Tuesday, October 04, 2005

வைதீஸ்வரன்


வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி ('வைதீஸ்வரன் கவிதைகள்' - கவிதா பதிப்பகம் வெளியீடு 2005) எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது.

நேசமான மனிதர். சந்திக்கப் போகும்போதெல்லாம் வாய் நிறையச் சிரிப்பும் அன்புமாக வாசலில் வந்து வரவேற்கிறார். எழுத்தோ, ஓவியமோ, படைப்புகளைப் பேச விட்டுத் தான் ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும் சாதனையாளர். மொழிபெயர்ப்பில் அவர் கவிதையைப் படித்து விட்டு அசாமிலிருந்தும், பீகாரிலிருந்தும் முகம் தெரியாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதும் கடிதங்கள் அவருடைய படைப்பு ஆளுமையை இனம் காட்டும். தேடிப்போய்ப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குப் புலப்படும் உன்னதம் அது.

இந்தப் பகிர்வுக்கு ஒரு தலைப்பு கொடுத்துவிட்டு மேலே போகலாம். 'இணையத்தில் வைதீஸ்வரன்'.

வைதீஸ்வரன் என்ற இந்த எழுபது வயது இளைஞரின் சுறுசுறுப்பு ஆகஸ்ட் தீராநதியில் வந்த லேடஸ்ட் கவிதையான 'பெட்டியின் மரண'த்தோடு நின்றுவிடவில்லை.

துண்டு பட்டு முடிந்து போன
தண்டவாளத்தோரம்
ரயில் நிலையம் தொலைத்த மூலையில்
அடிபட்ட மிருகமென
அனாதை ரயில் பெட்டி.

வைதீஸ்வரனின் இணைய முகம் கவிதையோடு, ஓவியம், நாடகம், சினிமா மற்றும் நினைவலைகள் என்று பன்முகப் பரிமாணம் கொண்டது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

இணையத்தில் நாங்கள் 'ராயர் காப்பி கிளப்' (ரா.கா.கி) என்ற ஒரு கலை - இலக்கிய நண்பர்கள் குழு வைத்திருக்கிறோம். வைதீஸ்வரன் கிளப்பில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது வழக்கம்.

பத்து நாள் முன், நாங்கள் சென்னைக்கு முன்னூற்று அறுபதாவது ஆண்டு நிறைவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது வைதீஸ்வரன் தான் அறுபத்திரெண்டு வருடம் முன் சென்னையில் குடிபுகுந்ததை இப்படிச் சொன்னார் -
----------------------------------------------
நாம் முதன் முதலில் சென்னைக்கு வந்த வருஷம் 1943.எனக்கு எட்டு வயது திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ரத்னா கபேயக்கு' அருகில் ஒரு நீளமான வீட்டில் ஒண்டுக் குடித்தனம் இருந்த என் அத்தையின் வீட்டில் தாமசம்.அத்தையின் மகன் மகான் 'கலைமகள்'' பத்திரிகையில் ஓவியராக இருந்தார்.

அப்போது ரத்னாகபே இருக்கவில்லை..சென்னைத் தெருக்களின் காலை மணம் இன்னும் என் மூக்கில் சுழன்று கொண்டிருக்கிறது, பசு மூத்திரம் கலந்த சாண வாசனையுடன் வீட்டோரமாக ஓடும் கழிவு நீர் சாக்கடையின் சூடான சௌகந்தமும் பக்கத்திலிருந்த 'பாய்' கடையின் அத்தர் சந்தன பத்தியின் புகை மணமும் தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் எனக்கு இனமறியாத இன்பக் கலவையாக கிறுகிறுப்பாக இருக்கும். தெருக்களில் தெலுங்கு தமிழ் கலந்த செப்பு மொழியும். கை ரிக்ஷா குப்புசாமியின் 'கய்தே..கஸ்மால.விளிப்புகளும் அழுக்குப் பாவாடையும் அதட்டுகிற மார்களுமாக ஆங்கிலோ இந்திய சகோதரிகளின் 'இன்னா மேன் .ஒன் வீக்கா ஹவுஸ் பக்கம் வர்ரதில்லே..சில்ட்ரென் ஒட்ம்பு கிட்ம்பு சீக்கா?' போன்ற கருப்பும் வெள்ளையும் கலந்த ஆதங்க வார்த்தைகளும் காய்கறி தயிர்க்காரிகளின் வினோதமான [கே]கூவல்களும்.சென்னைத் தெருக்களின் அற்புதமான பழைய அடையாளங்கள்.

லூர்து துரைசாமி..ஸ்டீபன் தங்கவேல் அலெக்ஸ் ஆரோக்கியசாமி இப்படிபட்ட புதிய கலாசார நாமங்களும் சென்னை வாசிகளின் காதுகளில் நூதனமாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டம்.

சென்னை அழுக்காக இருந்தாலும் காற்றோட்டமாக விஸ்தாரமாக இருந்தது. கடற்கரையில் நல்ல காற்று வீசியது. எப்போதாவது கடந்து போகும் Austin Morris Vauxhal -கார்கள் மௌண்ட் ரோடை நின்று ரஸிக்கத் தகுந்த நாகரீகத்துடன் அலங்காரம் செய்தது.

எந்த விஷயத்தையுமே அப்போது நன்றாக இருந்தது போல் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. எப்போதும் எந்த மாற்றத்துக்கும் பொறுப்பாளிகள் நாம் தான் என்பது அடிக்கடி நமக்கு மறந்து விடுகிறது.
--------------------------------

> இக்கட்டு
> ------------
>> நாகரீகம் வளர்ந்ததினால்
> தாத்தா வைத்த குடுமியை
> நறுக்கி யெறிந்தேன்
> நாசூக்காக அன்று.
என்று தொடங்கும் கவிதை - இதையும் இணையத்தில் பகிர்ந்துகொண்டார் இந்தச் சொற்சித்திரத்தோடு ஒத்துப்போகிறதா எனத் தெரியவில்லை.

வைதீஸ்வரன் மறைந்த அற்புதமான நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். வைதீஸ்வரனும் சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களான 'வடிவேலு வாத்தியார்', 'பாஞ்சாலி சபதம்', 'நாலுவேலி நிலம்' நாடகங்களில் நடித்திருக்கிறார். மறைந்த முத்துராமன், வீராச்சாமி, வாத்தியார் ராமன் ஆகியோர் பிற சேவா ஸ்டேஜ் கலைஞர்கள்.

சேவா ஸ்டேஜ் நடிகர்கள் அதிகம் பங்கு பெற்ற ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வைதீஸ்வரன் சினிமா பிரவேசம் என்று நினைவு. தேவிகா கதாநாயகியான அப்படத்தில், தேவிகா கனவு காணும் காட்சியில் மன்மதனாக வருவது கவிஞர்தான்!

சினிமா பற்றி நடிகர் வைதீஸ்வரன் ரா.கா.கியில் சொன்னது இது -
''நாலு வேலி நிலத்தில் ' நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்."

கவிதைகளோடு தாம் வரைந்த ஓவியங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார் ஓவியர் வைதீஸ்வரன். அதில் ஒரு ஓவியம் 'Abnormal Study' என்று ஓவியரால் தலைப்பிடப் பட்டது. இரவில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவன். கண்கள் கிட்டத்தட்ட மூடியே உள்ளன. படிப்பில் முழுக் கவனமோ அல்லது படித்துக் களைத்து உறக்கத்துக்கு முந்திய, நினைவுகள் வழுக்கும் வினாடியோ.. தலைக்குப் பின்னால் கடியாரம் இரவு ஒரு மணி என்று நேரம் சொல்கிறது. அறையில் விளக்கு அது சாதாரணமாக இருக்கும் இடத்தை விட நன்றாகக் கீழே இறங்கிச் சிறுவனுக்கு மிக அருகே பிரகாசமாக ஒளி விடுகிறது. அதன் ஒளிவீச்சு கண்ணைக் கூச வைத்ததாலோ, படிப்பில் ஆழ்ந்ததாலோ ஒரு கையைக் கண்ணுக்கு அருகில் வைத்தபடி அவன் படித்துக்கொண்டிருக்கிறான். ஜன்னல் வழியே அமைதியாகக் கசியும் இரவு.

ஓவியம் உணர்த்தும் அதீதம் (abnormality) நிகழ்ச்சியில் (ஓவியமாக்கப் பட்ட காட்சி) இருப்பதாகவே நான் கருதுகிறேன். சிறுவன் abnormal ஆனவன் என்று சூசனைகள் உண்டு. ஓவியத்தில் பயம், அயர்வு, துயரம் போன்றவற்றைக் குறிக்கும் வண்ணங்கள் இடம் பெறாது மெல்லிய குளிர்ச்சியான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் நிறங்களே காணப்படுகின்றன. கரிசனத்தையும் நம்பிக்கையையும் தூரிகை வெளிப்படுத்துகிறது. வைத்தீஸ்வரனின் இந்தக் கவிதை போல் :

பொறுத்திரு
----------
நடுசாமப் படுக்கையில்
சற்றே விழித்து
உற்றுக் கேள் -

முடிவற்ற மௌனக் கிணற்றுள்
தவறவிட்ட ஒலிக்கல்லாய்,
எங்கோ ஒரு தனிக்காரின்
ஓலம் நிச்சயம் காதில் விழும்.

அல்லது ஜன்னலை விரித்து வைத்து
எதிரே இருட்டு வலைக்குள்
கவலையற்றுத் தூங்கும்
ஒரு மலையைக் கவனி.

அங்கு உருட்டிவிட்ட சிறுவிளக்காய்,
வலைப்பட்ட மின்மினியாய்
ஒரு பஸ், ஆடி வளைந்து
இருளைக் கிறுக்கு இறங்குவது
கண்ணில் பட்டே தீரும்.
பொறுத்திரு.

அவருடைய கவிதை அவர் வரையும் ஓவியத்தின் நீட்சியாகவும், ஓவியம் கவிதையின் நீட்சியாகவும் பரிணாமம் கொள்ளுவதைப் பல சந்தர்ப்பங்களில் கவனித்து வியந்திருக்கிறோம்.

நமக்கு ஒரு தொடர்ச்சியான ஓவிய மரபு இல்லை' என்பது இங்கே சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி. அந்த மரபுத் தொடர்ச்சி இல்லாத காரணத்தால், ஓவியமொழி என்ற ஒன்றை நாம் இதுவரை இங்கே அனுமதிக்கவில்லை. கவிதை மொழி போல், கதை மொழி போல், ஓவியனைத் தன்போக்கில் சிந்திக்க விடும் சுதந்திரத்தை நாம் தருவதில்லை.

ஓவியம் 'தத்ரூபமாக' அதாவது இருக்கிற ஒன்றின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கவேண்டும் என்று ஓவியனின் மனதையும், சிந்தனையும் கட்டிப் போட்டு, அவன் கைகளுக்கு மட்டும் இயங்க அனுமதி கொடுப்பதின் மூலம் நாம் ஓவியம் மூலம் நம்மால் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிந்தனை வெளியையே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

ஒரு கவிஞனின், கதைஞனின் மொழியோடு, எழுத்து-ஒலி வடிவ மொழி கடந்து, வரிகளுக்கு நடுவே ஊடாடி வரும் மௌனத்தின் மூலம் அவன் பேசுவதோடு நம்மால் ஒத்திசைய முடிகிறது. அந்த ஒத்திசைவை ஓவியத்துடன் நாம் மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கான கா¡ரணங்களை நம் மரபணுக்களில் தேடவேண்டி இருக்கலாம்.

வியத்னாமை அமெரிக்க வல்லரசு ஆக்கிரமித்தபோது, மைலாய் கிராமத்தில் பொழிந்த குண்டுமழையில் ஒரு கிராமமே நிர்மூலமானது. இந்தச் சோகத்தைச் சொல்லும் கவிஞர் வைதீஸ்வரனின் 'மைலாய் வீதி'யின் கவிதைமொழி நமக்குப் புரிகிறது.

வெளியில் பல கிளிகள்
மிதிபட்டுக் கிடக்குதங்கே!
குப்பைத் தொட்டியில்
குழந்தைத் தலைகளும் ..
மலத்தொடு பிணங்கள்
கலந்து நாறும் கோரங்கள்.
பச்சை வயல்களெங்கும்
செங்குருதி பாயக் கண்டேன்.

நம்பிக்கையோடு
அறுவடைக்குப் போன மக்கள்
அறுபட்டு, உயிரற்று ஊதிப்போய்,
வயற்காட்டுப் பொம்மைகளாய்
வழியெங்கும் நிற்கக் கண்டேன்,

இன்றைக்குப் படித்தாலும் நான் பார்க்காத வியத்னாமியக் கிராமத்தில் நாற்பது வருடம் முன்னால் அரங்கேறிய ஓர் அவலத்தை வைதீஸ்வரனின் கவிதைமொழி நமக்கு நிகழ்கால அனுபவமாக்கித் தருகிறது. இந்தத் தொடர்ந்த அனுபவப் பகிர்வு நம்மில் மிச்சமிருக்கும் காருண்யத்தை, மனித நேயத்தை, மன ஈரத்தை வரண்டு போக விடாமல் செய்து கொண்டே இருக்கும். கவிதைமொழியில் இல்லாமல் ஓவியமொழியில் வைதீஸ்வரன் இதைச் சொல்லியிருந்தாலும் இதே பாதிப்பு நமக்குக் கிடைத்திருக்கும்.

வைதீஸ்வரன் வேறு விதமான கவிதைகளும் எங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் சொல்வது - சினிமாக் காதல் காதை துளைப்பதால் சில நல்ல எதிர்வினைகளும் எனக்கு ஏற்படுகின்றன..காதல் இப்படித்தான் நுண்மையாக சொல்லப் பட வேண்டுமென்று எனக்கு தோன்றிய இலக்கணம்....

காதலனின் கானல் வரிகள்
------------------------
உன்னுடைய வாசலுக்காக
மல்லிகை வளர்த்தேன்.
பூ விரிந்து மணந்த போது
நீ விலாசத்தை மாற்றிக் கொண்டாய்!!

இப்படி எட்டுச் சிறு கவிதைகளை, முகத்தில் முறுவல் வரவழைக்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் வைதீஸ்வரன் வயதில் ஐம்பதைத் தாராளமாகக் கழித்து விடலாம்.
வேறு எங்கும் பிரசுரிக்கப்படாத இன்னொரு கவிதை இதோ. பாட்டுடைத் தலைவன் நான் தான். திநகரில் வீடு மாறியபோது, விலாசம் கேட்டார் வைதீஸ்வரன். சொன்னேன். அந்தத் தெருவா என்று மென்மையாகச் சிரித்தார். அடுத்த நாள் ஈமெயிலில் வந்த கவிதை இப்படி -

பகவந்தம் தெரு ---பலவந்தமற்ற நினைவுகள்...
---------------------------------------
திருப்பதி வாசனைக்கு
மரியாதையான உயரத்தில்
பகவந்தம் முருகன் -----

தெருமருங்கில் .......
பான் பராக் தோரணத்துக்குள்
பதுங்கி விற்கும் பையன் முகங்கள்.
உண்டியலை திறந்து வைத்து
உதவியற்று நிற்கும் குட்டைக் கோயில்
துவார பாலகர்கள்

நாலடிக்கு ஒரு நாயாகத்
தூங்கும் நடை பாதைகள்
''வருவண்டி...வருவண்டீ ''யென்று
வாசலில் புடைத்து நிற்கும்
கன்னிக் கலர் குடங்கள்...

மறைந்த எழுத்தாளர் காசியபன் பற்றிச் சொன்னார் இப்படி -

எழுத்தின் மூலம் புகழும் பொருளும் கிடைப்பது ஒரு விபத்து தான்..சில சமயம் ஆபத்தானதும் கூட.. பரிசுகளுக்குப் பின் சுத்தமாக வறண்டு போய்விடுகிறார்கள் சில எழுத்தாளர்கள்.. ஒத்த மனமுள்ள சக மனிதர்களோடு உறவும்,சிந்தனைப் பரிமாற்றமும் வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக்குகிறது..இது தான் எழுத்தாளர்கள் காணும் நிதர்சனமான பலன். அசடு`` புத்தகத்துக்கு முகப்பு அட்டைக்கு என் ஓவியம் பயன் படுத்தப் பட்டுள்ளது, நாவலுக்கும் ஓவியத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும், ஓவியம் நன்றாக இருப்பதாக பாராட்டினார், மதிப்புக்குரிய காஸ்யபன் ...

காசியபன் பற்றிய ஒரு வாழ்க்கை சார்ந்த முரண்நகையை இயல்பாகச் சொல்கிறார் வைதீஸ்வரன் -

அவரும் ,துணைவியாரும் டாக்சியில் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது வழியில் ஒரு வண்டியுடன் மோதி விபத்து நேர்ந்து விட்டது..பெரிய காயம் படவில்லை..பிறகு மேலும் சௌகரியமாக ஆஸ்பத்திரிக்கு போக முடிந்தது..அவர்கள் மோதிய வண்டி ஆம்புலன்ஸ்!!

கவிஞர் வைதீஸ்வரனை ராயர் காப்பி கிளப்புக்காகச் சந்தித்து உரையாடினேன். அப்போது கேட்டேன். -

கேள்வி: ஒரு கவிதை பெறும் வெற்றி எதை வைத்துக் கணிக்கப் படும்?

பதில்: நிலைத்ததற்கும், மாறிக் கொண்டே இருப்பதற்கும் நடுவே நிகழும் ஊடாட்டத்தை இயல்பாகச் சொல்வதில் கவிதையின் வெற்றி இருக்கிறது. நல்ல படைப்பு, நல்ல கவிதை என்பது ஒரு சின்ன ஒளிச்சிதறல். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தைப் பாதிப்பதாக, மறுபரிசீலனை செய்ய வைப்பதாக வெளிப்படும் சிந்தனைக் கீற்று. அந்த வெளிச்சத்தில் நேசம் மலரும். உறவுகள் மேம்படும்.

கேள்வி: உங்கள் கவிதைகளை நீங்களே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பில், மூலக் கவிதை எழுதிய திருப்தி கிடைக்கிறதா? வேறு யாரும் மொழி பெயர்த்தால் கவிதையின் புரிதல் அல்லது மொழி தொடர்பாக மூலக்கவிதையிலிருந்து விலகல் அனுபவப்படுமா?

பதில்: நானே என் கவிதையை மொழிபெயர்த்திருக்கிறேன். மூலக் கவிதை தருவதற்கு நிகரான அனுபவம் மொழிபெயர்ப்பில் கிடைப்பது கடினம் தான். ஆனால் இது வசப்படும் காரியம் தான்.

உதாரணமாக, 'தீர்ப்பு' என்ற என் கவிதை - அசோகமித்திரன் மொழிபெயர்ப்பில் இப்படித் தொடங்கி முடியும் :('The fragrance of rain' - an anthalogy of poems by S.Vaidheeswaran - a Writers Workshop publication)

It didn't bite you,
Then why did you kill it?

Maybe killing an ant
is the easiest thing in the world.
Should you kill it
just because it is so?

இதன் தமிழ் மூலம்.

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

(நான்-இரா.முருகன் கருதுவது - வைதீஸ்வரனின் கவிதை வெற்றிக்கு சட்டென்று முகத்தில் அறைந்து இதயத்தைக் கவ்விப்பிடிக்கும் இந்த universal metaphor அடித்தளம். அந்தக் கவிதை மொழிபெயர்ப்பிலும் அதே வெற்றி பெற வைதீஸ்வரனை, அவர் கவிதைகளை அவற்றின் தொனி வ்¢சேஷங்களுடனும், வெளிப்படுத்தும் நுண் உணர்வுகளோடும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் நண்பரும், அதே தன்மைகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறவருமான அசோகமித்திரன் என்ற படைப்பாளி தேவை. இந்த ஒத்திசைவு (resonance) அமைவது அபூர்வம்.)

கேள்வி; தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற ஒரே மொழிக்குடும்பத்திற்குள் செய்யப்படும் மொழி பெயர்ப்புகளுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், ஜர்மன் போன்ற பிற கலாச்சாரங்களைச் சார்ந்த மொழிகளுக்குச் செய்யப்படும். மொழிபெயர்ப்புக்களுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டா? நம் கலாச்சார, மொழி, இனம் சம்பந்தமான idiom, சொல்லாடல், படிமங்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் அப்படியே பெயர்த்து அளிப்பது சாத்தியமா?

பதில்: வேறுபட்ட கலாச்சாரங்களிடையே இலக்கியப் படைப்புகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது மொழிபெயர்ப்பை விட மொழியாக்கம் எழுத்தை அதன் தீவிரத்துடன் கொண்டு சேர்க்க உதவும். When culturally variant, transcreation is a possibility. ஒத்த கலாச்சாரங்களிடையே மொழிபெயர்ப்பு அதன் இயல்பான தாக்கத்தோடு சுலபமாக வாசகனை அடைய வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் ஒன்று, மொழிபெயர்ப்பில் வாசகனுக்கும் பங்கு இருக்கிறது. 'இடியாப்பம்' வேறு மொழியிலும் இடியாப்பமாகவே போகட்டுமே. அதை pancake என்று மொழி மாற்றிப் புரியவைப்பதை விட அன்னிய மொழி வாசகனுக்கு இடியாப்பத்தை, அதன் சுவையை முதல் முதலாக அறிமுகப் படுத்தி வைக்கும் காரியம் கௌரவக் குறைச்சலானதா என்ன?

கேள்வி: கவிதை பிரசுரமாகும்போது அதில் ஏதாவது வரியோ, சொல்லோ, எழுத்தோ மாறி இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? போர் பற்றிய உங்கள் கவிதையில் 'காகித சேதியாய்த் திரும்பி வருவான்' என்று நீங்கள் எழுதியதைக் கணையாழி 'காகித சோதியாய்த் திரும்பி வருவான்' என்று பிரசுரித்ததும், அப்போது கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த திரு.அசோகமித்திரன், "காகித சோதி என்பதும் பொருத்தமாகத் தான் இருக்கிறது" என்று சமாளிப்பாகக் கூறியதும் எனக்கு நினைவு வருகிறது.

பதில்: மிகுந்த சோகம். அதுவும் இந்தப் பிழையோடு கவிதை பாராட்டப் படும்போது!

கேள்வி: புதுக்கவிதையில் காவியம் எழுவது சாத்தியமா?

பதில்: இதுவரை சாதிக்காததால் அதைச் சாதிக்க முடியாமா என்ற கேள்வி எழுகிறது. சி.மணியின் 'நரகம்', 'பச்சயம்', 'வரும் போகும்' போன்றவை காவியத்தின் ஆழக்கல்லை நாட்டிய முயற்சிகள். இப்போது நமக்குச் சோம்பல். கவிதைக் கருவை ஆழமாக அகலமாகப் படரவிட மனப்பங்கில்லை.

எதிர்காலத் தமிழ்க் கவிதை எப்படி இருக்கும்? என்பது என் கடைசிக் கேள்வி.

"கவிதையில் வாசகத் தன்மை எப்படி வளர்கிறதோ, அதே போல் கவிதை வளரும். கானாக் கவிதையும் இலக்கியமாகலாம்."

இந்த நம்பிக்கைதான் வைதீஸ்வரன்.


(அக்டோபர் 2, 2005 ஞாயிறு மாலை சென்னையில் கவிஞர் வைதீஸ்வரனின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. கூட்டத்தில் நான் ஆற்றிய உரை).

Monday, October 03, 2005

அரண்மனை பன் சிங்கிள் டீ


கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாயை எப்படிச் செலவழிப்பது? அதுவும் ஒரே வருடத்தில். வெரி சிம்பிள். தின்றே தீர்த்து விடலாம். விருந்து கொடுத்தால் போதும். காட்டு யானை, மலை யானை, முதுகில் பாகன் உட்கார்ந்து செலுத்த பனகல் பார்க் பக்கம் யாசகம் கேட்டுத் தும்பிக்கை நீட்டுகிற டவுன் யானை இப்படி வெயிட்டான பார்ட்டிகளை வரவழைத்து தினசரி அல்வா வாங்கிக் கொடுத்தாலும் ஒரு வருடத்தில் நாலு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கைக் காட்ட முடியாது என்கிறீர்களா?. யானையெல்லாம் எதுக்கு சார், சாதா மனிதர்களே போதும். பன்னும் டீயும் கொடுத்து அனுப்பினால் மொத்தச் செலவு மேலே கண்ட தொகை. விருந்து வைத்த வகையில் இப்படிச் செலவானதாகக் கணக்குச் சொல்லியிருப்பது பிரிட்டிஷ் அரசி எலிசபத் அம்மையார் வசிக்கும் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் நிர்வாக அலுவலகம்.

தோட்ட விருந்து என்று ஒரு சமாச்சாரம் உண்டு. கிட்டத்தட்ட இருநூறு வருஷமாக இங்கிலாந்து ராஜகுடும்பம் கடைப்பிடிக்கிற சடங்கு. வருடத்துக்கு நாலைந்து முறை நாட்டு மக்களை, அதிலும் முக்கியமானவர்களை, ‘நம்ம வீட்டுலே ஸ்பெஷல் விருந்து. ஒரு நடை வந்துட்டுப் போங்க' என்று கூப்பிட்டு அனுப்புவார்கள். இப்படியான விருந்தினர்கள் ஒரு யிரம் பேராவது, ‘ராஜா, ராணியோடு உட்கார்ந்து சாப்பிடலாம்' என்ற பெருமைக்காகக் கட்டாயம் ஆஜராகி விடுவார்கள். இங்கிலாந்தின் எல்லா கவுண்டிகளிலும் (கிட்டத்தட்ட நம்ம மாவட்டம் மாதிரி) மற்றும் தலைநகர் லண்டனிலிருந்தும் அழைக்கப்பட்டவர்கள் இந்த விருந்தாளிகள்.

இவர்கள் பொறுமையாகக் கியூவில் நின்று அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்தால், நாலு பன், ரெண்டு கேக், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் நாயர் கடையில் அவசரத்தில் போட்ட டீ மாதிரி ஒரு திரவ பதார்த்தம். அம்புட்டுத்தான். பன்னை டீயில் நனைத்து சாப்பிட்டுவிட்டுத் தூரத்திலே ராணியம்மா நின்று கொண்டிருப்பதை இருந்த இடத்தில் இருந்தே தரிசித்துப் பின்வாசல் வழியாக வெளியேறுவதோடு அரண்மனை விருந்து நிறைவடையும்.

ஆயிரத்தில் பத்து அல்லது இருபது விருந்தாளிக்கு அதிர்ஷ்டம் இருக்கும். ராணியம்மா ஒரு வினாடி இந்த அதிர்ஷ்டக்காரர்கள் பக்கத்திலே வந்து, புகைப்படக்காரர் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொண்டு காலே அரைக்கால் செண்டிமீட்டர் புன்னகை பூப்பார். கூடவே ‘நல்லா இருக்கீங்களா, வீட்டுலே, ஊர்லே சவுக்கியம் எல்லாம் எப்படி' என்று சம்பிரதாயமாகக் கேட்பார். கேள்வி யாரைப் பார்த்துக் கேட்கப்பட்டதோ அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பதில் சொல்ல வாயைத் திறக்கக்கூடாது. வேண்டுமானால் சும்மா பக்கத்தில் நிற்கலாம். அது மட்டுமில்லை, ராணிதான் கேள்வி கேட்க வேண்டும். அவரிடம் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்புறம் முக்கியமாக இன்னொன்று, அரசியாருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு விருந்தாளிகள் யாரும் நிற்கக்கூடாது.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு இடையே, ‘நலந்தானா' கேள்விக்குத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு வீட்டு நாய், பூனை, மாமியார் சவுக்கியத்தில் தொடங்கி எட்டுக்களை சவுக்கம் பல்லவி ராகமாலிகையாக விலாவாரி பதில் சொல்வதற்குள், அரசியார் நகர்ந்துபோய் அடுத்த போட்டோவுக்குப் புதுசாகச் சிரிக்க ஆரம்பித்திருப்பார்.

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை, பக்கத்து பிக்காடல்லி கடைவீதியிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கவில்லை என்பதை சாமானியர்களுக்கு நிரூபிக்க நடத்தப்படும் இந்தச் சடங்கு கிட்டத்தட்ட ஒரு அன்னதானம் மாதிரி. இப்படித் தோட்ட விருந்து நடத்தி, மக்களோடு தங்கள் அந்நியோன்யத்தை அரச குடும்பம் வெளிப்படுத்த நாலு கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகப் போன வருஷக் கணக்கிலிருந்து தெரியவருகிறது.

டீக்கும் பன்னுக்கும் இவ்வளவு செலவு பிடிக்குமா? ராணியம்மா அடுத்த தேர்தலில் நிற்கிறதாக ஏதும் ஐடியா இருக்கிறதா? அப்படி என்றால், பன்னில் நைசாக மறைத்து வைத்த தங்க மோதிரமும், டீக்குள் விரலை விட்டால் விஸ்கியும் ரம்முமாகக் கொடுத்து விருந்துக்குக் கூப்பிட்டு, எட்டுக் கவுண்டி ஓட்டர்களை விலைக்கு வாங்குகிற உத்தேசமா என்று விசாரித்தால் கிடைக்கிற பதில் விசேஷமானது.

‘விருந்துக்கு நாலு கோடி ரூபாயும் ஆகும். அதுக்கு மேலேயும் ஆகும். சாப்பிட வந்தவங்க எல்லாம் சாமானியப்பட்டவங்களா என்ன? அதாவது சாப்பிடற விஷயத்துலே. ஒருத்தொருத்தரும் பதினாலு பன் சாப்பிட்டு அரை லிட்டர் டீ குடிக்கறாங்க. ஏழெட்டு கேக் வேறே கூடவே. அவங்களே கொட்டிக்கறாங்களோ இல்லே நியூஸ்பேப்பர்லே பார்சல் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போறாங்களோ?'

விருந்து செலவுக் கணக்குக்குத் தோராயமாக இப்படி விளக்க உரை அளித்து அரண்மனை நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் சாப்பிட்ட, குடித்த கணக்கை கனகச்சிதமாக எண்ணி எண்ணி நினைவு வைத்துச் சொல்கிற அவர்களின் ஞாபக சக்தியும், மேற்படி அசுரப்பசி விருந்தாளிகளின் ஜீரண சக்தியும் ஆஹா என்று பாராட்ட வைக்கிறது.

இதையெல்லாம் பிரிட்டீஷ் பத்திரிகைகள் பொதுவாகக் கண்டுகொள்வதில்லை. தோட்ட விருந்து நிகழ்ச்சிக்காக சம்பிரதாயமாக நாலாவது பக்கத்து ஈசானிய மூலையில் நாலு வரி ஒதுக்கும் பத்திரிகைகள், அதைப் பற்றி முதல் பக்கம் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டது இரண்டு வருடம் முன்னால் நடந்தது. அப்போது நடைபெற்ற விருந்தில் அரச தம்பதியரும் மற்ற விருந்தாளிகளும் பார்த்துக் கொண்டிருக்க, விருந்துக்கு அழைக்கப்பட்ட ஓர் இளைஞன் உடுதுணி எல்லாம் நொடியில் அவிழ்த்துப் போட்டுப் படுகுஷியாகத் தோட்டத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தான். அரண்மனைப் பாதுகாப்பு வீரர்கள் வேறு என்னத்துக்கு இருக்கிறார்கள்? "விடாதே பிடி. கோழி அமுக்குகிற மாதிரி அமுக்கி, வெளியே கொண்டு போய் விடு'. விருந்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கிடைக்க ஒத்தாசை செய்த அந்த திகம்பர இளைஞனை பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் உள்ளூற வாழ்த்தியிருக்கும்.

இதற்குச் சில வருஷம் முன்னால் தோட்ட விருந்தில் வயதான ஒரு சீமாட்டி கையில் குடையோடு ஒரு ஓரமாகப் பெஞ்சில் சாதுவாக உட்கார்ந்து பன்னைப் பிய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எப்படியோ அதை மோப்பம் பிடித்து, அழையா விருந்தாளியாக வானத்திலிருந்து ஒரு மின்னல் புறப்பட்டுப் பாட்டியம்மா குடைக்காம்பில் இறங்கி .. குடை எரிந்து போனது தவிர வேறே பொருட்சேதமில்லை. அடுத்த வருடம் குடைகளும், மரபெஞ்சுகளும், மின்னலும் விருந்திலிருந்து மிஸ்ஸிங்.

இந்தப் பந்தி போஜனம்தான் பேக்கரியில் மொத்தவிலைக்கு பன்னும் ரொட்டியும் வாங்கி வந்து நடக்கும்போல இருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் யாராவது வந்தால் அருமை அருமையாகச் சமைத்துப்போட அரண்மனையில் சமையல்காரர்கள் படைபட்டாளமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் பரிச்சயமான பாலக்காட்டு சமையல் நிபுணர் ஒருத்தர் சொன்னார்.

ஒரு தடவை இந்தியாவிலிருந்து போன பிரபல அரசியல் தலைவருக்கு அப்பளம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு, இங்கேயிருந்து அப்பளத்தை இறக்குமதி செய்தார்களாம். அப்பளக் கட்டில் ஒரு அப்பளத்துக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் மெல்லிசாக இலை நறுக்கை வைத்து அனுப்பியிருந்த பார்சலோடு, ‘எண்ணெயில் பொறிக்கவும்' என்று ஒற்றை வரி செயல்முறை விளக்கம். ‘சும்மா ஜிகிடி வேலையாக' ஒவ்வொரு இலை நறுக்குக்கும் மேலும் கீழும் வைத்துக் கட்டியிருந்த ‘வட்ட வட்ட மாவு வளையத்தை' எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, நடுவிலிருந்த இலையை வெகு கவனமாக எடுத்துப் பொறித்ததாகக் கேள்வி! இந்தக் தப்புக் கணக்கில் எத்தனை லட்சம் எண்ணெயோடு போனது என்று தெரியவில்லை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - செப்டம்பர் 25 2005

Saturday, October 01, 2005

கனவுகளே


ஏஷியாநெட் 'நாதமாதுரி'யில் கைதப்ரம் தாமோதரன் நம்பூத்ரியோடு, பி.லீலாவும் வந்து இன்றைய காலை நேரத்தை இனிமையாக்கினார்.

கர்னாடக சங்கீதக் கலைஞரான லீலா எத்தனை எத்தனையோ தமிழ், மலையாளத் திரைப் பாடல்களைப்
பாடியவர். பாகப்பிரிவினை படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' என்று வரும் சுகமான நாட்டுப்பாடல் இவர் பாடியது தான்.

நாராயணியத்தை, முக்கியமாக அதில் வரும் பாதாதிகேசம் பகுதியை இவர் பாடிய ஒலிப்பேழையைக் கேட்டால், அதிகாலையில் குளித்தொருங்கி, குருவாயூர் அம்பலத்தில் நிர்மால்ய தரிசனம் தொழப் போவது போல் புனிதமான சிந்தனைகள் மனதில் வரும்.

நாதமாதுரியில் லீலா பாடிய பழைய பாடல், 'கான மேளா' படத்தில் இடம் பெற்றது. பி.தட்சிணாமூர்த்தி இசையமைத்தது.

இருபது ஆண்டுகள் முன்னால் வரை கர்னாடக சங்கீதம் மலையாளத் திரைப்படங்களின் அடிநாதமாக ஒலிக்க இந்த இசையறிஞர் தான் காரணம். சுவாமி என்று மரியாதையோடும் அன்போடும் திரைப்படத்துறையினரால் விளிக்கப்படுகிறவர் தட்சிணாமூர்த்தி

ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாவலின் அடிப்படையில் தமிழில் மிடில் ·ஓப் தி ரோட் சினிமாவாக வந்த 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படத்தில் இடம் பெற்ற 'நல்ல மனம் வாழ்க', மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடிய இனிய பாடல்கள் இவர் இசையமைத்தவை தாம்.

கானமேளா படத்தில் தட்சிணாமூர்த்தி இசையமைத்த வயலாரின் அழகான கவிதை 'ஸ்வப்ங்கள், ஸ்வப்னங்களே'.
சஹானா ராகத்தில் இசை வெள்ளமாக எழுந்து பரவும் இப்பாடலை ஏசுதாசும் லீலாவும் பாடிய இசைத்தட்டைக் கேட்டுப் பலகாலம் ஆனாலும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது அது.

ஸ்வப்னங்கள் ஸ்வப்னங்களே நிங்ஙள்
ஸ்வர்க்க குமாரிகள் அல்லோ.
நிங்ஙள் ஈ பூமியில் இல்லாயிதிருந்நெங்ஙில்
நிச்சலம் சூன்யம் ஈ லோகம்.
தெய்வங்கள் இல்லா மனுஷ்யர் இல்லா - பின்னெ
ஜீவித சைதன்யம் இல்லா.
சௌந்தர்ய சங்கல்ப்ப சிற்பங்கள் இல்லா
சவுகந்திகப் பூக்கள் இல்லா.

இந்த்ர நீலம் கொண்டு வானத்துத் தீர்த்தொரு
கந்தர்வ ராஜாங்கணத்தில்
சந்த்ரிக பொன் தாழிகக் குடம் சார்த்துன்ன
கந்தர்வ ராஜாங்கணத்தில்
அப்சர கன்யகள் பெற்று வளர்த்துன்ன
சித்ர சலபங்கள் நிங்ஙள்.
ஸ்வர்க்கத்தில் நின்னும் விருந்நு வராருள்ள
சித்ர சலபங்கள் நிங்ஙள்.

ஞானறியேதென்ரெ மானச ஜாலக
வாதில் துறக்குன்னு நிங்ஙள்.
சிற்பிகள் தீர்த்த சுமருகள் இல்லாதெ
சித்ரம் வரைக்குன்னு நிங்ஙள்.
ஏழெல் எழுநூறு வர்ணங்கள் எத்ர
வார்மழ வில்லுகள் தீர்த்து
கண்ணு நீர் சாலிட்டு எழுதுன்னு பாக்யமோர்
ஸ்வர்ண விதானங்கள் நிங்ஙள்.

வயலாரின் பாடல் மொழிபெயர்ப்பில் -

கனவுகளே, கனவுகளே நீங்கள்
சுவர்க்க குமாரிகள் அன்றோ?
நீங்கள் இப்பூமியில் இல்லாதுபோனாலோ
நிச்சயம் உலகம் சூன்யமாயிருக்கும்.
தெய்வங்கள் இருக்காது. மனிதர் இருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையின் துடிப்பு இருக்காது.
அழகு சமைந்த சிற்பங்கள் இருக்காது.
மணமுள்ள பூக்களும் தான்.

கரு நீல வானத்தில் பொன் கோபுரங்களை
நிலவு எழுப்பும் கந்தர்வ நாட்டில்
தேவ கன்னிகள் பெற்று வளர்க்கும்
வண்ணத்துப் பூச்சிகள் நீங்கள்.
சுவர்க்கத்தில் இருந்து விருந்துக்கு வந்த
வண்ணத்துப் பூச்சிகள் நீங்கள்.

நான் அறியாது என் மனதின் சாளர
வாயில் திறப்பவர்கள் நீங்கள்.
சிற்பிகள் எழுப்பிய சுவர்கள் இல்லாமல்
ஓவியம் தீட்டுகிறவர்கள் நீங்கள்.
ஏழு எழுநூறு வண்ணங்களால் எத்தனையோ
வானவில்லுகள் எழுப்பிக்
கண்ணீர் வழிந்தோடி எழுதும்
பொன் விதானங்கள் நீங்கள்.


பாடலை இங்கே கேட்கலாம்.



(ஏப்ரல் 2002)

நெப்போலியனை வரைதல்

மகா உக்கிரமான ஒரு போர் நடக்கப் போகிறது.

மிடுக்கான தலைக் கவசமும், கையில் ஏந்திப் பிடித்த வாளும், கேடயமும் கழுத்தில் அலட்சியமாகச் சுற்றிய சால்வையும் மட்டும் அணிந்த வீரர்கள். சிலர் குதிரையேறி விரைந்து வருகிறார்கள். பின்னணியில் கோட்டை கொத்தளம் புழுதியில் மங்கலாகத் தெரிகிறது.

அடுத்த நிமிடம் இந்த இரண்டு படைகளில் ஒன்று வெல்லும். வென்றவர்களின் ஆரவாரம் காற்றில் கலந்துமேலேறி வெளியெங்கும் கலக்க, தோற்றவர்களின் ரத்தத்தால் ஈரமான நிலம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். உயிர் மூச்சு மெல்ல அடங்க அவர்களின் உடல்கள் சரிந்து அந்த மண்ணோடு மண்ணாகும்.

எல்லாப் போர்க்களங்களும் இதே விதத்தில் தான் வரலாற்றின் பக்கங்களில் உறைந்து வெறும் வார்த்தையாகி எஞ்சுகின்றன.

ஆனால் இந்தப் போர்க்களம் வித்தியாசமானது. பெருங் கூட்டமாகப் பெண்கள், குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள். போரிட வந்தவர்கள் இல்லை. போரைத் தடுக்க வந்தவர்கள்.
சீறிச் சினந்து நிற்கும் ஒரு போர் வீரனின் காலைப் பிடித்துக் கொண்டு, போரிட வேண்டாம் என்று கதறுகிறாள் ஒருத்தி. அவள் இடுப்பில் குந்தியிருக்கும் குழந்தையும் தாயோடு சேர்ந்து குனிந்தபடி வெறிக்கிறது. இன்னொரு பெண் தன் பச்சிளம் சிசுவைத் தலைக்கு மேல் உயரத் தூக்கி, யுத்தம் வேண்டாம் வேண்டாம் என்றுகதறுகிறாள். மோத விரையும் கால்களுக்கு இடையே இன்னொருத்தி தரையில் மண்டியிட்டு அமர்ந்து யாரையோ,எல்லோரையுமோ கெஞ்சுகிறாள். அவள் பக்கத்தில் தவழும் குழந்தைகள்.

எல்லோருக்கும் நடுவே வெள்ளுடையில் ஓர் இளம்பெண் தேவதை போல் இரு கையையும் அகல விரித்தபடி,போதும், போதும் என்ற பாவம் முகத்தில் தெறிக்க நிற்கிறாள்.

பார்த்த மாத்திரத்தில் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் இந்தக் காட்சி இடம் பெறுவது ழாக் லூயி டேவிட்(Jacques-Louis David) என்ற பிரஞ்சு ஓவியர் வரைந்தது.

ஓவியக் கலைத்துறையில் புத்தலைப் போக்குகள் மலரத் தொடங்கிய ஆயிரத்து எழுநூறுகளின் இறுதியில் ஏற்பட்டமுதல் அலையான புதுக்கிய மரபியல் (Neoclassicism) பாணியில் அமைந்த இந்த ஓவியத்தின் பெயர்'சபைன் மகளிரின் குறுக்கீடு' (Intervention of the Sabine Women).

நியோகிளாசிசம் பற்றிப் பேசுவதற்கு முன், ஓவியத்தில் இடம் பெற்ற சபைன் மகளிர் பற்றிக் குறிப்பிடவேண்டும். ரோமாபுரி பற்றிய தொன்மப் புனைவு அது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரி மாநகரம் எழுந்தபோது, வேறு யாரும் குடி வரத் தயங்கியதாலோ என்னவோ (பழகிய இடத்தை விட்டுக் குடிபெயர யாருக்குத்தான் விருப்பம்?) நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்கச் சிறைப்பிடிக்கப் பட்ட குற்றவாளிகளை நிறையக் கொண்டு வந்து குடி அமர்த்தினார்களாம்.

ஆக அன்றைய ரோமாபுரி கிட்டத்தட்ட ஆண்களின் உலகம். பெண்கள் இல்லாத சமூகமாக அது அந்த, மிஞ்சிப்போனால் தலைமுறையோடு அழியும் அபாயம்.

ரோமாபுரிப் பேரரசுக்கு அடுத்து மலைவாழ் மக்களின் சிறு நாடான சபைன் இருந்தது. ரோமானியர்கள் அந்தஅரசிடம் தூது போய், சபைனியப் பெண்களை நாங்கள் மணந்து கொள்ள அனுமதி தாருங்கள். நாம் ஒன்று பட்டுவாழ்வோம் என்று கேட்டார்கள். சபைனியர்கள் ரோமானியர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

திரும்பிப் போன ரோமானியர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். அது -
தங்களுக்குப் பெண் கொடுக்க மறுத்த சபைனியர்களை ரோமானியர்கள் எதுவும் நடக்காததுபோல் சகஜமாக ஒரு விருந்துக்கு அழைத்தார்கள். நெப்த்யூன் தெய்வத்துக்கு விழா எடுக்க நடத்திய விருந்து அது.

அப்பாவி சபைனியர்கள் ஒட்டு மொத்தமாக ரோமாபுரிக்குள் திரண்டு வந்து விருந்துக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கும்போது, ரோமானிய இளைஞர்கள் விருந்துக்கு வந்த சபைனியக் கன்னியரை வலுக்கட்டாயமாகத் தூக்கிப்போய் விருந்தாக்கிக் கொண்டார்கள்.

போதை தெளிந்த சபைனியர்கள் கையாலாகாதவர்களாகத் திரும்பிப் போனபோது சிறைப்பிடிக்கப் பட்ட அவர்களின் பெண்களைப் பற்றிய துயரமும், நம்ப வைத்து ஏமாற்றிய ரோமானியர்கள் மேல் ஆத்திரமுமாகத் தளர்ந்து வலுவிழந்து நடந்தார்கள்.

அந்தத் தளர்ச்சி மாற, வலு திரும்ப எழ, இழந்ததை மீட்கப் படை நடத்திப் போக அவர்களுக்கு ஒரு வருடம் பிடித்தது.
ஆனால் அந்தக் கால இடைவெளியில் அவர்களின் மகளிர் ரோமானியர்களின் மனைவிகளாக, அவர்களின் அன்புக் குழந்தைகளின் அன்னையராக ஆகி இருந்தார்கள்.

ஒரு பக்கம் கொண்ட கணவர்கள். மற்றப் பக்கம் தந்தையரும், உடன் பிறந்தோரும். இருவரும் மோதிக்கொள்ள வருகிறார்கள். யார் தோற்றாலும் யார் வென்றாலும், இறுதி இழப்பு இந்தப் பெண்களுக்குத் தான்.

போரைத் தடுக்க அந்த சபைனியப் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளோடு போர்க் களத்தில் புகுந்து இரு தரப்பையும் வேண்டி வணங்கி நிற்க, அப்புறமென்ன சுபம் தான்.

கி.மு. 238-ல் ரோமானியர்களுக்கும் அவர்களின் அண்டை நாட்டாரான சபைனியர்களுக்கும் முதலில் சண்டையும் பிறகு சமாதானமுமாகிப் பின் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ரோம சாம்ராஜ்யமானது என்ற வரலாற்றின் அடித்தளத்தில் எழுப்பப் பட்ட தொன்மப் புனைவு இந்தக் கதை.

கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த புனைவை, கிறிஸ்துவுக்குப் பிந்திய பதினெட்டாம் நூற்றாண்டுக்கு எடுத்துப் போய், பிரஞ்சு ஓவியர் ழாக் லூயி டேவிட் ஓவியமாக அதை வரைந்தது ஏன்?

நியோகிளாசிசிசத்தின் ஆணிவேர்கள் அங்கு தான் தென்படுகின்றன.

நியோகிளாசிசிச அலை எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு மனித குல வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம்.
பாரம்பரிய வழி வந்த அரசுரிமையும், மத நிறுவனங்களின் ஆதிக்கமும் குறையத் தொடங்கிய நேரம் அது. பிரஞ்சுப் புரட்சி வெடிக்க வித்துக்கள் தூவப்பட்டு அவை முளைத்தெழுந்து விருட்சமாகிக் கிளை பரப்ப ஆரம்பித்தகாலம் அது.

மறுமலர்ச்சிக் காலத்தில் (கி.பி 1400 - 1600) அரசு சார்ந்தும், அதன் பின்னால் பார்க்-ரொகோகோ காலம் என்று குறிக்கப்படும் அடுத்த இருநூறு ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய மத நிறுவனங்களைச் சார்ந்தும்செயல்பட்ட ஓவியக்கலை, அந்தப் பாதிப்புகளிலிருந்தும் அவை தந்த பாதுகாப்பிலிருந்தும் நீங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.

சார்பு இல்லாததால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படச் சுதந்திரமும், அதே நேரத்தில் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது.

அந்த சிந்தனை நுண்கலையான ஓவியத்தில் ஏற்படுத்திய பல வகைப் போக்குகளில் ஒன்றுதான் புதுக்கிய மரபியல்.
நிகழ் காலம் அர்த்தமில்லாத வாழ்க்கையின், நிகழ்வுகளின் தொகுதி. கலாரூபமான பதிவுகளாக்க நிகழில் ஏதுமில்லை. எனவே புராதன காலத்துக்குத் திரும்புவோம். வரலாற்றை, தொன்மத்தைத் திரும்ப ஓவியமாகவும்,சிற்பமாகவும் வடிப்போம். தியாக மனப்பான்மை, வீரம், செய்யும் கடமையில் ஒருமித்த மன இயக்கம், எளிமை என்று நாம் இழந்த விழுமியங்களை அதன் மூலம் தேடுவோம்.

புதுக்கிய மரபியல் என்ற நியோகிளாசிசிசத்தை மூன்றரை வரிகளுக்கு மிகாமல் விளக்கச் சொன்னால் மேலே கண்டபடி சொல்லலாம்.

இந்தப் பாணி ஓவியம், சிற்பத்தை முதன்மைப்படுத்தியது. சிற்பம் போல் நுட்பமாக, வடிவத்திலும் வரைவிலும் செய்நேர்த்தி துலங்க ஓவியம் அமைய வேண்டும் என்றார்கள் நியோகிளாசிசிஸ்டுகள். மறுமலர்ச்சி ஓவியங்களின் பிரதான அம்சமான பிரகாசமும், ஒளிரும் வண்ணங்களும் முக்கியப்படுத்தப்படாமல், வடிவ ஒருமையே பிரதானமாக்கப்பட்டது.

சுய சிந்தனை அடிப்படையில் எழுந்த நியோகிளாசிசிசம், ஓவியத்தில் அதை வரைந்தவனின் வெளிப்பாட்டை(செல்·ப் எக்ஸ்ப்ரஷன்) வேண்டாமென்று ஒதுக்கியது விசித்திரமானது. படைப்பில் இடம்பெற்ற கருப்பொருளே அந்த வெளிப்பாட்டை வெளிக் கொண்டு வந்து விடும் என்று வாதிட்டனர் புதுக்கிய மரபியலார்.

'சபைன் மகளிரின் குறுக்கீடு' ஓவியத்தை வரைந்த நியோகிளாசிசிஸ்ட் ஓவியர் ழாக் லூயி டேவிட் அதை வரைந்து முடிக்க எடுத்துக் கொண்ட ஐந்து ஆண்டுகளில் வரலாறு துரிதமாக உருண்டு அவரைப் புரட்சியாளனிலிருந்து ராஜ விசுவாசியாக்கியது இதை விட விசித்திரமானது.

1748-ல் பிறந்த ழாக் லூயி டேவிட் இத்தாலியில் ஓவியம் பயின்று, நியோகிளாசிசிசத்தின் மூலக் கூறுகளைஉள்வாங்கிக் கொண்டு பிரான்சு நாட்டுக்குத் திரும்பிய 1780-ல் நாடாண்ட பதினாறாம் லூயி மன்னர் மேலும்,அவருடைய மனைவி மேரி அந்த்வானெத் மேலும் பிரஞ்சு மக்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள்.அரச குடும்பமும், பிரபுக்களும் எல்லா சலுகைகளும் வளங்களும் பெற்றுச் சுகபோகமாக வாழ்ந்திருக்க, சாமானியர்கள் பசியோடும் பட்டினியோடும் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.

தியாகம், வீரம், எளிமை என்ற நியோகிளாசிசிச சிந்தனைகளோடு பிரான்சு திரும்பிய ழாக் லூயி டேவிட்டை, பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற எழுச்சி மிகு அறைகூவல் பாதித்ததிச் வியப்பெதுவும் இல்லை.

வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான ரொபஸ்பியர் (Maximilien Robespierre) வழிநடத்திய பிரஞ்சுப் புரட்சி 1789-ல் வெடித்தபோது அதில் முக்கியமான பங்கெடுத்துப் பணியாற்றினார் ஓவியரான டேவிட்.

பதினாறாம் லூயி மன்னனையும் அவன் பட்டத்து ராணியையும் தலைவெட்டும் இயந்திரமான கிலட்டினில் தலைதுண்டித்துக் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்த பிரபல படைப்பாளிகளில் டேவிட்டும் ஒருவர்.

கிலட்டின் பதினாறாம் லூயியையும் மேரி அந்த்வானெத்தையும் மட்டும் தலை துண்டித்து விட்டு ஓயவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் தலைகளை வாங்கிய அபூர்வ சிந்தாமணியானது அது. அறுபட்டகடைசித் தலை பிரஞ்சு புரட்சியை முன்நின்று நடத்திய ரொபஸ்பியருடையது.

மற்றவர்களை எல்லாம் முகத்தை நிலம் பார்க்க வைத்துத் தான் கிலட்டின் தகடு பின் கழுத்தில் விழுந்து தலையைக் கொய்யும். ஆனால் ரொபஸ்பியருக்கு விசேஷ மரியாதையாக அவரை வானம் பார்க்க வைத்துச் சிரமறுத்தார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளாக இந்த தலைவெட்டிக் காலம் நீடித்தது. அப்போது அங்கங்கே செல்வாக்கு பெருகிய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கலகம் விளைவித்துக் கொடிருந்தார்கள்.

பிரஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து நடந்த இந்த உள்நாட்டுக் கலக காலத்தில், ழாக் லூயி டேவிட் தலை எந்தத்தம்பிரான் புண்ணியத்தாலோ தப்பிக்க, அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.

பால் பரஸ், ருழே துகாஸ் என்ற இரண்டு போட்டி அரசியல் தலைவர்களோடு கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த நெப்போலியன் பொனபர்த், அவர்களை ஓரம் கட்டிவிட்டுப் பிரஞ்சு சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டான் 1799-ல். வீரபாண்டிய கட்டபொம்முவைக் கும்பினியார் கயத்தாறில் தூக்கிட்டுக் கொன்ற வருடம்அது.

நெப்போலியன் பதவி ஏற்ற பிறகு ழாக் லூயி டேவிட் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். அதற்கு முன்கை எடுத்துச் செயல்பட்டவர் அவருடைய மாஜி மனைவி. ராஜ விசுவாசியான அந்தப் பெண்மணி டேவிட்டை விவாகரத்து செய்து விட்டுப் பிரியக் காரணமே டேவிட் புரட்சியாளனாக இருந்ததுதான்.

பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னும், அது நிகழும் போதும் டேவிட் பல நியோகிளாசிசிச ஓவியங்களை வரைந்துபுகழின் உச்சிக்குப் போனார். 'சாக்ரட்டீஸின் மரணம்', 'லெபல்தியரின் மரணம்', 'மாரெட்டின் மரணம்'என்று வரைந்து, மரணப் புனைவு ஓவியரான அவர் 'சபைன் மகளிர் குறுக்கீடு' என்ற மரண எதிர்ப்பு ஓவியத்தைவரையத் தொடங்கியது சிறையில் இருந்தபோது. அதாவது மாஜி மனைவியின் பாதிப்பு தொடங்கியபோது.(மனைவியாக இருந்தபோது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பிரிந்தவள், தோழியாக ஏற்படுத்திய பாதிப்பு அது)

சிறையில் இருந்து வெளியே வந்து ஓவியத்தை முடித்தபோது ஐந்து ஆண்டு கடந்திருந்தது. மாஜி மனைவி மறுபடிமனைவியானாள். 'சபைன் மகளிரின் குறுக்கீடு' ஓவியத்தை அவளுக்கு அன்புக் காணிக்கையாக்கிய ழாக் லூயிடேவிட் அவள் சொல் கேட்டுத் தானும் ராஜ விசுவாசியானார்.

அடுத்த ஐந்து வருடங்கள் அவர் நெப்போலியனின் ஆஸ்தான ஓவியராக வரைந்த ஓவியங்கள் - நெப்போலியன்,நெப்போலியன், நெப்போலியன் ..

ழாக் லூயி டேவிட்டின் நியோகிளாசிசிசம் நெப்போலியனில் முடிந்த கதை இதுதான்.

என்றாலும், நெப்போலியனைக் கால வெள்ளம் அடித்துப் போனது போல், டேவிட் வரைந்த 'சபைன் மகளிரின்குறுக்கீடு' ஓவியத்தை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாரீஸ் நகரத்தில் லொவர் அருங்காட்சியகத்தில் (Musee du Louvre, Paris) காட்சிக்குவைக்கப்பட்டிருக்கிறது அது.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது