளின் பிரதிநிதி.

சுழலும் நாடக மேடை. மேடைக்குள் மேடையாக இன்னொரு அரங்கம், மேடையைச் சுற்றிக் கவிந்து பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளாக, சுற்றிச் சூழ்ந்து இறுகும் கூண்டுகளாக, பாத்திரங்கள் அவ்வப்போது ஏறி இறங்கி, இருந்து அபிநயிக்கும் மேடை வெளியாக பிரம்மாண்டமான இரும்புச் சட்டகங்கள். பின்னால் திரையில் அவ்வப்போது விடியோ ப்ரஜெக்ஷனாக கோள்கள், வானப்பரப்பு என்று விரியும் காட்சிகள். மேடையில் பொதுவாகவும், சூழும் இருளுக்கு நடுவே குறிப்பிட்ட இடத்திலும் படரும் ஸ்ட்ரோபிக் ஒளியமைப்பு. தொழில் நுட்பம் நயமாகப் பயன்படுத்தப்பட்டு, பாஸ்ட் நாடகத்தைச் சிறப்பாக்குகிறது.

கூடவே, எளிய காட்சியமைப்புகள். பல காட்சிகளில் கட்டியங்காரன் போல் இயக்குனரும் ஒரு பாத்திரமாக மேடையில் நாற்காலி போட்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உள்ளே போகலாம்’ என்று அவர் உரக்கச் சொல்ல, பாதிப் பேச்சில் ஒரு கதாபாத்திரம் மறைகிறது. ‘தெருவில் நடக்கிறான் பாஸ்ட்’ என்று சொல்ல, செட் பிராப்பர்ட்டி எதுவும் கண்ணில் காட்டாமல், மேடை சட்டென்று தெருவாகிறது. காட்சியைச் சட்டென்று முடிக்க வேண்டியிருந்தால், ‘உயிரைக் கொண்டு போக தேவதைகள் வரலாம்’ என்று அவர் அறிவிக்க, இரண்டு தேவதைகள் உள்ளே வர, இழுத்துப் பறிக்காமல் ஒரு மரணம். காட்சி முடிவு.

நாடகத்தின் முதல் பகுதியில் பெண் கதாபாத்திரமான கிரட்சென், பாஸ்ட் அவளுடைய படுக்கையறையில் மறைத்துவைத்துப்போன அழகான உடையைப் பார்க்கிறாள். தோழி தூண்ட, உடுத்தியிருந்ததைக் களைந்துவிட்டு அங்கேயே புது உடுப்பை மாற்றிக்கொண்டு அழகு பார்க்கிறாள். அவள் தோழியை சாத்தான் மயக்குகிறான். சுவரில் சாய்ந்து அவனோடு வாய்வழிப் புணர்ச்சியில் தோழி ஈடுபட, பாஸ்டோடு படுக்கையைப் பகிர்கிறாள் கிரட்சென். இரண்டு பக்கத்திலும் பெண் பார்வையாளர்கள் இருக்க, நடுவில் உட்கார்ந்து இதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தாலும், கதையும், வசனமும், நாடக ஆக்கமும் இருக்கையில் உட்காரவைத்தன.

நாடகத்தின் இரண்டாம் பகுதியில் பாஸ்ட் பேரழகியும் கிரேக்க மகாராணியும் ஆன ஹெலனைச் சந்திக்க விரும்புகிறான். கடல் தேவதைகளும் சாத்ததனும் கேட்டுக்கொண்டபடி அவன் முழு உடுப்பையும் களைய வேண்டி வருகிறது. பிறந்த மேனிக்கு மேடையில் நின்று வசனம் பேசும் பாஸ்ட், அப்படியே மெல்ல நடந்து பின்னால் போக, பக்கத்தில் சத்தம். திரும்பிப் பார்க்க, பைனாகுலர்கள் உயர்ந்திருந்தன.
888888888888888888888888888888888888888888888888888888888888888

மக்கார்த்தி ஐம்பதுகளில் அமெரிக்காவில் நடத்திய கம்யூனிஸ்ட் களையெடுப்பு பற்றிய ஜார்ஜ் க்ளூனியின் ‘குட்நைட் அண்ட் குட்லக்’, ருவாண்டா படுகொலை பற்றிய பிரிட்டீஷ் படமான ‘ஷூட்டிங் டாக்ஸ்’, பிலிப்ப் சைமோர் ஹாப்மெனுக்கு ஆஸ்கர் பரிசு வாங்கித்தந்த ‘கபோட்’ என்று பார்த்த சினிமாக்கள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. கட்டுரை நீண்டு போனதால், அதெல்லாம் அடுத்த இதழில்.

முடிக்கும் முன்னால், கார்டியன் பத்திரிகையில் பீட்டர் பிராட்ஷா இந்த வாரம் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட் 2’ படம் பற்றி எழுதியிருந்தது :

‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’ முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷரன் ஸ்டோன் கிட்டத்தட்டப் பத்து வருடம் கழித்து வரும் இந்த இரண்டாம் படத்திலும் கதாநாயகி. ஈ-மெயில் கம்ப்யூட்டர் கீ-போர்ட் ‘@’ பொத்தான் உபயோகத்தில் கொண்டு வந்த அதேயளவு மாபெரும் மாற்றத்தை, விடியோ ரிமோட்டின் ‘pause’ பொத்தானை அழுத்துவதில் ஏற்படுத்திய படம் முதல் பேசிக் இன்ஸ்டிங்க்ட்.".

அவர் குறிப்பிடும் காட்சி என்னவென்று புரிந்திருக்கலாம். அந்தப் படம் பார்க்கும்போது உங்களிடம் வீடியோ பிளேயர் இருந்ததா?

எடின்பரோ குறிப்புகள் - 11

ஒரு மாதம் கழித்து இதைத் தொடரும்போது, உதிர்ந்த மலர்களோடு தொடங்க வேண்டி இருப்பதில் வருத்தம்.

மலையாள இலக்கியம் ‘சாஹித்திய வாரபலம்’ கிருஷ்ணன் நாயர், குப்தன் நாயர் என்ற இரண்டு முக்கியமான விமர்சகர்களைக் கடந்துபோன முப்பது சில்லறை நாட்களில் இழந்துள்ளது. குப்தன் நாயரைத் தீவிர இலக்கிய ரசிகர்கள் அவருடைய சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் அறிவார்கள்.

கிருஷ்ணன் நாயருடைய ரசிகர்களில் மலையாளப் பத்திரிகை படிக்கிற, இலக்கியத்தோடு குறைந்த பட்சப் பரிச்சயம் உள்ள ஒரு பெரிய ஜனக்கூட்டமே அடங்கும். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக வாராவாரம் மிடில்-ஓஃப்-தி-ரோட் பத்திரிகைகளில் இலக்கியம் பற்றிச் சளைக்காமால் எழுதி வந்த ஜாம்பவான் அவர். எழுதிய பத்திரிகை அவ்வப்போது மாறிவந்தாலும், கட்டுரைத் தொடருக்கு ஒரே பெயர்தான் - சாஹித்ய வாரபலம். முப்பத்தேழு வருடத்தில் இரண்டே வாரம் தான் இந்த இலக்கிய வாரபலன் கட்டுரை எழுதாமல் நாயர் பேனா மூடிவைக்கப்பட்டது. ஒன்று அவர் அபூர்வமாகக் காய்ச்சலில் விழுந்தபோது. மற்றது அவருடைய மகன் சாலை விபத்தில் இறந்துபோன வாரம்.

சினிமா, அரசியல் விமர்சனம் போல் அந்தந்த வாரத்துக்குக் கொஞ்சம் முன்னால் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதை, கவிதை என்று எடுத்துக்கொண்டு சிரத்தையாகச் செய்த விமர்சனம் கிருஷ்ணன் நாயருடையது. இந்த விமர்சனத்தைச் சாக்காக வைத்து அவர் படித்த, படித்துக் கொண்டிருந்த ஆங்கில, வேற்று மொழி இலக்கியங்களைச் சளைக்காமல் அறிமுகப்படுத்திய உற்சாகமான விமர்சகர் அவர்.

ஒரு புலர்காலைப் பொழுதில் மலையாளத்தில் இனிமேல் சிறுகதையோ, கவிதையோ எழுதமாட்டோம் என்று எல்லா எழுத்தாளர்களும், எழுதினாலும் போடமாட்டோம் என்று பத்திரிகை ஆசிரியர்களும், அச்சுப்போட்டு வந்தாலும் படிக்க மாட்டோம் என்று வாசிக்கத் தெரிந்த மலையாளிகளும் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்துச் செயல்பட்டிருந்தால்கூட கிருஷ்ணன் நாயர் வாரபலன் கட்டுரையை நிறுத்தியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அவருக்கு வேற்று மொழி இலக்கியம் பற்றி எழுத, முக்கியமாக இலக்கியம், ரசனை பற்றிப் பொதுவாகக் கதைக்க வண்டி வண்டியாகக் கைவசம் இருந்தது.

ஜப்பானிய எழுத்தாளர் மிஷிமோ பற்றி இந்து பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதிய ஒரு கட்டுரை பற்றி கிருஷ்ணன் நாயரோடு இண்லண்ட் லெட்டர் யுத்தம் நடத்திய அனுபவம் டயரிக்காரனுக்கு உண்டு. ஆனாலும் அவருடைய இலக்கியச் சேவைக்காக, குறிப்பாக, நூற்றுக்கணக்கான லத்தீன் அமெரிக்க, ஜப்பானிய, ஆப்பிரிக்க இலக்கியவாதிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதற்காக லட்சக்கணக்கான மலையாள வாசகர்களில் ஒருவனாக நாயருக்கு எப்போதும் நன்றி பாராட்டுகிறதில் பெருமிதமே.

கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு பத்திரிகையை விட்டு மற்றதுக்கு வாரபலம் கட்டுரைத் தொடரை மாற்றி வந்த ஒரு கிளி ஜோசியக்காரனாகக் கிருஷ்ணன் நாயரை உருவகப்படுத்தி மதிப்புக்குரிய மலையாள இலக்கியவாதியான ஒரு நண்பர் டயரிக்காரனுக்கு இரண்டு வருடம் முன்பு எழுதியிருந்தார்.

என்னெ க்ஷமிக்கணெ பகுமானப்பெட்ட …….. நம்முடெ ஸ்வந்தம் கிருஷ்ணன் நாயர் மரிச்செங்கிலும் வாழ்த்தப்பெடட்டே.
888888888888888888888888888888888888888888888888888888888888888

காலமானார் பட்டியலில் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் தேவராஜனும் சேர்ந்துவிட்டார்.

வயலார் கவிதைக்கு - அதெல்லாம் கவிதை இல்லை என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவார் கிருஷ்ணன் நாயர் - தேவராஜன் மாஸ்டர் இசையமைத்து, ஏசுதாசும், பொரயத்து லீலா என்ற பி.லீலாவும், ஜானகியும் பாடி, சத்யனும், மதுவும், நசீரும், ஷீலாவும், ஜெயபாரதியும் அபிநயித்து மறக்க முடியாதவை ஆக்கிய திரைப்படப் பாடல்கள் ஏராளம்.

அறுபது - எழுபதுகளின் மலையாள நாடக மேடைக் கானங்களுக்கும் புத்துயிர் கொடுத்தவர் தேவராஜன். தன் ஆப்த நண்பரும் கவிஞருமான ஒ.என்.வி.குறூப் எழுதி தேவராஜனே பாடிய ‘துஞ்ஞன் பரம்பிலே தத்தே’ இசைத்தட்டு இணையத்தில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள். (‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ நாடகம் என்று நினைவு; ‘எண்டெ மகனாணு சரி’ நாடகம் அது என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னாலும் சரிதான்). தேவராஜன் மாஸ்டருக்கு ஜி.என்.பாலசுப்ரமணியம் மேல் இருந்த அபிமானம் புரியும்.

தமிழில் அவர் இசையமைப்பில் துலாபாரம் (‘காற்றினிலே’, ‘சங்கம் வளர்த்த தமிழ்’), அன்னை வேளாங்கண்ணி (‘வானமென்னும் வீதியிலே’ மாதுரி - ஏசுதாஸ் பாடலுக்கு அபிநயம் ஜெ.ஜெ - ஜெமினி), ஜெயகாந்தனின் கதையை எஸ்.வி.சுப்பையா திரைப்படமாக்கிய ‘காவல் தெய்வம்’ படத்தில் ‘அல்லாவின் தயவினிலே’ (டி.எம்.எஸ், பி.பி.எஸ் குரல்களும் சிவாஜி - முத்துராமன் நடிப்பும்) என்று சில படங்களே நினைவு வருகின்றன. சுவாமி ஐயப்பன் படத்தில் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே’ பாட்டை விட்டுட்டீங்களே என்கிறார் நண்பர் தூள்.காம் பாலாஜி.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

போன மாதம் காலமான மலையாள குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.திருப்பணித்துற பற்றி எழுதாமல் இந்த ஓபிச்சுவரி பூர்த்தியடையாது.

‘திருப்ணித்ற’ பற்றி இரண்டு வருடம் முன்னால் திண்ணையில் மத்தளராயனாக எழுதிய கட்டுரையை அன்பர்கள் தேடிப்பிடித்துப் படித்தால் அவர்களுக்கு சகல சவுபாக்கியமும் திருப்பணித்துறையின் ஆசிர்வாதமும் கிட்டும்.

மாதிரிமங்கலம் சேஷன் வெங்கட்ராமன் என்ற மலையாளத் தமிழரான திருப்பணித்துற சினிமா, சின்னத்திரை நடிகராகப் பரவலாக அறியப்பட்டவர். ஹரிஹரனின் ‘பெருந்தச்சன்’ படத்தில் நெடுமுடி வேணுவோடு வரும் அசட்டு நம்பூத்ரியா, ‘மின்னாமினுங்கின் நுறுங்கு வெட்டம்’ படத்தில் பார்வதி ஜெயராமின் தகப்பனாக வரும் மனசில் ஈரமில்லாத நம்பூத்ரியா, ஏஷியாநெட் டி.வி மெகா சீரியலில் ரத்தம் குடிக்கத் துரத்தி வரும் காதோரம் லோலாக்கு இல்லாத கள்ளியங்காட்டு யட்சி சுகன்யாவைக் கண்டு மிரண்டு ஓடும் கிருஷ்ணன் கோயில் சாந்திக்கார நம்பூத்ரியா - திருப்பணித்துற நடிக்காவிட்டால் இந்த நம்பூத்ரிகள் காற்றில் கரைந்து போயிருப்பார்கள்.

தமிழில் ஒரே படம். மம்மூட்டியின் ‘மௌனம் சம்மதம்’ -நாகேஷின் அதிரடியான எடுபிடி.

கதாகாலட்சேபக் கலைஞர், கணக்கு வாத்தியார் என்ற மற்ற சிறப்புகளும் இந்தத் தமிழ் மலையாளிக்கு உண்டு என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அப்பாடா, நினைவஞ்சலி ஒரு வழியாக முடிந்தது. இங்கிலாந்து பத்திரிகைகளில், முக்கியமாக கார்டியனில் பக்கம் பக்கமாக ஓபிச்சுவரி போடுவதோடு, அதையெல்லாம் புத்தகமாக வேறு வெளியிடுகிறார்கள். போன வாரம் இங்கே எடின்பரோ பத்திரிகையில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது - காலமானார் பகுதி எழுத அனுபவம் உள்ள பத்திரிகையாளர் தேவை.

தினமணியில் தினசரி ‘நீர்மட்டம்’ செய்தி எழுதவே ஒரு நிருபர் இருந்ததாக நா.பா சொல்வார். தினசரி ‘பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் முப்பது அடி, வைகை அணண இருபத்தேழு அடி, மேட்டூர் தண்ணீர் இல்லை’ என்று மர ஸ்கேலால் எழுதுவதை விட இது சுவாரசியமான வேலையாகத்தான் இருக்கும்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால் இசையரங்கிலும் அடுத்து என்ன நிகழ்ச்சி, எப்போது என்று விளம்பரங்களை மேய்வது, லோத்தியன் வீதி பங்களாதேஷ் சாப்பாட்டுக் கடையில் ரொட்டி, ராத்திரி போஜனம், திரும்ப நாடகம் என்று தொடர்ந்து செலவழிக்க வேண்டி வரும்.

நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கிட்டத்தட்ட இருபது பவுண்ட் கட்டணம். ஆனாலும் எடின்பரோ லைசியம் தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ‘பாஸ்ட்’ அவை நிறைந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையான காட்சிகளுக்குக் கணிசமாக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

அரங்கில் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. இரண்டு பக்கத்திலும் வெள்ளைக்கார மூதாட்டிகள் கையில் பைனாகுலரோடு அமர்ந்திருக்க, நடு இருக்கையில் உட்கார வேண்டிய கட்டாயம்.

நாடகம் உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ஐரோப்பிய இலக்கிய சாதனைகளை யார் பட்டியல் போட்டாலும் தவறாமல் இடம் பெறுவது ஜெர்மன் கவிஞர் கதே எழுதிய கவிதை நாடகமான பாஸ்ட் (Faust). பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியப் பகுதி வரை வாழ்ந்த கதே அரசியல், கலை, இலக்கியம் என்று எல்லா வகையிலும் பரபரப்பாக விளங்கிய இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சிந்தனை ஓட்டங்களையும், அவற்றை மீறிய அசாத்தியப் படைப்பு ஆற்றலையும் இந்தக் கவிதை நாடகத்தில் வடிக்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட அறுபது வருடம். அவருடைய வாழ்நாள் சாதனை என்று தயங்காமல் சொல்லலாம் இரண்டு பாகமாக அமைந்த இந்தப் படைப்பை.

ஹோமரின் கிரேக்க இதிகாசமான இலியாதில் வரும் நாயகி ட்ராய் நகரப் பேரரசி ஹெலன், சாமானியர்கள்,சாத்தான், தெய்வம், மிருகங்கள் என்று கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படைப்பை மேடையேற்றுவது அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். லைசியம் தியேட்டர் நாடகக் குழுவினர் இதை அனாசயமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதுவும் போன நூற்றாண்டு இலக்கியப் படைப்பை நவீன மேடை உத்திகள், பின் நவீனத்துவ நாடகமொழி இவற்றின் அடிப்படையில், நிகழ்கால பிரக்ஞையும், காலப் பிரமாணமும் கச்சிதமாகப் பொருந்திவரும்படிக்கு.

உடலுறவு பற்றி சதா உதிர்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் நாடகம் முழுக்க விரவி இருப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுதான் நிகழ்கலையான நாடகம் என்று தெரிவிக்கப்பட்டு நிகழ்த்தப்படும்போது பார்வையாளர்களாக இருந்தும், நாடகப் பிரதியை வாசித்தும் வளர்ந்தவர்களுக்கு, என்னதான் ஐரோப்பிய நாடக வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்தாலும், உடலுறவை கிட்டத்தட்ட நிகழ்த்திக்காட்டும் காட்சியமைப்புகள் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். கூட்டப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவை இவை.

கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.

‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடும்போது தயங்குகிறான். ‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’ என்று திருத்திச் சொல்கிற பாஸ்ட் இந்தக்காலத் தயக்கமும், குழப்பமும் கலந்த மதிப்பீடுகளின் பிரதிநிதி.

சுழலும் நாடக மேடை. மேடைக்குள் மேடையாக இன்னொரு அரங்கம், மேடையைச் சுற்றிக் கவிந்து பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளாக, சுற்றிச் சூழ்ந்து இறுகும் கூண்டுகளாக, பாத்திரங்கள் அவ்வப்போது ஏறி இறங்கி, இருந்து அபிநயிக்கும் மேடை வெளியாக பிரம்மாண்டமான இரும்புச் சட்டகங்கள். பின்னால் திரையில் அவ்வப்போது விடியோ ப்ரஜெக்ஷனாக கோள்கள், வானப்பரப்பு என்று விரியும் காட்சிகள். மேடையில் பொதுவாகவும், சூழும் இருளுக்கு நடுவே குறிப்பிட்ட இடத்திலும் படரும் ஸ்ட்ரோபிக் ஒளியமைப்பு. தொழில் நுட்பம் நயமாகப் பயன்படுத்தப்பட்டு, பாஸ்ட் நாடகத்தைச் சிறப்பாக்குகிறது.

கூடவே, எளிய காட்சியமைப்புகள். பல காட்சிகளில் கட்டியங்காரன் போல் இயக்குனரும் ஒரு பாத்திரமாக மேடையில் நாற்காலி போட்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உள்ளே போகலாம்’ என்று அவர் உரக்கச் சொல்ல, பாதிப் பேச்சில் ஒரு கதாபாத்திரம் மறைகிறது. ‘தெருவில் நடக்கிறான் பாஸ்ட்’ என்று சொல்ல, செட் பிராப்பர்ட்டி எதுவும் கண்ணில் காட்டாமல், மேடை சட்டென்று தெருவாகிறது. காட்சியைச் சட்டென்று முடிக்க வேண்டியிருந்தால், ‘உயிரைக் கொண்டு போக தேவதைகள் வரலாம்’ என்று அவர் அறிவிக்க, இரண்டு தேவதைகள் உள்ளே வர, இழுத்துப் பறிக்காமல் ஒரு மரணம். காட்சி முடிவு.

நாடகத்தின் முதல் பகுதியில் பெண் கதாபாத்திரமான கிரட்சென், பாஸ்ட் அவளுடைய படுக்கையறையில் மறைத்துவைத்துப்போன அழகான உடையைப் பார்க்கிறாள். தோழி தூண்ட, உடுத்தியிருந்ததைக் களைந்துவிட்டு அங்கேயே புது உடுப்பை மாற்றிக்கொண்டு அழகு பார்க்கிறாள். அவள் தோழியை சாத்தான் மயக்குகிறான். சுவரில் சாய்ந்து அவனோடு வாய்வழிப் புணர்ச்சியில் தோழி ஈடுபட, பாஸ்டோடு படுக்கையைப் பகிர்கிறாள் கிரட்சென். இரண்டு பக்கத்திலும் பெண் பார்வையாளர்கள் இருக்க, நடுவில் உட்கார்ந்து இதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தாலும், கதையும், வசனமும், நாடக ஆக்கமும் இருக்கையில் உட்காரவைத்தன.

நாடகத்தின் இரண்டாம் பகுதியில் பாஸ்ட் பேரழகியும் கிரேக்க மகாராணியும் ஆன ஹெலனைச் சந்திக்க விரும்புகிறான். கடல் தேவதைகளும் சாத்ததனும் கேட்டுக்கொண்டபடி அவன் முழு உடுப்பையும் களைய வேண்டி வருகிறது. பிறந்த மேனிக்கு மேடையில் நின்று வசனம் பேசும் பாஸ்ட், அப்படியே மெல்ல நடந்து பின்னால் போக, பக்கத்தில் சத்தம். திரும்பிப் பார்க்க, பைனாகுலர்கள் உயர்ந்திருந்தன.
888888888888888888888888888888888888888888888888888888888888888

மக்கார்த்தி ஐம்பதுகளில் அமெரிக்காவில் நடத்திய கம்யூனிஸ்ட் களையெடுப்பு பற்றிய ஜார்ஜ் க்ளூனியின் ‘குட்நைட் அண்ட் குட்லக்’, ருவாண்டா படுகொலை பற்றிய பிரிட்டீஷ் படமான ‘ஷூட்டிங் டாக்ஸ்’, பிலிப்ப் சைமோர் ஹாப்மெனுக்கு ஆஸ்கர் பரிசு வாங்கித்தந்த ‘கபோட்’ என்று பார்த்த சினிமாக்கள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. கட்டுரை நீண்டு போனதால், அதெல்லாம் அடுத்த இதழில்.

முடிக்கும் முன்னால், கார்டியன் பத்திரிகையில் பீட்டர் பிராட்ஷா இந்த வாரம் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட் 2’ படம் பற்றி எழுதியிருந்தது :

‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’ முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷரன் ஸ்டோன் கிட்டத்தட்டப் பத்து வருடம் கழித்து வரும் இந்த இரண்டாம் படத்திலும் கதாநாயகி. ஈ-மெயில் கம்ப்யூட்டர் கீ-போர்ட் ‘@’ பொத்தான் உபயோகத்தில் கொண்டு வந்த அதேயளவு மாபெரும் மாற்றத்தை, விடியோ ரிமோட்டின் ‘pause’ பொத்தானை அழுத்துவதில் ஏற்படுத்திய படம் முதல் பேசிக் இன்ஸ்டிங்க்ட்.".

அவர் குறிப்பிடும் காட்சி என்னவென்று புரிந்திருக்கலாம். அந்தப் படம் பார்க்கும்போது உங்களிடம் வீடியோ பிளேயர் இருந்ததா?

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது